ஞாயிறு, 17 ஜூலை, 2011

காஞ்சனை - புதுமைப்பித்தன்

1
     அன்று இரவு முழுவதும் எனக்குத் தூக்கம் பிடிக்கவேயில்லை. காரணம் என்னவென்று சொல்ல முடியவில்லை. மனசுக்குக் கஷ்டமும் இல்லை, அளவுக்கு மிஞ்சிய இன்பமும் இல்லை, இந்த மாதிpudu5ரித் தூக்கம் பிடிக்காமல் இருக்க. எல்லோரையும் போலத்தான் நானும். ஆனால் என்னுடைய தொழில் எல்லோருடையதும்போல் அல்ல. நான் கதை எழுதுகிறேன்; அதாவது, சரடுவிட்டு, அதைச் சகிக்கும் பத்திரிகை ஸ்தாபனங்களிலிருந்து பிழைக்கிறவன்; என்னுடையது அங்கீகரிக்கப்படும்  பொய்; அதாவது - கடவுள், தர்மம் என்று பல நாமரூபங்களுடன், உலக 'மெஜாரிட்டி'யின் அங்கீகாரத்தைப் பெறுவது; இதற்குத்தான் சிருஷ்டி, கற்பனா லோக சஞ்சாரம் என்றெல்லாம் சொல்லுவார்கள். இந்த மாதிரியாகப் பொய் சொல்லுகிறவர்களையே இரண்டாவது பிரம்மா என்பார்கள். இந்த நகல் பிரம்ம பரம்பரையில் நான் கடைக்குட்டி. இதை எல்லாம் நினைக்கப் பெருமையாகத்தான் இருக்கிறது. நாங்கள் உண்டாக்குவது போல், அந்தப் பிரமனின் கைவேலையும் பொய்தானா? நான் பொய்யா? திடீரென்று இந்த வேதாந்த விசாரம் இரவு சுமார் பன்னிரண்டு மணிப்போதுக்கு ஏற்பட்டால், தன்னுடைய ஜீரண சக்தியைப் பற்றி யாருக்குத்தான் சந்தேகம் தோன்றாது? "அட சட்!" என்று சொல்லிக்கொண்டு எழுந்து உட்கார்ந்தேன்.

     உட்கார்ந்தபடி எட்டினாற் போல மின்சார விளக்கைப் போடுவதற்கு வாக்காக வீட்டைக் கட்டி வைத்திருந்தான். போட்டேன். வெளிச்சம் கண்களை உறுத்தியது. பக்கத்துக் கட்டிலில் என் மனைவி தூங்கிக் கொண்டிருந்தாள். தூக்கத்தில் என்ன கனவோ? உதட்டுக் கோணத்தில் புன்சிரிப்பு கண்ணாம்பூச்சி விளையாடியது. வேதாந்த விசாரத்துக்கு மனிதனை இழுத்துக்கொண்டு போகும் தன்னுடைய நளபாக சாதுர்யத்தைப் பற்றி இவள் மனசு கும்மாளம் போடுகிறது போலும்! தூக்கக் கலக்கத்தில் சிணுங்கிக் கொண்டு புரண்டு படுத்தாள். அவள் மூன்று மாசக் கர்ப்பிணி. நமக்குத்தான் தூக்கம் பிடிக்கவில்லை என்றால், அவளையும் ஏன் எழுப்பி உட்கார்த்தி வைத்துக் கொள்ள வேண்டும்?

     உடனே விளக்கை அணைத்தேன். எனக்கு எப்போதும் இருட்டில் உட்கார்ந்துகொண்டிருப்பதில் ஒரு நிம்மதி. இருட்டோ டு இருட்டாய், நாமும் இருட்டும் ஐக்கியமாய், பிறர் பார்வையில் விழாமல் இருந்து விடலாம் அல்லவா? நாமும் நம் இருட்டுக் கோட்டைக்குள் இருந்து கொண்டு நம் இஷ்டம்போல் மனசு என்ற கட்டை வண்டியை ஓட்டிக் கொண்டு போகலாம் அல்லவா? சாதாரணமாக எல்லோரும் மனசை நினைத்த இடத்துக்கு நினைத்த மாத்திரத்தில் போகும் ரதம் என்று சொல்லுவார்கள். மனித வித்து அநாதி காலந்தொட்டு இன்று வரையில் நினைத்து நினைத்துத் தேய்ந்து தடமாகிவிட்ட பாதையில் தான் இந்தக் கட்டை வண்டி செல்லுகிறது. சக்கரம் உருண்டு உருண்டு பள்ளமாக்கிய பொடிமண் பாதையும் நடுமத்தியில் கால்கள் அவ்வளவாகப் பாவாத திரடுந்தான் உண்டு; ஒவ்வொரு சமயங்களில் சக்கரங்கள் தடம்புரண்டு திரடு ஏறி 'டொடக்' என்று உள்ளே இருக்கிறவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கிறதும் உண்டு; மற்றப்படி சாதுவான, ஆபத்தில்லாத மயிலைக் காளைப் பாதை. நினைவுச் சுகத்தில் இருட்டில் சிறிது அதிகமாகச் சுண்ணாம்பு தடவிவிட்டேன் போலும்! நாக்கு, சுருக்கென்று பொத்துக்கொண்டது. நான் அதைப் பொருட்படுத்துவதில்லை. இருட்டில் வெற்றிலை போடுவது என்றால், அதிலும் மனசை, கயிற்றை முதுகில் போட்டு விட்டுத்தானே போகும்படி விட்டுவிடுவது என்றால், இந்த விபத்துக்களையெல்லாம் பொருட்படுத்தலாமா? உள்ளங்கையில் கொட்டி வைத்திருந்த புகையிலையைப் பவித்தரமாக வாயில் போட்டுக் கொண்டேன்.

     சீ! என்ன நாற்றம்! ஒரேயடியாகப் பிணவாடை அல்லவா அடிக்கிறது? குமட்டல் எடுக்க, புகையிலையின் கோளாறோ என்று ஜன்னல் பக்கமாகச் சென்று அப்படியே உமிழ்ந்து, வாயை உரசிக் கொப்புளித்துவிட்டு வந்து படுக்கையின் மீது உட்கார்ந்தேன்.

     துர்நாற்றம் தாங்க முடியவில்லை, உடல் அழுகி, நாற்றம் எடுத்துப் போன பிணம் போல; என்னால் சகிக்க முடியவில்லை. எனக்குப் புரியவில்லை. ஜன்னல் வழியாக நாற்றம் வருகிறதோ? ஊசிக் காற்றுக் கூட இழையவில்லையே! கட்டிலை விட்டு எழுந்திருந்து ஜன்னலில் பக்கம் நடந்தேன். இரண்டடி எடுத்து வைக்கவில்லை; நாற்றம் அடியோடு மறைந்துவிட்டன. என்ன அதிசயம்! திரும்பவும் கட்டிலுக்கு வந்தேன். மறுபடியும் நாற்றம். அதே துர்க்கந்தம். கட்டிலின் அடியில் ஏதேனும் செத்துக் கிடக்கிறதோ? விளக்கை ஏற்றினேன். கட்டிலடியில் தூசிதான் தும்மலை வருவித்தது. எழுந்து உடம்பைத் தட்டிக் கொண்டு நின்றேன்.

     தும்மல் என் மனைவியை எழுப்பிவிட்டது. "என்ன, இன்னுமா உங்களுக்கு உறக்கம் வரவில்லை? மணி என்ன?" என்று கொட்டாவி விட்டாள்.

     மணி சரியாகப் பன்னிரண்டு அடித்து ஒரு நிமிஷம் ஆயிற்று.

     என்ன அதிசயம்! நாற்றம் இப்பொழுது ஒருவித வாசனையாக மாறியது. ஊதுவத்தி வாசனை; அதுவும் மிகவும் மட்டமான ஊதுவத்தி; பிணத்துக்குப் பக்கத்தில் ஏற்றி வைப்பது.

     "உனக்கு இங்கே ஒரு மாதிரி வாசனை தெரியுதா?" என்று கேட்டேன்.

     "ஒண்ணும் இல்லியே" என்றாள்.

     சற்று நேரம் மோந்து பார்த்துவிட்டு, "ஏதோ லேசா ஊதுவத்தி மாதிரி வாசனை வருது; எங்காவது ஏற்றி வைத்திருப்பார்கள்; எனக்கு உறக்கம் வருது; விளக்கை அணைத்துவிட்டுப் படுங்கள்" என்றாள்.

     விளக்கை அணைத்தேன். லேசாக வாசனை இருந்துகொண்டுதான் இருந்தது. ஜன்னலருகில் சென்று எட்டிப் பார்த்தேன். நட்சத்திர வெளிச்சந்தான்.

     லேசாக வீட்டிலிருந்த ஜன்னல், வாசல், கதவுகள் எல்லாம் படபடவென்று அடித்துக்கொண்டன. ஒரு வினாடிதான். அப்புறம் நிச்சப்தம். பூகம்பமோ? நட்சத்திர வெளிச்சத்தில் பழந்தின்னி வௌவால் ஒன்று தன் அகன்ற தோல் சிறகுகளை விரித்துக் கொண்டு பறந்து சென்று எதிரில் உள்ள சோலைகளுக்கு அப்பால் மறைந்தது.

     துர்நாற்றமும் வாசனையும் அடியோடு மறைந்தன. நான் திரும்பி வந்து படுத்துக் கொண்டேன்.
2

     நான் மறுநாள் விடியற்காலம் தூக்கம் கலைந்து எழுந்திருக்கும்போது காலை முற்பகலாகிவிட்டது. ஜன்னல் வழியாக விழுந்து கிடந்த தினசரிப் பத்திரிகையை எடுத்துக்கொண்டு வீட்டின் வெளிமுற்றத்துக்கு வந்து பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்தேன். கிரீச்சிட்டு ஆட்சேபித்துவிட்டு அது என்னைச் சுமந்தது.

     "ராத்திரி பூராவும் தூங்காமே இவ்வளவு நேரம் கழித்து எழுந்ததும் அல்லாமல் இப்படி வந்து உட்கார்ந்து கொண்டால் காப்பி என்னத்துக்கு ஆகும்?" என்று என் சகதர்மிணி பின்பக்கமாக வந்து நின்று உருக்கினாள். 'ஐக்கிய நாடுகளின் ஜரூர் மிகுந்த எதிர் தாக்குதல்கள் தங்குதடையில்லாமல் முன்னேறி வருவதில்' அகப்பட்டுக் கொண்ட ஜனநாயகத்திலும் உலக சமாதானத்திலும் உறுதி பிறழாத நம்பிக்கை கொண்ட எனக்குச் சற்றுச் சிரமமாகத்தான் இருந்தது.

     "அது உன் சமையல் விமரிசையால் வந்த வினை" என்று ஒரு பாரிசத் தாக்குதல் நடத்திவிட்டு எழுந்தேன்.

     "உங்களுக்குப் பொழுதுபோகாமே என் மேலே குத்தம் கண்டு பிடிக்கணும்னு தோணிட்டா, வேறே என்னத்தைப் பேசப் போறிய? எல்லாம் நீங்கள் எளுதுகிற கதையை விடக் குறைச்சல் இல்லை!" என்று சொல்லிக் கொண்டே அடுப்பங்கரைக்குள் புகுந்தாள்.

     நானும் குடும்ப நியதிகளுக்குக் கட்டுப்பட்டு, பல்லைத் துலக்கிவிட்டு, கொதிக்கும் காப்பித் தம்ளரைத் துண்டில் ஏந்தியபடி பத்திரிகைப் பத்திகளை நோக்கினேன்.

     அப்போது ஒரு பிச்சைக்காரி, அதிலும் வாலிபப் பிச்சைக்காரி, ஏதோ பாட்டுப் பாடியபடி, "அம்மா, தாயே!" என்று சொல்லிக் கொண்டு வாசற்படியண்டை வந்து நின்றாள்.

     நான் ஏறிட்டுப் பார்த்துவிட்டு இந்தப் பிச்சைக்காரர்களுடன் மல்லாட முடியாதென்று நினைத்துக் கொண்டு பத்திரிகையை உயர்த்தி வேலி கட்டிக் கொண்டேன்.

     "உனக்கு என்ன உடம்பிலே தெம்பா இல்லை? நாலு வீடு வேலை செஞ்சு பொளெச்சா என்ன?" என்று அதட்டிக் கொண்டே நடைவாசலில் வந்து நின்றாள் என் மனைவி.

     "வேலை கெடச்சாச் செய்யமாட்டேனா? கும்பி கொதிக்குது தாயே! இந்தத் தெருவிலே இது வரையில் பிடியரிசிக் கூடக் கிடைக்கவில்லை; மானத்தை மறைக்க முழத்துணி குடம்மா" என்று பிச்சைக்கார அஸ்திரங்களைப் பிரயோகிக்க ஆரம்பித்தாள்.

     "நான் வேலை தாரேன்; வீட்டோ டவே இருக்கியா? வயத்துக்குச் சோறு போடுவேன்; மானத்துக்குத் துணி தருவேன்; என்ன சொல்லுதே!" என்றாள்.

     "அது போதாதா அம்மா? இந்தக் காலத்திலே அதுதான் யார் கொடுக்கிறா?" என்று சொல்லிக்கொண்டே என் மனைவியைப் பார்த்துச் சிரித்து நின்றாள்.

     "என்ன, நான் இவளை வீட்டோ டே ரெண்டு நாள் வெச்சு எப்படி இருக்கான்னுதான் பாக்கட்டுமா? எனக்குந்தான் அடிக்கடி இளைப்பு இளைப்பா வருதே" என்றாள் என் மனைவி.

     "சீ! உனக்கு என்ன பைத்தியமா? எங்கேயோ கெடந்த பிச்சைக்காரக் களுதையை வீட்டுக்குள் ஏத்த வேண்டும் என்கிறாயே! பூலோகத்திலே உனக்கு வேறே ஆளே ஆம்பிடலியா?" என்றேன்.

     வெளியில் நின்ற பிச்சைக்காரி 'களுக்' என்று சிரித்தாள். சிரிப்பிலே ஒரு பயங்கரமான கவர்ச்சி இருந்தது. என் மனைவி வைத்த கண் மாறாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள். மனசு முழுவதும் அந்த அநாமத்திடமே ஐக்கியமாகிவிட்டது போல் இருந்தது.

     "முகத்தைப் பார்த்தா ஆள் எப்படி என்று சொல்ல முடியாதா? நீ இப்படி உள்ளே வாம்மா" என்று மேலுத்தரவு போட்டுக்கொண்டு அவளை உள்ளே அழைத்துச் சென்றாள்.

     உள்ளுக்குள்ளே பூரிப்புடன் அந்த மாய்மாலப் பிச்சைக்காரி பின் தொடர்ந்தாள். என்ன! நான் கண்களைத் துடைத்துக் கொண்டு அவள் பாதங்களையே பார்த்தேன். அவை தரைக்குமேல் ஒரு குன்றிமணி உயரத்துக்கு அந்தரத்தில் நடமாடின. உடம்பெல்லாம் எனக்குப் புல்லரித்தது. மனப் பிரமையா? மறுபடியும் பார்க்கும் போது, பிச்சைக்காரி என்னைப் புன்சிரிப்புடன் திரும்பிப் பார்த்தாள். ஐயோ, அது புன்சிரிப்பா! எலும்பின் செங்குருத்துக்குள் ஐஸ் ஈட்டியைச் செருகியதுமாதிரி என்னைக் கொன்று புரட்டியது அது!

     என் மனைவியைக் கூப்பிட்டேன். அவள் வீட்டுக்குள் வருவது நல்லதற்கல்ல என்று சொன்னேன். இந்த அபூர்வத்தை வேலைக்காரியாக வைத்துக்கொள்ளத்தான் வேண்டும் என்று ஒரேயடியாகப் பிடிவாதம் செய்தாள். மசக்கை விபரீதங்களுக்கு ஓர் எல்லை இல்லையா? என்னவோ படுஆபத்து என்றுதான் என் மனசு படக்குப் படக்கு என்று அடித்துக்கொண்டது. மறுபடியும் எட்டி அவள் பாதங்களைப் பார்த்தேன். எல்லோரையும் போல் அவள் கால்களும் தரையில்தான் பாவி நடமாடின. இது என்ன மாயப்பிரமை!

     தென்னாலிராமன் கறுப்பு நாயை வெள்ளை நாயாக்க முடியாது என்பதை நிரூபித்தான். ஆனால் என் மனைவி பிச்சைக்காரிகளையும் நம்மைப் போன்ற மனிதர்களாக்க முடியும் என்பதை நிரூபித்தாள். குளித்து முழுகி, பழசானாலும் சுத்தமான ஆடையை உடுத்துக் கொண்டால் யாரானாலும் அருகில் உட்காரவைத்துப் பேசிக் கொண்டிருக்க முடியும் என்பது தெரிந்தது. வந்திருந்த பிச்சைக்காரி சிரிப்பு மூட்டும்படிப் பேசுவதில் கெட்டிக்காரி போலும்! அடிக்கடி 'களுக்' 'களுக்' என்ற சப்தம் கேட்டது. என் மனைவிக்கு அவள் விழுந்து விழுந்து பணிவிடை செய்வதைக் கண்டு நானே பிரமித்து விட்டேன். என்னையே கேலிசெய்து கொள்ளும்படியாக இருந்தது, சற்றுமுன் எனக்குத் தோன்றிய பயம்.

     சாயந்தரம் இருக்கும்; கருக்கல் நேரம். என் மனைவியும் அந்த வேலைக்காரியும் உட்கார்ந்து சிரித்துப் பேசியபடி கதை சொல்லிக் கொண்டிருந்தார்கள். நான் முன்கூடத்தில் விளக்கேற்றிவிட்டு ஒரு புஸ்தகத்தை வியாஜமாகக் கொண்டு அவளைக் கவனித்தவண்ணம் இருந்தேன். நான் இருந்த ஹாலுக்கும் அவர்கள் இருந்த இடத்துக்கும் இடையில் நடுக்கட்டு ஒன்று உண்டு. அதிலே நான் ஒரு நிலைக் கண்ணாடியைத் தொங்கவிட்டு வைத்திருந்தேன். அவர்களுடைய பிம்பங்கள் அதிலே நன்றாகத் தெரிந்தன.

     "நீ எங்கெல்லாமோ சுத்தி அலஞ்சு வந்திருக்கியே; ஒரு கதை சொல்லு" என்றாள் என் மனைவி.

     "ஆமாம். நான் காசி அரித்துவாரம் எல்லா எடத்துக்கும் போயிருக்கிறேன். அங்கே, காசியில் ஒரு கதையைக் கேட்டேன்; உனக்குச் சொல்லட்டா?" என்றாள்.

     "சொல்லேன்; என்ன கதை?" என்று கேட்டாள் என் மனைவி.

     "அஞ்சுநூறு வருச மாச்சாம். காசியிலே ஒரு ராசாவுக்கு ஒத்தைக் கொரு மக இருந்தா. பூலோகத்திலே அவளெப்போல அளகு தேடிப் புடிச்சாலும் கெடெக்காதாம். அவளெ ராசாவும் எல்லாப் படிப்பும் படிப்பிச்சாரு. அவளுக்குக் குருவா வந்தவன் மகாப் பெரிய சூனியக்காரன். எந்திரம், தந்திரம், மந்திரம் எல்லாம் தெரியும். அவனுக்கு இவமேலே ஒரு கண்ணு. ஆனா இந்தப் பொண்ணுக்கு மந்திரி மவனெக் கட்டிக்கிடணும்னு ஆசை.

     "இது அவனுக்குத் தெரிஞ்சுப்போச்சு; யாருக்குத் தெரிஞ்சுபோச்சு? அந்தக் குருவுக்கு..."

     என்ன அதிசயம்! நான் அவள் சொல்லிக்கொண்டிருக்கும் கதையைக் கேட்டுக்கொண்டிருக்கிறேனா அல்லது கையில் உள்ள புஸ்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேனா? கையிலிருப்பது 'சரித்திர சாசனங்கள்' என்ற இங்கிலீஷ் புஸ்தகம். அதிலே வாராணசி மகாராஜன் மகளின் கதை என் கண்ணுக்கெதிரே அச்செழுத்துக்களில் விறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது. கையில் விரித்துவைத்த பக்கத்தில் கடைசி வாக்கியம், 'அந்த மந்திரவாதிக்கு அது தெரிந்துவிட்டது' என்ற சொற்றொடரின் இங்கிலீஷ் மொழிபெயர்ப்பு. மூளை சுழன்றது. நெற்றியில் வியர்வை அரும்பியது. என்ன, எனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா! பிரித்துப் பிடித்து வைத்திருந்த பக்கத்திலேயே கண்களைச் செருகியிருந்தேன். எழுத்துக்கள் மங்க ஆரம்பித்தன.

     திடீரென்று ஒரு பேய்ச் சிரிப்பு! வெடிபடும் அதிர்ச்சியோடு என் மனசை அப்படியே கவ்வி உறிஞ்சியது. அதிர்ச்சியில் தலையை நிமிர்த்தினேன். எனது பார்வை நிலைக் கண்ணாடியில் விழுந்தது. அதனுள், ஒரு கோர உருவம் பல்லைத் திறந்து உன்மத்த வெறியில் சிரித்துக் கொண்டிருந்தது. எத்தனையோ மாதிரியான கோர உருவங்களைக் கனவிலும், சிற்பிகளின் செதுக்கிவைத்த கற்பனைகளிலும் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த மாதிரி ஒரு கோரத்தைக் கண்டதே இல்லை. குரூபமெல்லாம் பற்களிலும் கண்களிலுமே தெறித்தது. முகத்தில் மட்டும் மோக லாகிரியை எழுப்பும் அற்புதமான அமைதி. கண்களிலே ரத்தப் பசி! பற்களிலே சதையைப் பிய்த்துத் தின்னும் ஆவல். இந்த மங்கலான பிம்பத்துக்குப் பின்னால் அடுப்பு நெருப்பின் தீ நாக்குகள். வசமிழந்து அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். தோற்றம் கணத்தில் மறைந்தது; அடுத்த நிமிஷம் அந்தப் பிச்சைக்காரியின் முகமே தெரிந்தது.

     "உன் பெயர் என்ன என்று கேட்க மறந்தே போயிட்டுதே" என்று மனைவி கேட்பது எனது செவிப்புலனுக்கு எட்டியது.

     "காஞ்சனைன்னுதான் கூப்பிடுங்களேன். கதேலெ வர்ற காஞ்சனை மாதிரி. எப்படிக் கூப்பிட்டா என்ன! ஏதோ ஒரு பேரு" என்றாள் பிச்சைக்காரி.

     என் மனைவியைத் தனியாக அங்கு விட்டிருக்க மனம் ஒப்பவில்லை. என்ன நேரக்கூடுமோ? பயம் மனசைக் கவ்விக்கொண்டால் வெடவெடப்புக்கு வரம்பு உண்டா?

     நான் உள்ளே போனேன். இருவரும் குசாலாகவே பேசிக் கொண்டிருந்தனர்.

     வலுக்கட்டாயத்தின் பேரில் சிரிப்பை வருவித்துக் கொண்டு நுழைந்த என்னை, "பொம்பளைகள் வேலை செய்கிற எடத்தில் என்ன உங்களுக்காம்?" என்ற பாணம் எதிரேற்றது.

     காஞ்சனை என்று சொல்லிக் கொண்டவள் குனிந்து எதையோ நறுக்கிக் கொண்டிருந்தாள். விஷமம் தளும்பும் சிரிப்பு அவளது உதட்டின் கோணத்தில் துள்ளலாடியது. நான் வேறு ஒன்றும் சொல்ல முடியாமல் புஸ்தக வேலியின் மறைவில் நிற்கும் பாராக்காரன் ஆனேன். மனைவியோ கர்ப்பிணி. அவள் மனசிலேயா பயத்தைக் குடியேற்றுவது? அவளை எப்படிக் காப்பாற்றுவது?

     சாப்பிட்டோ ம். தூங்கச் சென்றோம். நாங்கள் இருவரும் மாடியில் படுத்துக் கொண்டோ ம். காஞ்சனை என்பவள் கீழே முன்கூடத்தில் படுத்துக் கொண்டாள்.

     நான் படுக்கையில் படுத்துத்தான் கிடந்தேன். இமை மூட முடியவில்லை. எப்படி முடியும்? எவ்வளவு நேரம் இப்படிக் கிடந்தேனோ? இன்று மறுபடியும் அந்த வாசனை வரப்போகிறதா என்று மனம் படக்கு படக்கென்று எதிர்பார்த்தது.

     எங்கோ ஒரு கடிகாரம் பன்னிரண்டு மணி அடிக்கும் வேலையை ஆரம்பித்தது.

     பதினோராவது ரீங்காரம் ஓயவில்லை.

     எங்கோ கதவு கிரீச்சிட்டது.

     திடீரென்று எனது கைமேல் கூரிய நகங்கள் விழுந்து பிறாண்டிக் கொண்டு நழுவின.

     நான் உதறியடித்துக்கொண்டு எழுந்தேன். நல்ல காலம்; வாய் உளறவில்லை.

     என் மனைவியின் கைதான் அசப்பில் விழுந்து கிடந்தது.

     அவளுடையதுதானா?

     எழுந்து குனிந்து கவனித்தேன். நிதானமாகச் சுவாசம் விட்டுக் கொண்டு தூங்கினாள்.

     கீழே சென்று பார்க்க ஆவல்; ஆனால் பயம்!

     போனேன். மெதுவாகக் கால் ஓசைப்படாமல் இறங்கினேன்.

     ஒரு யுகம் கழிந்த மாதிரி இருந்தது.

     மெதுவாக முன் கூடத்தை எட்டிப் பார்த்தேன். வெளிவாசல் சார்த்திக் கிடந்தது. அருகிலிருந்த ஜன்னல் வழியாக விழுந்த நிலா வெளிச்சம் காலியாகக் கிடக்கும் பாயையும் தலையணையையும் சுட்டிக் காட்டியது.

     கால்கள் எனக்குத் தரிக்கவில்லை. வெடவெடவென்று நடுங்கின.

     திரும்பாமலே பின்னுக்குக் காலடி வைத்து நடந்து மாடிப்படியருகில் வந்தேன். உயரச் சென்றுவிட்டாளோ?

     விடுவிடு என்று மாடிக்குச் சென்றேன்.

     அங்கே அமைதி.

     பழைய அமைதி.

     மனம் தெளியவில்லை.

     மாடி ஜன்னலருகில் நின்று நிலா வெளிச்சத்தை நோக்கினேன்.

     மனித நடமாட்டம் இல்லை.

     எங்கோ ஒரு நாய் மட்டும் அழுது பிலாக்கணம் தொடுத்து ஓங்கியது.

     பிரம்மாண்டமான வௌவால் ஒன்று வானத்தின் எதிர் கோணத்திலிருந்து எங்கள் வீடு நோக்கிப் பறந்து வந்தது.

     வெளியே பார்க்கப் பார்க்கப் பயம் தெளிய ஆரம்பித்தது. என்னுடைய மனப்பிரமை அது என்று நிதானத்துக்கு வந்தேன்.

     ஆனால் கீழே!

     மறுபடியும் பார்க்க வேண்டும் என்ற ஆவல்.

     கீழே இறங்கினேன்.

     தைரியமாகச் செல்ல முடியவில்லை.

     அதோ! காஞ்சனை பாயில் உட்கார்ந்துதான் இருக்கிறாள். என்னைப் பார்த்துச் சிரித்தாள். விஷச் சிரிப்பு. உள்ளமே உறைந்தது. நிதானமாக இருப்பதைப் போலப் பாசாங்கு செய்து கொண்டு, "என்ன, தூக்கம் வரவில்லையா?" என்று முணுமுணுத்துக்கொண்டே மாடிப் படிகளில் ஏறினேன்.

     அப்பொழுது சாம்பிராணி வாசனை வந்ததா? வந்தது போலத் தான் ஞாபகம்.

     நான் எழுந்திருக்கும்போது நெடுநேரமாகிவிட்டது.

     "என்ன, வரவரத்தான், இப்படித் தூங்கித் தொலைக்கிறக; காப்பி ஆறுது!" என்று என் மனைவி எழுப்பினாள்.

     இருட்டுக்கும் பயத்துக்கும் ஒளிவிடம் இல்லாத பகலிலே எல்லாம் வேறு மாதிரியாகத்தான் தோன்றுகிறது. ஆனால், மனசின் ஆழத்திலே அந்தப் பயம் வேரூன்றிவிட்டது. இந்த ஆபத்தை எப்படிப் போக்குவது?

     தன் மனைவி சோரம் போகிறாள் என்ற மனக்கஷ்டத்தை, தன்னைத் தேற்றிக் கொள்வதற்காக வேறு யாரிடமும் சொல்லிக் கொள்ள முடியுமா? அதே மாதிரிதான் இதுவும், என்னைப் போன்ற ஒருவன், ஜன சமுதாயத்துக்காக இலக்கிய சேவை செய்கிறேன் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு மனப்பால் குடித்துக் கொண்டிருக்கும் ஒருவன், "ஸார், எங்கள் வீட்டில் புதுசாக ஒரு பேய் குடிவந்துவிட்டது. அது என் மனைவியை என்ன செய்யுமோ என்று பயமாக இருக்கிறது; ஆபத்தைப் போக்க உங்களுக்கு ஏதாவது வழி தெரியுமா?" என்று கேட்டால், நான் நையாண்டி செய்கிறேனா அல்லது எனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா என்றுதான் சந்தேகிப்பான். யாரிடம் இந்த விவகாரத்தைச் சொல்லி வழி தேடுவது? எத்தனை நாட்கள் நான் பாராக் கொடுத்துக் கொண்டிருக்க முடியும்?

     இது எந்த விபரீதத்தில் கொண்டு போய் விடுமோ? சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தேன். என் மனைவிக்கு அந்தப் புதிய வேலைக்காரி என்ன சொக்குப்பொடி போட்டுவிட்டாளோ? அவர்கள் இருவரும் மனசில் துளிக்கூடப் பாரமில்லாமல் கழித்துவிட்டார்கள்.

     இன்றைப் பார்த்துப் பகலும் இராத்திரியை விரட்டிக் கொண்டு ஓடி வந்தது. இவ்வளவு வேகமாகப் பொழுது கழிந்ததை நான் ஒரு நாளும் அநுபவித்ததில்லை.

     இரவு படுக்கப் போகும்போது என் மனைவி, "காஞ்சனை, இன்றைக்கு மாடியிலேயே நமக்கு அடுத்த அறையில் படுத்துக் கொள்ளப் போகிறாள்" என்று கூறிவிட்டாள். எனக்கு மடியில் நெருப்பைக் கட்டியது போல ஆயிற்று.

     இது என்ன சூழ்ச்சி!

     இன்று தூங்குவதே இல்லை. இரவு முழுவதும் உட்கார்ந்தே கழிப்பது என்று தீர்மானித்தேன்.

     "என்ன படுக்கலியா?" என்றாள் என் மனைவி.

     "எனக்கு உறக்கம் வரவில்லை" என்றேன். மனசுக்குள் வல் ஈட்டிகளாகப் பயம் குத்தித் தைத்து வாங்கியது.

     "உங்கள் இஷ்டம்" என்று திரும்பிப் படுத்தாள். அவ்வளவுதான். நல்ல தூக்கம்; அது வெறும் உறக்கமா?

     நானும் உட்கார்ந்து உட்கார்ந்து அலுத்துப் போனேன்.

     சற்றுப் படுக்கலாம் என்று உடம்பைச் சாய்த்தேன்.

     பன்னிரண்டு மணி அடிக்க ஆரம்பித்தது.

     இதென்ன வாசனை!

     பக்கத்தில் படுத்திருந்தவள் அமானுஷ்யக் குரலில் வீரிட்டுக் கத்தினாள். வார்த்தைகள் ரூபத்தில் வரும் உருவற்ற குரல்களுக்கு இடையே காஞ்சனை என்ற வார்த்தை ஒன்றுதான் புரிந்தது.

     சட்டென்று விளக்கைப் போட்டுவிட்டு அவளை எழுப்பி உருட்டினேன்.

     பிரக்ஞை வரவே, தள்ளாடிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தாள். "ஏதோ ஒன்று என் கழுத்தைக் கடித்து ரத்தத்தை உறிஞ்சின மாதிரி இருந்தது" என்றாள் கண்களைத் துடைத்துக் கொண்டு.

     கழுத்தைக் கவனித்தேன். குரல்வளையில் குண்டூசி நுனி மாதிரி ரத்தத்துளி இருந்தது. அவள் உடம்பெல்லாம் நடுங்கியது.

     "பயப்படாதே; எதையாவது நினைத்துக் கொண்டு படுத்திருப்பாய்" என்று மனமறிந்து பொய் சொன்னேன்.

     அவள் உடம்பு நடுநடுங்கிக் கொண்டிருந்தது. மயங்கிப் படுக்கையில் சரிந்தாள்.      அதே சமயத்தில் வெளியில் சேமக்கலச் சபதம் கேட்டது.

     கர்ணகடூரமான குரலில் ஏதோ ஒரு பாட்டு.

     அதிகாரத் தோரணையிலே, "காஞ்சனை! காஞ்சனை!" என்ற குரல்.

     என் வீடே கிடுகிடாய்த்துப் போகும்படியான ஓர் அலறல்! கதவுகள் படபடவென்று அடித்துக் கொண்டன.

     அப்புறம் ஓர் அமைதி. ஒரு சுடுகாட்டு அமைதி.

     நான் எழுந்து வெளிவாசலின் பக்கம் எட்டிப் பார்த்தேன்.

     நடுத்தெருவில் ஒருவன் நின்றிருந்தான். அவனுக்கு என்ன மிடுக்கு!

     "இங்கே வா" என்று சமிக்ஞை செய்தான்.

     நான் செயலற்ற பாவை போலக் கீழே இறங்கிச் சென்றேன்.

     போகும்போது காஞ்சனை இருந்த அறையைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. நான் எதிர்பார்த்தபடியேதான் இருந்தது. அவள் இல்லை.

     தெருவிற்குப் போனேன்.

     "அம்மா நெத்தியிலே இதைப் பூசு. காஞ்சனை இனிமேல் வர மாட்டாள். போய் உடனே பூசு. அம்மாவை எளுப்பாதே" என்றான்.

     விபூதி சுட்டது.

     நான் அதைக் கொண்டுவந்து பூசினேன், அவள் நெற்றியில். அது வெறும் விபூதிதானா! எனக்குச் சந்தேகமாகவே இருக்கிறது. அவன் கையில் சேமக்கலம் இல்லை என்பதும் ஞாபகம் இருக்கிறதே!

     மூன்று நாட்கள் கழிந்துவிட்டன.

     காலையில் காப்பி கொடுக்கும்போது, "இந்த ஆம்பிளைகளே இப்படித்தான்!" என்றாள் என் மனைவி. இதற்கு என்ன பதில் சொல்ல?
கலைமகள், ஜனவரி 1943
flow1

அன்றிரவு-புதுமைப்பித்தன்

அரிமர்த்தன பாண்டியன்
     நான்மாடக்கூடலில் அன்றிரவு மூவர் உறங்கவில்லை. அதில் ஒருவன் சொக்கேசன். மனிதனுடன் மனிதனாக நடமாடி, அவர்களுடைய சுகதுக்கங்களில் பகிர்ந்து கொண்டு, வளையல் விற்று, சாட்சி சொல்லி, சங்கப் புலவர்கள் கருவமடக்கி, வாழையடி வாழையாக ஆண்டு வரும் பாண்டியர்களுக்கு மந்திரியாய், நல்லாசிரியனாய், தெய்வமாய்க் கைகொடுத்துவரும் சொக்கேசன், அழகன் உறங்கவில்லை. பிறவா நெறி காட்டுவானுக்கு உறக்கம் ஏது? ஊண் ஏது? அடுத்த நாள் ஓர் அரசன்; pp பாண்டியன், அரிமர்த்தன பாண்டியன், இமையா நாட்டம் பெற்றவன் போல, சயனக்கிருஹத்தில் மஞ்சத்தில் அமர்ந்து நினைவுக் கோயிலில் நடமாடிவந்தான். அறிவை அன்று நடைபெற்ற நிகழ்ச்சிகள் சரக்கூடம் போட்டன; நடைபெற்ற நிகழ்ச்சிகள் வாலுடன் தலையிணைத்துக் காட்டி நகரின் வரம்பமைத்த பாம்பு மாதிரி அறிவு சக்கரவியூகம் போட்டது.
     பிரகாசம் கண்ணைத் குத்தித் தூக்கத்திற்கு ஊறு விளைக்காமல் இருப்பதற்காக அமைத்த நீலமணி விளக்கு, அவனது மார்பில் கிடந்த ஆரத்தில் பட்டு, சற்று அசையும்போது மின்னியது. கை விரல் மோதிரத்தை நெருடிக்கொண்டே சாளரத்தின் வழியாகத் தெரிந்த சிறிய துண்டு வான்வெளியை நோக்கிக் கொண்டிருந்தன. அன்றிரவு கிருஷ்ண பட்சத்துச் சந்திரன்; அது உதயமாக இன்னும் இரண்டு சாமம் கழிய வேண்டும். சாளர வரம்புக்கு உட்பட்ட தாரகைகள் ஒன்று இரண்டு, தீர்க்கதரிசிகளின் அறிவு வரம்புக்குள் அடைப்பட்ட பிரபஞ்ச ரகசியங்கள் ஒரு குறிப்பிட்ட கோலத்தில் அமைந்து, மனித உயிர் நாடும் வேட்கைக்குச் சாந்தி தரும் சமயம் என்ற ஒரு குறிப்பிட்ட கோலத்தைக் காட்டுவது போல, ஜோதிட விற்பன்னர்கள் வகுக்காத ராசி மண்டலங்களை அமைத்துக் காட்டியது.
     சாளரத்தின் உச்சியிலிருந்து, வானத்துக்கு நேர் கோட்டில் ஆணியடித்து வைரம் பதித்தது மாதிரி, அல்ல, மஞ்சள் கலந்து சிவப்புக்கல் பதித்த மாதிரி, ஒரே ஒழுங்கில் அமைந்து நின்று அசைந்து கண் சிமிட்டியது. மன்னன் மனம், அன்றைய நிகழ்ச்சிகளை ஒரு விநாடி மறந்து தாரகைக் கூட்டத்தில் லயித்தது. மனம் ஒன்ற ஒன்ற, இருட்டுக்குள் இருளுக்கு வரம்பு போட்ட மாதிரி கோபுரமும் கலசமும் திரண்டு உருவாயின; அதன் மத்தியில் அந்த விளக்குகள். என்ன, நம்மூர்க் கோயிலைக் கூடவா, நாம் தினம் கும்பிட்டு மன உளைச்சல் என்ற சுமையை இறக்கிவைக்கும் சுமைதாங்கியான கோயிலைக் கூடவா மறந்துவிட்டோ ம் என்று நினைக்கிறான் பாண்டியன். தன்னை அறியாமல் மீசையை நெருடிக்கொண்டே சிரிக்கிறான். கோபுரத்தைத் தாண்டி ஒண்டித் தெரியும் துண்டு வானத்தில் ஒரு நட்சத்திரமும் கூடச் சிரிக்கிறது.
     'முப்பது வயசுக்குள் எவனாவது திடீரென்று மாறிப் பரம் ஒன்றே என்ற நினைப்புடன் நடமாட முடியுமா? குதிரை வாங்கப் போன மந்திரி திரும்பிவரும்பொழுது, விழுந்து கும்பிடு என்று என் மனசே சொல்லும்படி எப்படி மாறிவிட முடியும்? கொண்டு போன பணத்தை என்ன செய்தான்? விரயம் செய்து போகத்தில் ஆழ்வதென்றால் அவன் உடம்பு அதைக் காட்டியிருக்குமே.'
     அரிமர்த்தனன் மனசிலே அன்று பிற்பகல் பட்டிமண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் நினைவுக்கு வருகின்றன.
     அமாத்தியன் திருவாதவூரன், பகல் முழுவதும் கால் கடுக்க நடுவெயிலில் நின்று கல் சுமந்து கசையடிபட்டதன் சோர்வு சற்றும் காட்டாமல், வந்தபோது பூத்து அலர்ந்த புன்சிரிப்புடன் நிற்கிறான். அரசன் அரிமர்த்தன பாண்டியன் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கின்றான்.
     "அமாத்தியரே, குதிரைகளுக்குக் கொடுத்தனுப்பிய தொகை எங்கே?"
     "அவனைத் தவிர இவ்வுலகில் கொடுப்பவர் யார்? கொள்பவரார்?"
     "வாதவூரரே, அப்படியானால் பணம் வாங்கவில்லை என்று மறுக்கிறீரா?"
     "குதிரை வரும் என்று சொல்கிறேன்."
     "குதிரையைப் பற்றி நீர் கவலைப்பட வேண்டாம். பணத்தை என்ன செய்தீர், சொல்லிவிடும்; உம்மை மன்னித்துவிடுகிறேன்."
     "அரசே, வாதவூரர் கொண்டு சென்றது அரசாங்கப் பணம்; அதை விரயம் செய்யத் தங்களுக்குக் கூட உரிமை கிடையாது என்பதைத் தாங்கள் எத்தனை முறை இந்த வாதவூரர் முன்னிலையிலேயே சொல்லியிருக்கிறீர்கள்; மன்னிப்பது என்றால் பாண்டியன் தனது ஆட்சியை அழிப்பது என்பதே பொருள்" என்று இடைமறிக்கிறார் ருத்திரசாத்தனார் என்ற மந்திரி.
     "பணம் வந்துவிட்டால் போதுமா? சமயத்தில் குதிரைகள் கிடைக்காததனால் நாம் எவ்வளவு ஆபத்தான நிலையில் இருந்தோம்? சோழன் திரட்டிய சேனை நம்மீது விழுந்திருந்தால் நாடு என்ன கதியாகும்? களப்பிரர்கள் சோழநாட்டைச் சூறையிடாதிருந்தால் இன்று மீன் கொடியில் ரத்தக்கறைகள் அல்லவா படிந்திருக்கும்? தோல்வி என்பது நமக்கு இல்லை. சொக்கேசன் உள்ளவரை, பாண்டியன் உள்ளவரை, அந்நியன் தலை மண்ணில் உருளத்தான் செய்யும்; இருந்தாலும்..." என்கிறார் ஏனாதியான பகைக்கூற்றச் சித்திரனார்.
     "வாதவூரரே, என்ன சொல்லுகிறீர்? தொகை எங்கே?" என்கிறான் அரிமர்த்தனன்.
     "கொடுத்தவன் வாங்கிக் கொண்டான்; குதிரைகள் வரும்" என்கிறார் வாதவூரர்.
     "அரசே, வாதவூரருக்கு வயது முப்பதுதான். திருக்கோவையாரைப் பாடியவர் என்பதற்காக, அவரை நாம் சிறிது காலம் பார்க்காமல் இருந்துவிட்டதற்காக, ஜீவன்முக்தராகிவிட்டார் என்று நினைப்பது தவறு. சங்கரனார் நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே என்ற நாடு இது. சங்கரருக்கே அப்படியென்றால் வாதவூரருக்கு மட்டும் என்ன இளக்காரம்?" என்கிறார் ருத்திரசாத்தனார்.
     "வாதவூரரே, என்ன சொல்லுகிறீர்? சித்தர்கள் போலப் பரிபாஷையில் பேசி ராஜாங்க நேரத்தைக் கழிக்க வேண்டாம். குதிரைகள் வரும் என்கிறீரே; எப்போது வரும்?"
     வாதவூரன் கண்கள் ஏறச் செருகிவிட்டன. நின்ற நிலையிலேயே உள்ளோடு ஒன்றிவிட்டான்.
     உதடுகள், "குதிரைகள் - குதிரைகள் - குதிரைகள்..." என முணு முணுக்கின்றன.
     பாண்டியன் மனசிலும், "குதிரைகள், குதிரைகள், குதிரைகள்" என்ற வார்த்தைகள் எதிரொலிக்கின்றன.
     பட்டிமண்டபத்துக்கு வெளியே சடபடவென்று ஆர்ப்பாட்டமான சத்தம். காவலர்கள் இருவர் ஓடி வருகிறார்கள். "குதிரைகள் வந்து விட்டன! அரசே குதிரைகள் வந்துவிட்டன!" என்று நமஸ்கரிக்கின்றனர்.
     "என்ன, குதிரைகளா! எங்கே?" என்று எழுந்திருக்கின்றான் மன்னன். சபையும் திரண்டு எழுந்திருக்கிறது. வீரக்கழல் முழங்க, அரசன் மிடுக்குடன் வாசலுக்குப் போகிறான். மந்திரி பிரதானிகள் பின் தொடர்கிறார்கள். பட்டிமண்டபத்திலே 'குதிரைகள் குதிரைகள்' என்று தம்மை மறந்து ஜபிக்கும் வாதவூரரையும் சிலைகளையும் தவிர யாரும் இல்லை.
     குதிரைகள் தாம் எத்தனை! பத்து அக்குரோணிக்குப் போதுமானவை; அவ்வளவும் வெள்ளை. குதிரை நோட்டம் தெரிந்த கணக்காயர்கள் சுற்றிச் சுற்றிப் பார்க்கிறார்கள்; ஒரு சுழி இருக்க வேண்டுமே. அத்தனையும் உயர்ந்த ஜாதிக் குதிரைகள்.
     குதிரைப் பாகன் தான் கண்கொள்ளாக் காட்சி. அவனை அழைத்துச் சென்று அப்படியே முடிசூட்டிவிடலாமா என்று கூட நினைத்தான் அரிமர்த்தனன். என்ன அசட்டுத்தனமான நினைப்பு! அவன் துருஷ்கனா, யவனனா, சோனகனா? கண்களிலேதான் அம்மம்ம, என்ன பயங்கரம்! சாட்டையைக்கொண்டு சிமிட்டாக் கொடுக்கிறான். அத்தனை குதிரைகளும் அணிவகுத்து நிற்கின்றன!
   "பெற்றுக்கொண்டு சீட்டைக் கொடும்; போகவேண்டிய வழி கணக்கில் அடங்காது" என்கிறான் குதிரைப் பாகன். குரலில் இனிமையும் பயங்கரமும் கலந்திருந்தன.
     அரசன் முறிச்சீட்டில் கையெழுத்திட்டுத் தருகிறான். பாகன் வாங்கிக் கொண்டு வணக்கங்கூடச் செய்யாமல் போய்விடுகிறான்.
     மன்னனும் மந்திரிப் பிரதானிகளும் பட்டிமண்டபத்துக்குள் திரும்ப வருகிறார்கள். வாதவூரன் முகத்தில் சோகம் தேங்க, "நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து நான் நடுவே, வீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன்" என்று தழுதழுத்தபடி உருகி நிற்கிறார்.
     "வாதவூரரே, என்னை மன்னிக்க வேண்டும்; நான் ராஜ்யத்தைச் சுமக்கிறவன்." "அரசே, நான் உலகின் துயரத்தை, வேதனையைச் சுமக்கிறவன்."
     "வாதவூரரே, அப்படி மனம் நொந்துகொள்ளக் கூடாது. தாங்கள் பழையபடி எனக்கு அமைச்சராகவே இருக்க வேண்டும்; தாங்கள் இல்லாவிட்டால் இத்தனை குதிரைகள் கிடைக்குமா?"
     "அமைச்சன் மருத்துவனைப் போல இருக்கவேணும் என்பதை நான் தங்களுக்குச் சொல்ல வேண்டுமா?" என்கிறார் ருத்திரசாத்தனார்.
     "பகையை விரட்டப் படைப்பலம் வேண்டாமா?" என்கிறார் ஏனாதி.
     அரிமர்த்தனன் மனசு மறுபடியும் அந்தக் குதிரைகள் மீது, அந்த வெள்ளைக் குதிரைகள் மீது சவாரி செய்கின்றன. பகைவர்கள் தலைமீது நடமிடும் குதிரைகள். வாதவூரன் கொடுத்த குதிரைகள் அல்லவா? என்ன அறிவு, என்ன தூய்மை! தெய்வாம்சமாக, தெய்வமாகக் குதிரைப் பாகனைப் போலவே நின்றானே...
     நடுச்சாமத்தைப் புள்ளியிடச் சங்கு விம்முகிறது, அலறுகிறது, முழங்குகிறது. அதன் ஓசையும் மடிகிறது.
     அது என்ன சத்தம், தனி நரி ஊளையிடுகிற மாதிரி! அதன் குரல் ஒடுங்கும் சமயத்தில் ஆயிரம் ஆயிரமாக நரிகள் ஊளையிடுகின்றன. நான்மாடக்கூடலில் நரிகளா? குதிரைப்பந்தி இருக்கும் திசையிலிருந்து அல்லவா கேட்கிறது! அரிமர்த்தனன் எழுந்து நிலாமுற்றத்துக்குச் செல்லுகிறான். காதுகளை ஈட்டியிட்டுக் குடைவது போன்ற இரைச்சல். இருட்டில் கண்கள் துழாவுகின்றன. இருட்டைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை.
     மன்னவன் வீரக்கழல் ஒலிக்க, உத்தரீயம் தரையில் புரள, மறுபடியும் சயனக்கிருஹத்தில் நுழைகிறான். மஞ்சத்தருகில் சாய்த்து வைத்திருந்த உடைவாளுடன் அறையைவிட்டு விரைகிறான். வாசலில் தூக்கமும் மருட்சியும் கண்களில் தேங்க, குழலும் மேலாக்கும் சரிய, துவண்ட நடையில் விளக்கெடுத்து முன் செல்லுகிறார்கள் பணிப் பெண்கள். அந்த மங்கிய ஒளியில் தான் அவர்கள் என்ன அழகு!
     அரசன் அரண்மனை வாசலில் வந்து நிற்கிறான். "குதிரை லாயத்தில் நரிகள் புகுந்துவிட்டன, அரசே, அவை நகருக்குள்ளும் பிரவேசித்துவிடும் போலத் தெரிகிறது..." என்று கும்பிடுகிறார்கள் குதிரைப் பந்தியின் காவலர்கள்.
     மூன்று ஜோடிக் கழல் ஒலிகள் இருட்டில் படிப்படியாக மங்கி ஓய்ந்தன.
     திடீரென்று இருட்டையே கூர்ங் கத்திகொண்டு கிழிப்பதுபோல ஒரு தனி அலறல். பீதியில் வெருண்டு உயிருக்குப் போராடி மடியும் குதிரையின் குரல் அது. அதைத் தொடர்ந்து ஆயிரம் பேய்கள் கெக்கலிகொட்டி நகைப்பது போன்ற நரி ஊளை. போர்க்களத்தில் கவந்தங்கள் ஆடுவதையும் அச்சிற்று விழும் தேரில் அடிபட்டு நசுங்கும் குதிரைகள் யானைகள் போடும் கூச்சல்களையும் கேட்டவன் தான் அரிமர்த்தன பாண்டியன். ஆனால் அன்று கேட்ட அந்தத் தனிக் குதிரையின் சப்தம், அவனிடம் அபயம் கேட்டு ஏமாந்து உயிர்விடுவது போல இருந்தது. நான்மாடக்கூடலில் இந்த இருட்டுப் பேய்க்கூச்சல் ஜனங்களை எழுப்பிவிட்டிருக்கக் கூடும். அவர்கள் இரட்டைத் தாழிட்டு வீட்டுக்குள் அமர்ந்துவிட்டனர்.
     குதிரைக் கொட்டடியின் முன் காவலர்கள் கதவைத் தாழிட்டுக் காவல் காத்து நின்றனர்.
    "உள்ளே மருந்துக்குக்கூட ஒரு குதிரை இல்லை. நமது லாயத்தில் நின்ற பழைய குதிரைகளைக்கூட ஒன்று பாக்கிவிடாமல் கொன்று கிழித்துவிட்டன" என்றார்கள் காவலர்கள்.
     "புதுக் குதிரைகள்?"
     "அவை மறைந்த மாயந்தான் தெரியவில்லை. உள்ளே நரிகள் நின்றுதான் ஊளையிடுகின்றன. அவை வெளியே வந்துவிடாமலிருக்க, கதவை இழுத்துச் சாத்தி வைத்திருக்கிறோம். நாங்கள் சாத்து முன்பே பெரும் பகுதி வெளியே ஓடிவிட்டன."
     "அரசே, குதிரைப் பந்திக்குள் நரிகள் ஊளையிடுகின்றனவே; புதுக் குதிரை ஒன்று கூட இல்லையே" என்று பக்கத்தில் ஒரு குரல் கேட்டது.
     அரசன் திரும்பிப் பார்க்கிறான். அமாத்தியர் ருத்திரசாத்தனார் நின்றுகொண்டிருந்தார்.
     "ஆமாம். புதுக் குதிரைகளைக் காணவில்லையாம்" என்றான் அரிமர்த்தனன்.
     "நானும் அப்படித்தான் எதிர்பார்த்தேன். தங்கள் மந்திரியின் சித்து விளையாட்டாக இருக்கலாம். நீங்கள் கவனித்தீர்களோ, குதிரைகள் வந்தபோது அவனது நிலையை? நான் வரும்போதே மீண்டும் அவரைக் கைது செய்யும்படி உத்திரவிட்டுவிட்டு வந்தேன்."
     "சீ! அப்படி இருக்காது. மேலும் நீதி வகுக்க நாம் யார்?"
     "அரசே, தாங்களுமா?"
     "குதிரைப் பாகன் எங்கு மறைந்தான் என்பதுதான் தெரியவில்லை. நேற்று நமது கோயில் ஆயிரக்கால் மண்டபத்தில் சென்று படுத்ததைத் தான் சிலர் பார்த்ததாகத் தெரிகிறது. ஒற்றர்கள் கிரகித்த தகவல் இதுதான்" என்றது மற்றொரு குரல். ஏனாதி பகைக்கூற்றச் சித்திரனார் தாம்.
     "பாகனைப் பிடித்தால் காரியம் தெரியும்."
இடைவெட்டு
     அடியார்க்கு நல்லார்: நான் தான் அப்பொழுதே சொன்னேனே; குதிரைகள் நிச்சயமாக வரும் என்று? எனக்குத் தெரியாதா வாதவூரனை.
     சேனாவரையர்: வாதவூரன் பொய்யன் என்று நான் எப்பொழுதும் சொன்னதுண்டா? சமயத்துக்கு வராத குதிரைகள் இனி வந்து என்ன, வராமல் என்ன? இப்பொழுது வெகு சிரேஷ்டமான பரிகள் கிடைத்தாலும் அவை நரிகளுக்குத்தான் சமம். மானம் கெட்டுப்போய் அரசனும் அவற்றை ஏற்றுக் கொண்டானே!
     இளம்பூரணர்: புரை தீர்ந்த நன்மை பயக்கும் என்றால் எதுவும் பொய்யே அல்ல. இன்று அரசன் ஏற்றவை நரிகளாகவே இருந்தாலும் அவை பரிகளே. வாதவூரனுக்கு வயசு முப்பது என்பதற்காக வாயில் வந்தபடி எல்லாம் பேசுவதா?
     ஒற்றன்: குதிரைகள் கொண்டுவந்தானே, அவனை நீங்கள் எங்காவது கண்டீர்களா?
     அடியார்க்கு நல்லார்: சொக்கேசன் ஆலயத்து வசந்த மண்டபத்துக்குள் போய் உட்கார்ந்தான். நான் என் கண்களால் கண்டேன்.
     சேனாவரையர்: நான் பார்க்கும்பொழுது அவன் வசந்த மண்டபத்தில் இருந்தான் என்று சொல்லும். அவன் இப்பொழுது எங்கும் இருக்கலாம். அவனது கழுத்தில் கிடந்த மறுவைப் பார்த்தீர்களா? ஆலகால விஷம் மாதிரி அல்லவா இருந்தது? உன்மத்தன் போல் அல்லவா, நிதான புத்தியுடன் நடந்துகொள்ளச் சிரமப்படும் உன்மத்தன் போல் அல்லவா, அவன் விழித்தான்?
     இளம்பூரணர்: மறு இருக்கிற இடத்தில் இருந்தால் எல்லாருக்கும் அதிருஷ்டந்தான். அவன் அதிருஷ்டசாலிதான் என்பது நிச்சயமில்லை. வாதவூரன் நிச்சயமாக அதிருஷ்டசாலிதான்.
2
வாதவூரர்
     வாதவூரன் மனசும் அறிவும் தட்டுமறித்து விளையாடின. யாருக்கு யார் பதில் சொல்லுகிறார்கள் என்ற நினைப்பின்றி யாரோ மனசில் சொன்னதை, தாம் நாவால் சொன்னதாகவே வாதவூரருக்குப்பட்டது. குதிரைகள் வாங்க வேண்டும் என்ற நினைப்பே அற்றுப் போகும்படி தம்மை இழுத்து உட்கார்த்திவிட்ட பெரியார் தம்மிடம் என்னத்தைக் கண்டுவிட்டார் என்பதுதான் முடிவில்லாப் புதிராக அவரை மலைக்க வைத்தது.
     கல்லால நீழலில் அமர்ந்த தட்சிணாமூர்த்தத்துக்கு, கண்கூடாகக் கண்டு, ஸ்பரிசித்துப் பேசக்கூடிய ஒரு ரூபம் இருக்குமாகில் அது அவர்தாம். என்னை ஆட்கொள்வதற்காக அம்மையப்பனே அப்படி வந்தானோ! சீ! நான் யார்? எனக்குத் தகுதி என்ன? மனசில் அவன்மீது நாட்டம் இருந்துவிட்டால் போதுமா? கால் எடுத்து வைக்கமுடியாமல், அறிவுதான் அடிக்கு நூறு வேலிகள் கட்டுகிறதே, அப்படிப்பட்ட அறிவு, என்னை ஆட்கொண்டு என்னை அளந்து நிற்கும்போது, அவனால்தான் வர முடியுமா, என்னால்தான் அவனிடம் போக முடியுமா?
     பாண்டியனிடம் சமத்காரமாகப் பேசிவிட்டதால் நான் செய்த காரியம் சரியாகிவிடுமா? அவன் கொடுத்தானாவது! அவன் வாங்கிக் கொண்டானாவது! அவன் அரிமர்த்தனனாக வந்து கொடுத்த பொழுது அரிமர்த்தனனாக நிற்கும் அவனிடம் கணக்குக் காட்டுவதை விட்டு, வேதாந்தம் பேசி என்னை நான் பொய்த்துக் கொண்டேனே! என்னை விட நெஞ்சறி கள்வன் எவன்? என்னையும் நம்பி, பணத்தைக் கொடுத்தானே பாண்டியன்! பாண்டியன் பணம். பாண்டியன் பணம் கரையும் பொழுது காலம் நின்றதே; களனே அழிந்ததே. அந்த பெரியவரை நான் திரும்பவும் பார்க்க வேண்டுமே அவர் அருகில் இருந்தால், தாய் மடியில் இருப்பது போலல்லவா இருந்தது? அவர் என்னிடம் என்ன சொன்னார்? என்னத்தைத்தான் சொல்லவில்லை? அவர் சொன்னதை வேதமும் வேதாந்திகளும் சங்கரனும் சொல்லத் தான் செய்திருக்கிறார்கள். அவர் சொன்னதன் நுட்பம் வார்த்தைக்குள் இல்லையே. குரலிலா? கண்ணிலா? அவர் எதைக் கொண்டு என்னை இழுத்து விட்டார்? எனக்குத் தெரிந்ததைத் தான் சொன்னார். ஆனால் தெரிந்தது என நான் நம்பி இருந்ததற்கு எவ்வளவு உள்ளுறை கொடுத்துவிட்டார்! "தாமே குதிரைகள் வரும்; நீ உன் குதிரைகளை அடக்கக் கற்றுக் கொள்" என்றாரே சிரித்துக் கொண்டு! அப்பொழுது பாண்டியனும் அவனுடைய குதிரைகளும் அவனுடைய குதிரை வேட்கையும் இந்தப் பிரபஞ்ச லீலையில் எவ்வளவு அற்பமாக, துச்சமாகப் பட்டன; நமது பார்வைக்குள் படவேண்டாத ஒன்றாகப் படும்படி செய்துவிட்டாரே! நானா பணத்தை எடுத்துக் கொடுத்தேன்? இந்தப் பிரபஞ்சமே எடுத்துக் கொடுத்தது. அதற்குப் பாண்டியன் என்னை வெயிலில் நிறுத்த வேண்டும், கசையடி கொடுக்க வேண்டும், கண்ணைப் பிடுங்க வேண்டும், யானையை விட்டு என் தலையை இடற வேண்டும்? இவையெல்லாம் அற்பத்துக்கு அற்பமான காரியங்கள். பாண்டியனது குதிரை வேட்கை மாதிரி பிரபஞ்சத்தின் பார்வையில் படவேண்டாத ஒன்று. என்னுடைய கட்சியும் பாண்டியன் கட்சி போன்றதுதான். மதுரை அதிருஷ்டம் பெற்ற ஊர்தான். பாண்டியநாடு அதிருஷ்டம் பெற்ற நாடுதான். என்னை எப்படியாவது நீதியின் ஆதிக்கத்திலிருந்து பாதுகாப்பதற்காக என்ன என்ன பாடு பட்டான்! அவனுக்குக் குதிரையைப் பற்றிக்கூட அக்கறை இல்லை போல் இருக்கிறது. நீதி என்ற ஒன்று திருப்தியடையும்படி நான் பதில் தந்துவிட்டால் என்னைப் பாதுகாத்து மறுபடியும் இந்த மந்திரி உத்தியோக விலங்கை மாட்டிவிடுவதில் அவனுக்கு என்ன ஆசை! அரிமர்த்தனனும் அதிருஷ்டசாலிதான். என் உயிருக்கு உயிரான ருத்திரசாத்தனும் ஏனாதியும் சத்திரவைத்தியர்கள் போல அல்லவா நடந்துகொள்ளுகிறார்கள்! மனித வம்சம் அநாதி காலந்தொட்டு இன்றுவரை, இனிமேலும், அறுகு போலப் படர்ந்து கொண்டே இருக்க, கண்களைக் கட்டிக்கொண்டு நடக்கும் நீதியின் பின்புறமாக, தம் மனசைச் செப்புக் கோட்டைக்குள் சிறை செய்து நடந்தார்களே, அவர்கள் அல்லவா மந்திரிகள்! மந்திரிகள் என்று உலகத்தில் வேடமிட்டால் மந்திரியாகவே நடிக்க வேண்டும். இடையிலே வேஷத்தைக் கலைத்துக் கொள்ளலாமா? அது மனுதர்மமாகாது; உயிர்த் தருமம். உயிர்த் தருமத்துக்கு அரசனது பட்டிமண்டபத்தில் இடங்கொடுக்க முடியாது? கொடுத்தால் பட்டி மண்டபத்தில் வௌவாலும் குறுநரியும் கொண்டாடி நடக்குமே...      என்ன
      குதிரைகளா? பாண்டியனுடைய பணியாளர்கள் அல்லவா வந்து சொல்லுகிறார்கள்? குதிரைகள்! குதிரைகள் வந்துவிட்டனவோ? குதிரைகளாவது வருவதாவது! பணம் போன திக்கில் குதிரைகள் ஏது? உன்னை ஆட்கொண்ட ஐயன், அன்று கல்லாலின் அடியில் உன்னையே உருக்கிவிட்டவன், உன்னைக் காப்பாற்றக் குதிரைகளைக் கொண்டு வந்து விட்டானா? என்ன ஆபத்து! எனக்காக, என் பொய்க்காக, என்னுடைய நிலையில்லா மனசுக்காக, என்னுடன் சேர்ந்து தெய்வமே, என்னுடைய குருதேவனே, அந்தப் பொய்யை நிலைநாட்டத் துணிந்தானா? நான் கொடுக்காத தொகைக்குக் குதிரைகளா? எனக்காக, என்னுடைய அற்ப ஜீவனைப் பற்றுவதற்காக, சகல லோகங்களுமே திரண்டு நின்று எனது பொய்யை நிலைநாட்ட வருவதா? களங்கமற்ற தர்மமானது என்னுடைய சிற்றறிவின் கொடுக்கல் வாங்கல்களின் அற்ப நடத்தைகளுக்கு, அகந்தைக்குத் துணை வருவதா? உலகத்தையே பொய்ப்பிக்கும் பொய்யை உண்டாக்கிய நான் அதமன் அல்லவா? சர்வேசுவரனுடைய லீலை என்னுடைய பொய்க்கும் துணை நின்று அதை மெய்ப்பிக்க அதல பாதாளத்தில் இறங்குமாகில் அது... அது... எனது நா எழவில்லையே...!
     வாதவூரரின் உடலிலிருந்து விலங்குகள் கழற்றப்படுகின்றன. அவருக்குப் பழைய மரியாதைகள் செய்யப்படுகின்றன. ஆனால் அவை மெய்யான பாரவிலங்குகளாக ஊனையும் உயிரையும் உணர்வையும் அதற்குப் பின்புறமாக உள்ள மகாசூட்சுமமான கரணங்களின் சேர்க்கைக் கோப்பையும் அழுத்தின. அவரது நெஞ்சு உலர்ந்தது, வறண்டது, சுழன்றது, பொங்கியது, குமுறியது; சுழித்து நுரைத்துக் கொப்புளித்துப் பொய்ம்மை என்னும் வேதனையைக் கக்கி விக்கித் தடுமாறியது. அவருடைய வேதனை உலகத்தின் வேதனை ஆயிற்று. மதுரை மூதூரின் வேதனையாக உருவெடுத்தது, பெருக்கெடுத்தது. பிரவாகமாகச் சுழித்துக் குறியற்றுக் குறிக்கோள் அற்று விம்மிப் புடைத்து ஓடியது. கரைகள் என்ற பிரக்ஞை இல்லாமலே மதுரை மூதூரை நனைத்தது, முழுக்கியது, ஆழ்த்தியது. பஞ்சணை மெத்தையில் அமர்ந்திருந்தது வாதவூரன் உடல். அவருடைய வேதனை உலக வியாபகமாக, மதுரையையும் அதற்கும் அப்பால் உள்ள அண்டங்களையும் தன்னுள் ஆக்கியது...
     நடுநிசியில் ருத்திரசாத்தனுடைய சேவகர்கள் அவருடைய உடலில் விலங்கிட்டனர். விலங்குகள் ஏறின என்ற உணர்வும் அற்றுப் போன சமயம் அது. வேதனை வெள்ளம் அவரையும் அவரது பிரபஞ்சத்தையும் அமுக்கித் தன்னுள் ஆக்கித் தடந்தெரியாமல் செய்துவிட்டது.
*இடைவெட்டு*
     சேனாவரையர் : வையை நதியிலே வெள்ளம் இப்படி வந்தது என்று சொன்னால் நம்புகிறவர்கள் யார்? சில சமயங்களில் கண்ணால் காணும் விஷயங்கள் கூட நிஜமா என்ற சந்தேகம் தோன்றுகிறது. நீர் அந்தப் பக்கமாக ஒரு கூடை மண்ணை அள்ளிப் போடும்.
     இளம்பூரணர் : பரிகள் நரிகளுக்குச் சமம் என்றீரே. உமக்கு யக்ஷிணி உபாசனை உண்டோ ? சொன்ன மாதிரி பாண்டியன் குதிரை லாயத்திற்குள் நரிகள் எப்படிப் புகுந்தன? தலையாலங்கானத்துப் போரில் கவந்தங்கள் ஆடினவாம். கூளிகளும் பேய்களும் கூழ் அட்டனவாம். அன்று கேட்ட பேரிரைச்சல் கூட இன்றைய நரி ஒன்றின் சத்தத்துக்கு ஈடாகாதே. அலறல் கால பாசம் போல் அல்லவா உயிரை நாடித் தடவியது! நரிச் சத்தம் கேட்டே நகரத்தில் சாவுக்குக் கணக்கு இல்லையாம்.
     அடியார்க்கு நல்லார் : பேசிக்கொண்டே நிற்காதீர். முழங்கால் பரியந்தம் தண்ணீர் சுற்றுவது தெரியவில்லை? இன்று வையையில் வெள்ளம் எப்படி உண்மையோ அப்படி நரிகளும் உண்மை. இவை கண்ணுக்குத் தெரிந்தவைகள். இவற்றிற்கும் மேலாக ஏதோ ஒன்று, ஆதிகாரணமான ஒன்று...
     ஒற்றர் : ருத்திரசாத்தன் உத்தரவுப்படி வாதவூரனை விலங்கிட்டு விட்டார்கள். அவனைப் பிடித்தால் போதாது. குதிரைப் பாகனையும் பிடிக்க வேண்டும்.
     மூவரும் : மன்னவன் ஆக்ஞை அல்ல அது. அவன் அப்படி உத்தரவு போடமாட்டான். ஐயோ, வெள்ளம் பொங்குகிறதே! நுரைகள் புரள்வதைப் பாருங்கள். சிவனுடைய சிரிப்பு மாதிரி...
3
சொக்கன்
     ஆலவாய்மெய்யன், உலகத்தைத் தன்வசம் இழுக்கும் சொக்கன் விளையாடினான். ஜீவாத்மாவின் வேதனையை உணராது விளையாடினான். அங்கயற்கண்ணியின் கண்ணில் பாசமும் கன்னத்தில் குழிவும் தோன்ற அவன் விளையாடினான். பெரியவராக வந்து, பெரிய ஞானோபதேசம் செய்வதுபோலப் பாவனை செய்து, தெரிந்ததையே சொல்லி, ஏற்கனவே தன் பாசத்தில் சிக்கிய ஜீவனை இன்னும் ஒரு பந்தனம் இட்டு வேடிக்கை பார்த்தான். ஈசன் விளையாடினான். வாதவூரன் அவனுடைய விளையாட்டுப் பொம்மையானான். ஈசனுக்குப் பிரபஞ்சமே வாதவூரனாயிற்று. பிரபஞ்சத்துக்கு உடைமையான அவனது பார்வை வாதவூரன் மீது மட்டும் விழுந்தது. பிரபஞ்சமும் அண்டபகிரண்டமும் அனந்தகோடி ஜீவராசிகளும் யோக நித்திரை போன்ற தாமஸ் நித்திரையில் ஆழ்ந்துள்ள நிலைப்பொருள்களும் ஏகோபித்து ஏற்றுச் சுமக்க வேண்டிய அவனது பார்வை அத்தனையையும் விட்டு அதில் ஒன்றான மகாநுட்பமான வாதவூரன் என்ற தோற்றத்தின் மீது, ஓர் உருவ வரம்புக்கு உட்பட்ட தனிச் சாகையின் மீது விழுந்தால் அது சுமக்குமோ?
     ஆமாம், அதனால் தான் வாதவூரன் நெஞ்சிலே வேதனை பிறந்தது. சொக்கன் திடுக்கிட்டான். விளையாட்டு விபரீதமாயிற்று. அவன் மனசையும் அந்த வேதனை கவ்வியது. அங்கயற்கண்ணியின் கண்கள் வாளையைப் போலப் புரண்டு சிரித்தன. கன்னங்கள் குழிவுற்றன. கோவைக் கனிக்கு நிறமும் மென்மையும் கற்பிக்கும் அவள் அதரங்கள் மலர்ந்தன. கொங்கைகள் பூரித்தன. காம்புகள் விம்மின. செல்வி சிரிக்கத் தொடங்கிவிட்டாள். அண்ணல் தன் செயல் கண்டு, பித்தாடும் சொக்கன் வேதனை கொண்டு சிரிக்கலானான். சிரிப்பு நாபிக் கமலத்திலிருந்து கொப்புளித்துப் பொங்கியது.
     ஈசன் மனசிலோ வேதனை. ஈசன் வாதவூரனாகிவிட்டான். அவன் துயரம் இவன் துயரமாகியது. ஜீவனுடைய பொறுப்புக்குள் உட்பட்டு, அதன் அற்பத்திலும் அற்பமான கொடுக்கல் வாங்கல் பேரங்களின் சிக்கலை நன்குணர்ந்து அதன் சுமைகளைத் தாங்கலானான். ஈசன் கழுத்துத் தள்ளாடியது. என்ன சுமை! என்ன பாரம்! கண்கள் ஏறச் செருகின.
     அவனது வேதனையைக் கண்டு அங்கயற்கண்ணி சிரிக்கிறாள். அண்டபகிரண்டமும் ஏகோபித்து அவளுடன் சேர்ந்து ஈசனைப் பார்த்துச் சிரிக்கின்றன.
     வாதவூரனாக ஈசன் வேதனை கொண்டான். அவன் மனம் என்ற சர்வ வியாபகமான காலம் கொல்லாத சர்வ மனம் நைந்தது. குமுறியது. கொப்புளித்தது. வாதவூரனாகக் கிடந்து வெம்பியது. குதிரை எனக்காட்டி ஏமாற்றி வந்துவிட்ட செயலுக்காக தானும் அந்த மனிதனைப் போல சிட்சை பெற்றால்தான் ஆறும்; வாதவூரன் தன் அருகில் வந்தால், அவனருகில் தான் இருக்க லாயக்கு என்று நினைத்தாள்.
     வேதனை சுமந்த கழுத்துடன் ஆலவாய்க் கர்ப்பக் கிருகத்திலிருந்து வெளிவந்தது ஓர் உருவம். ஈசன் வெளிவந்தான். சுற்றுமுற்றும் பார்த்தான். எங்கே பார்த்தாலும் வெள்ளம். மதுரை மூதூரை ஊர் என்று அறிய முடியாதபடி ஆக்கிவிட்டது வெள்ளம். ஈசன் நடந்தான். ஈசன் சிரித்தான். ஈசன் வெள்ளத்தில் நீந்தி விளையாடி முக்குளித்துக் கும்மாளி போட்டுக்கொண்டிருந்தான்.
     அங்கயற்கண்ணி சிரித்தாள். வெள்ளம் இன்னும் உக்கிரமாக நுரை கக்கிப் பாய்ந்தது.
     மனித வம்சம் துயரத்திலும் வேதனையிலுமே ஒன்றுபட்டு வரும். தன்னை அறியாமலே முக்திநிலை எய்தும். அன்றிரவு அவ்வூரின் நிலை அது. யானையும் காளையும் மனிதனும் மதிலும் மண்ணும் அரசனும் ஆண்டியும் அன்று வெள்ளத்தைத் தடுக்க, மறிக்க, தேக்கி நகரத்தைக் காப்பாற்ற, காரிருட்டில் அருகில் இருப்பவன் என்ன செய்கிறான் என்பதை அறியாமல் மண்வெட்டிப் போட்டுப் போட்டு நிரப்பினர். மண் கரைந்தது. மறுபடியும் போட்டனர். கரைந்தது. மறுபடியும் போட்டனர்.
     அன்றிரவு இரண்டு ஜீவன்கள் வெவ்வேறான துயரத்தில் வாடின. வாதவூரன் தன் பொய்யை நிலைநாட்டிய தெய்வத்தின் கருணையைச் சுமக்க முடியாமல் வேதனைப்பட்டான். மண் வெட்டி வெட்டிப் போடும் அனந்தகோடி ஜனங்கள் முயற்சியை அவனது வேதனை கரைத்தது. உழைத்து உழைத்துச் சோர்வடைகிறவர்களுக்குப் பசியாற்ற ஒரு கிழவி, பந்தமற்ற நாதியற்ற கிழவி பிட்டு அவித்து அவித்துக் கொட்டி விற்று வருகிறாள். அவள் கிழவி. அவளுக்கு நாதி இல்லை. பந்தம் இல்லை. பிட்டும் பிட்டுக் குழலுந்தான் பந்தம். தணிக்கை பண்ணிவரும் கணக்கர்கள் பசி போக்கப் பிட்டுக்காரியிடம் வந்தார்கள். அவளது அடுப்பில் எரிந்த நெருப்பில் கொஞ்சம் எடுத்து அவளது வயிற்றில் கொட்டிவிட்டுப் போனார்கள். மதுரைவாசிகள் எல்லாரும் கரைக்கு மண் போடவேணுமாம். அவளது பங்குக்கும் தச்சிமுழம் நாலு அளந்து போட்டிருக்கிறதாம். அவள் என்ன செய்வாள்? பிட்டுக் குழலைப் பார்ப்பாளா? அடுப்பைப் பார்ப்பாளா? அந்த இருட்டில் ஆள் தேடிப் போவாளா?
     இருட்டிலே "ஆச்சீ" என்ற குரல் கேட்டது. அதிலே எக்களிப்பும் பரிவும் கலந்திருந்தன. வேதனை வெள்ளத்தில் முக்குளித்த ஈசன் குரல் அல்லவா?
     "யாரப்பா, புட்டு வேணுமா?" என்று கேட்டாள் ஆச்சி.
     "என்ன ஆச்சி, புட்டா அவிக்கிறாய்? புட்டு நன்றாக இருக்குமா?" என்கிறான் ஈசன்.
     "என்னப்பா, இப்படி வா. உன்னை வெளிச்சத்தில் நல்லாப் பார்க்கட்டும். என் பேரன் மாதிரி இருக்கியே; வா இப்படி உட்காரு. உன் பங்கை நிரப்பிவிட்டியா? எனக்கு நாலு மொளம் அளந்திருக்காங்களாம். நீதான் ரெண்டு கூடை மண்ணை போடேன். உனக்குக் கோடி புண்ணியம் உண்டு" என்றாள் கிழவி.
     "எனக்கு என்ன கொடுப்பாய் ஆச்சி?"
     "என்னிடம் காசு பணம் ஏது? இப்பவரை சாப்பிட்டவங்க கணக்குச் சொல்லிவிட்டு போயிட்டாங்க. உனக்கு வேணும்னா, புட்டுத் தாரேன்."
     "ஆச்சி, அப்படியென்றால் நீ ரொம்ப ஏழையா?"
     "இதென்ன கூத்தா இருக்கு! உங்க ஊர்லே பணக்காரங்களா புட்டுச் சுட்டுப் பொளைக்கிறாங்க?" என்று சிரித்தாள் கிழவி. நாலு புறமும் நரிகள் ஊளையிடும் வனாந்தரத்தில் சிக்கிக்கொண்ட ஜீவனின், நிர்க்கதியாகத் தவிக்கும் உயிரின், துயரம் அந்தச் சிரிப்பிலே இழையோடியது.
     "நீயோ பரம ஏழை. எனக்கோ பசி சொல்லி முடியாது. போனாப் போகிறது. புட்டு உதிர்ந்து போனால், அதை மட்டும் எனக்கு எடுத்து வைத்திருந்து கொடு. நான் போய் உன் பங்குக்கு மண் போடுகிறேன். ஆனால் எனக்குப் பசி அதிகம். ஒரு கூடை போட்டால் உடனே ஓடி வருவேன்."
     "இந்தா..."
     "இப்ப வேண்டாம் ஆச்சி. போட்டுவிட்டு வருகிறேன்..."
     ஈசன் மறுபடியும் வெள்ளத்தில் முக்குளித்து விளையாடினான். கரையேறினான். மறுபடியும் தண்ணீரில் குதிக்க ஆசை. ஆனால் பிட்டு ருசி நாக்கைச் சுழற்றியது. ஒரு கூடை மண் எடுத்துப் போட்டான்.
     பாதிவெள்ளம் படக்கென்று வற்றியது. ஆனால் ஜலம் மனித வெள்ளம் இட்ட மண் கரைமேல் மோதித் தத்தி அலம்பி வழிந்து கொண்டிருந்தது.
     "ஆச்சீ, ஒரு கூடை போட்டுவிட்டேன். பசிக்கிறது. புட்டுப்போடு."
     "பேரப்பிள்ளை, தெய்வமேதான் உன்னை இங்கே அனுப்பியிருக்கு. நீயும் அதிட்டக்காரந்தான். நீ போனதுலே இருந்து எடுக்கிற புட்டு எல்லாம் உதுந்துதான் போகிறது. இதோ பார், எத்தனை பேர் காத்து உட்கார்ந்திருக்கிறார்கள்."
     "அது கெடக்கட்டும். இந்த முந்தித் துணியிலே புட்டெப் போடு. நேரமாச்சு. மண்ணைப் போட்டு கரையை அடைக்க வேண்டாமா?"
     "ஆமாம், ஆமாம். நேரமும் விடியலாச்சு. ராசா வந்தா..."
     "ஆமாம், ஆமாம்."
     ஈசன் ஒரே அமுக்கில் பிட்டை விழுங்கி விட்டான். என்ன ருசி! பேரின்பம்! ஒரே ஓட்டமாக ஓடி, கூடையை விட்டெறிந்துவிட்டு, வெள்ளத்தில் குதித்து விளையாடினான்.
     அசுரப் பசி போலச் சுழித்தோடும் வெள்ளத்தில் மீன்போலப் புரண்டு, முழுகி, முக்குளித்து விளையாடினான். வெள்ளத்தில் படம் விரித்துச் சீறிக்கொண்டு நீந்திச் செல்லும் நாக சர்ப்பம் மாதிரி எதிர்த்து நீந்துவான். ஆனந்த வெள்ளத்தில் மிதக்கும் யோகியைப் போலச் சுகாசனமிட்டு வெள்ளத்தின் போக்கில் மிதந்து வருவான். திரும்பவும் வாலடித்துத் திரும்பும் முதலையைப் போலக் கரை நோக்கி வருவான். பிறகு மீன்கொத்திப் புள் மாதிரி கைகளைத் தலைக்குமேல் வீசிக் கோபுரம் போலக் குவிய நீட்டிக் கொண்டு உயரப் பாய்ந்து தலை குப்புற ஜலத்தைக் கிழித்துக் கொண்டு மறைந்துவிடுவான். ஜனங்கள் செத்தானோ என்று பயப்படும்போது மறுகரையில் தலை தெரியும். பிறகு சீறிவரும் பாம்பு மாதிரி நீந்தித் திரும்புவான்.
     வெளிச்சம் வர ஆரம்பித்தது. வெள்ளத்தின் பீதி குறைய, ஜனங்களும் கரைகளில் நின்று வேடிக்கை பார்த்தார்கள்.
     சூரியனுடைய முதல் கிரணங்கள் வெள்ளத்தின் நுரைகளில் வானவில்லிட்டன. அரிமர்த்தன பாண்டியனுடைய மணிமுடி மீதும் பட்டத்து யானையின் வைரமிழைத்த முகபடாம்மீது பட்டுத் தெறித்து மின்னி விளையாடின.
     அரசன் கரையோரமாகப் பட்டத்து யானைமேல், ஜனங்களிட்ட கரையைப் பார்த்துக் கொண்டு, கணக்கர்கள் கணக்கு ஒப்பிக்க, வந்து கொண்டிருந்தான். தூரத்திலே அவன் கண்ணில் ஒரு பகுதி மட்டும் உடைத்துக் கொண்டு வெள்ளம் பாய்வது தெரிந்தது. மீசை துடிக்க அந்த இடத்துக்கு யானையை விரட்டி ஓட்டும்படி சொல்லுகிறான். பாகன் அங்குசத்தினால் குத்துக் குத்தி, செவியின் புறத்தில் விரல்களால் இடிக்கிறான். அடுத்த கணம் யானை அந்த இடத்துக்கு வந்து நிற்கிறது.
     அரிமர்த்தன பாண்டியன் தரையில் குதிக்கிறான்.
     மேல்மூச்சு வாங்க ஓடி வந்த கணக்கர்கள் அவசர அவசரமாக ஏடுகளைப் புரட்டி, "பிட்டு வாணிச்சி பங்கு" என்கிறார்கள்.
     கூடியிருந்த ஜனக் கும்பல் "தண்ணீரில் கும்மாளி போடுகிறவன் கடமை" என்கிறது.
     அரசன் கைதட்டிச் சைகை செய்து கரைக்கு வரும்படி அழைக்கிறான்.
     ஈசன் நாகசர்ப்பம் போலக் கரைக்கு நீந்தி வந்தான். கரையேறி ஈரம் சொட்டச் சொட்ட நிற்கிறான்.
     கோபாவேசமாக, "ஏன், மண்ணைப் போடாமல் பொழுதைக் கழிக்கிறாய்? சோம்பேறி!" என்று கேட்கிறான் அரசன்.
     ஈரச் சிகையை அண்ணாந்து உலுப்பிக்கொண்டு ஈசன் வாய்விட்டு அசட்டுச் சிரிப்பு சிரித்தான். கண்டத்தில் நனைந்த மறு சூரிய ரேகை பட்டு மின்னியது. ஈசன் சிரித்தான்.
     அரசன் கோபித்தான். கூட்டத்தை விலக்குவோர் வசம் இருந்த பொற்பிரம்பை வெடுக்கெனப் பிடுங்கி ஓங்கி ஓர் அடி கொடுத்தான். பொற்பிரம்பு ஈசன் முகத்திலும் நெஞ்சிலும் ரத்த விளிம்பு காட்டியது.
     அரசன் சினம் அவியவில்லை. மீண்டும் ஓங்கினான்.
     ஈசனது அசட்டுச் சிரிப்பு அதிகமாயிற்று. வெருண்டவன் போல ஜலத்தில் பாய்ந்தான்.
     அரசன் சினம் அவிந்தது. ஈசனைக் காப்பாற்ற அவனைத் தாவி எட்டிப் பிடித்தான். ஈசனது முடிப்பிட்ட முந்தி கிழிந்து கையுடன் வந்தது. ஈசன் ஜலத்தில் முக்குளித்து மறைந்துவிட்டான். அரசனும் தொடர்ந்து குதித்து மறைந்துவிட்டான்.
     வெள்ளம் மடமடவென்று வற்றியது. நுங்கும் நுரையுமாகக் கொப்புளித்த பிரளயம் சர்வேசனது ஹிரண்ய கர்ப்பத்தில் ஒடுங்கியது.
     ஈரச் சகதியிலே மன்னவன் அரிமர்த்தன பாண்டியனது சடலம் கிடந்தது.
     உலராத சகதியிலே, முகத்தில் சிவந்த வடுவுடனும் சொல்லில் அடங்காத பொலிவுடனும் மன்னவன் அரிமர்த்தன பாண்டியனது சடலம் கிடந்தது.
     மடங்கி இறுகப் பற்றிய கைக்குள், முன்றானைக்குள் பந்தகமிட்ட ஓலை நறுக்கு ஒன்று இருந்தது.
     ஈசனுக்குக் குதிரைகள் பெற்றுக் கொண்டதாக எழுதித் தந்த அந்த முறிச்சீட்டு.
*இடைவெட்டு*
     இளம்பூரணர் : அவன் மண் சுமப்பவன் என்றால் என்ன? நெஞ்சில் தைரியம் இருந்தால் தண்ணீரில் நீந்தக் கூடாதா? மதுரை நகரத்தில் எத்தனை வீரர்கள் உண்டு! அவர்கள் காலில் உள்ள வீரக்கழல்களின் ஓசை எவ்வளவு! அவ்வளவு பேரும் மண்ணை வெட்டித்தானே போட்டுக்கொண்டிருந்தார்கள்? அவன் ஒருத்தன் தானே தனக்குள் வெள்ளம் அடக்கம் என்பது போல அதன்மீது பாய்ந்து நீந்தினான்? அவனை அடிக்கலாமா?
     அடியார்க்கு நல்லார் : இருட்டில் இருந்த பயம் நமக்கு இப்பொழுது இல்லை. வெள்ளமும் வற்றிவிட்டது. வெள்ளத்தில் வரம்பு தெரிகிறது. அவன் எங்கே? அரிமர்த்தன பாண்டியன் எங்கே?
     சேனாவரையர் : பரிகள் எங்கேயோ, வெள்ளம் எங்கேயோ, வெள்ளத்தில் நீந்தியவன் எங்கேயோ, அங்கே அரிமர்த்தனபாண்டியன்.
4
அங்கயற்கண்ணி
     மதுரை மூதூரின் கர்ப்பக்கிருகத்திலே மணியூசலிலே கருங்குயில் ஒன்று உந்தி உந்தி ஆடிக்கொண்டிருந்தது. விளக்கற்ற வெளிச்சத்திலே புலன்களுக்கு எட்டாத ஒளிப் பிரவாகத்திலே மணியூசல் விசையோடு ஆடியது. அளகச் சுருள் புலன் உணர்வு நுகரும் இருட்டுடன் இருட்டாகப் புரள, கால் விசைத்து உந்திச் சுழி குழிந்து அலைபோல உகள, கொங்கைகள் பூரித்து விம்மிக் குலுங்க, அன்னை மணியூசல் ஆடினாள். ஆலவாய் ஈசன், அழகன் சொக்கன் வருகை நோக்கி மணியூசலாடினாள். தோள் துவள அவள் சங்கிலிகளைப் பற்றி அமர்ந்த பாவனை, சொக்கனை ஆரத் தழுவ அகங்காட்டும் செயல் போல அமைந்திருந்தது. அங்கயற்கண்ணியின் அதரத்திலே கீற்றோடிய புன்சிரிப்பு; மருங்கிலே துவட்சி; கண்ணிலே விளையாட்டு; நெஞ்சிலே நிறைவு. செல்வி மணியூசல் ஆடினாள். அண்ட பகிரண்டங்களையும் சகல சராசர பேதங்கள் யாவற்றையும் தன்னுள் அடக்கும் ஆலிலை வரிவிட்டு புரண்டு விளையாடியது.
     அந்த ஒளியில், அந்த இருட்டில், அந்த நிறைவில் சொக்கன் வந்தான். முகத்திலே வடு, மார்பிலே வடு, நெஞ்சிலே நிறைவு. விளையாடச் சென்ற ஈசன் வீடு திரும்பினான். விளையாட்டின் பலன் ஏற்று ஈசன் வீடு திரும்பினான்.
     அன்னை அகங்குழைய நெஞ்சம் பூரிக்க அண்ணலை நோக்கினாள். அந்தப் பார்வை அகிலத்தை இழுக்கும் சொக்கனை இழுத்தது. தானாக, தன்னில் ஓர் அம்சமாகப் பிரபஞ்சத்தைக் கொண்ட ஈசனது அகன்ற மார்பில் அன்னை துவண்டாள். மணியூசலிலே வேகமும் கனலும், வேட்கையற்ற வேட்கையும் இரண்டு நாகசர்ப்பங்கள் உயிர்ப் பாசத்தினால் பின்னிப் புரளுவது போல, ஏதோ ஒரு தோற்றந்தான் அந்த இருட்டில் தெரிந்தது. அன்னையின் நெஞ்சு சுரந்தது. ஈசனின் வேதனை அவிந்தது.
     மணியூசல் விசைகொண்டு உயர்ந்து பொங்கியது. வாமபாகத்தில் தன்னில் ஓர் அம்சமாக அன்னையை அமர்த்தி, வலக்கரம் கொண்டு சங்கிலியைப் பற்றி விரல்கொண்டு ஊன்றி ஆடினார்.
     பாதத்தினடியில் முயலகன் முதுகு சற்று வளைந்து கொடுத்தது. கொடுமை என்ற அவனது கோரப் பற்களிடையிலும் புன்சிரிப்பு என்ற எழில் நிலாப் பொங்கியது.
     வாமபாகத்தமர்ந்த அன்னை இடக்கரம் ஒரு சங்கிலியைப் பற்றியது. அவளது பெருவிரல் ஈசனது பெருவிரலில் பின்னிப் பிணைந்து உந்தியது.
     "அடித்ததற்குப் பலன் அரியணைக்குப் பதில் அரன்மடி போலும்" என்றாள் அன்னை.
     அவர்களது மடிமீது அரிமர்த்தன பாண்டியன் அமர்ந்திருந்தான்; சிசுவைப் போல, கவலை இல்லை; எதுவும் இல்லை.
     "வாதவூரன் நெஞ்சில் வெள்ளம் அடங்கவில்லை. வழிநடையும் தூரந்தான்" என்றான் ஈசன்.
பொற் பிரம்பு
     ஈசன் முகத்தில் விழுந்தது பொற்பிரம்பின் அடி. அவனது மார்பில் விழுந்தது. நெஞ்சில் விழுந்தது. அப்புறத்து அண்டத்தின் முகடுகளில் விழுந்தது. சுழலும் கிரகங்களின் மீது விழுந்தது. சூலுற்ற ஜீவராசிகளின் மீது விழுந்தது. கருவூரில் அடைப்பட்ட உயிர்கள் மீது, மண்ணின்மீது, வனத்தின் மீது, மூன்று கவடாக முளைத்தெழுந்த தன்மீது, முன்றிலில் விளையாடிய சிசுவின் மீது, முறுவலித்த காதலியின் மீது, காதலின்மீது, கருத்தின் மீது, பொய்மையின் மீது, சத்தியத்தின் மீது, தருமத்தின்மீது அந்த அடி விழுந்தது.
     காலத்தின் மீது விழுந்தது. தர்மதேவனுடைய வாள் மீது விழுந்தது. சாவின் மீது, பிறப்பின் மீது, மாயையின் மீது, தோற்றத்தைக் கடந்தவன் மீது, வாதவூரன் மீது, வாதவூரன் வேதனையின் மீது, அவன் வழிபட்ட ஆசையின் மீது, அவனது பக்தியின் மீது அந்த அடி விழுந்தது.
     அங்கயற்கண்ணியின் மீது விழுந்தது. அவளது நெற்றித் திலகத்தின் மீது, கொங்கைக் குவட்டின்மீது அந்த அடி விழுந்தது.
கலைமகள், ஜனவரி-பிப்ரவரி 1946
flow1

சித்தி - புதுமைப்பித்தன்

செண்பகராமன் பிள்ளைக்கு வைராக்கியம் திடீரென்று ஏற்பட்டது. உலக வியவகாரங்களில் நொடித்துப் போய், மனசு கைத்து அவர் காஷாயத்தை மேற்கொள்ளவில்லை. pudu5தொட்டதெல்லாம் பொன்னான கைதான் அது. ஊரிலே செல்வாக்கு, உள்ளத்திலே நிறைவு ஏற்பட வேண்டியதற்குப்  போதுமான சௌகரியம் எல்லாம் இருக்கத்தான் செய்தது. அவர் சிரித்துக்கொண்டேதான் காவி அணிந்து, கால் விட்ட திசையில் நடந்தார். துணை காரணமாகத் துன்பமோ, தீட்சையோ அவரை உந்தித் தள்ளவில்லை. பிள்ளையவர்கள் புறப்பட்ட தினம் வெள்ளிக்கிழமை. மூன்று நாட்கள் வீட்டில் யாரும் அவர் வரவில்லையே என்று கவலைப்படவில்லை. காரணம் அடிக்கடி அவர் அவ்வாறு 'சோலியாக' அசலூருக்குப் புறப்பட்டுவிடுவது வீடறிந்த பழக்கம். மூன்றாம் நாள் வந்த கார்டுதான் 'அவர் இப்பொழுது செண்பகராமன் பிள்ளை அல்ல; முப்பது கோட்டை விதைப்பாடும், மூன்று லக்ஷம் பாங்கி டிபாசிட்டும் உள்ள பண்ணையார் அல்ல; மண்டபத்துக்கு மண்டபம் கொடுங்கை வைத்துப் படுத்துத் தூங்கிக் கால்கொண்ட திசையில் செல்லும் ஆண்டி' என்பதை அறிவித்தது.
     பிள்ளையவர்கள் செயல்கேட்டு ஊரே கலகலத்து விட்டது. திடீரென்று வைராக்கியம் ஏற்படுவதற்குக் காரணம் என்ன என்பது தெரியாத பலருக்கு, மனங்கண்டது எல்லாம் காரணமாகத் தெரிந்தது. யார் யாரெல்லாமோ என்ன என்ன எல்லாமோ சொன்னார்கள். அவ்வளவு காரணமும் தப்பு என்பது தெரிந்த ஒருவர் உண்டு. அவரே மீனாட்சியம்மாள் என்ற ஸ்ரீமதி செண்பகராமன் பிள்ளை. சம்சார பந்தத்தில் மனிதன் எப்படி நடந்துகொள்கிறான் என்பதைப் பூர்ணமாகத் தெரிந்துகொள்வதற்கு ஒருவருக்குத்தான் முடியும். அம்மி மிதித்து அருந்ததி பார்த்து ஊரறிய ஒரே தலையணையில் தலை சாய்க்கச் சம்மதித்துக் கொண்ட ஜீவனுக்குத் தான், அன்று தொடங்கிய ஒழுங்கு எந்தக் கதியில், எந்த நியதியில் செல்லுகிறது என்பதைப் பூரணமாகத் தெரிந்துகொள்ளச் சௌகரியம் உண்டு. விவேகிகள் தெரிந்து கொள்ளுவார்கள்; அந்த வசதி பெறாதவர்கள் தலையைத் தாங்கிய தலையணையைப் போல பாரத்தைத் தாங்கியதால் விழுந்த குழியைத்தான் மன உலகில் பெற்றிருக்க முடியும். மீனாட்சியம்மைக்கு, தன் கணவர், தன்னுடன் அந்த இளமையிலே, நிதானம் இழந்த தெப்பம் போல உணர்ச்சிச் சுழிப்பில் மிதந்த காலத்திலும், பிறகு குடும்பம், குடித்தனம் என்ற வேட்கையில் வேரூன்ற நினைத்து ஆவேசத்துடன் சம்பாத்தியத்தில் தம்மை மறந்து இறங்கிய காலத்திலும், ஊரின் நன்மை தின்மைகளிலும் வல்லடி வழக்குகளிலும் தர்மாவேசம் உந்தத் தம்மை மறந்து வேலைசெய்த காலத்திலும், தாமரையிலையில் உருண்டு உருண்டு விளையாடும் தண்ணீர் போல இருந்து வருகிறார் என்பதைப் பூரணமாக அறிந்திருந்தாள். அவரது செயல் அவளுக்கு அதிசயமாகத் தெரியவில்லை.
     செண்பகராமன் பிள்ளையின் தங்கை சித்திரை அம்மாள் அண்ணனுக்கு யாரோ 'செய்வினை' செய்துவிட்டார்கள் என்று தான் எண்ணினாள். கண் கண்ட ராசாவாக ஊரை ஆண்ட அண்ணன், ஒரே நாளில் ஆண்டியாகி ஓடுவதற்கு வேறு காரணம் இருக்க முடியாதென்று தீர்மானமாக நம்பினாள்; அவளுடைய புருஷரோ சற்றுச் சந்தேகச் சுபாவி. "அத்தானுக்குப் பித்தந்தான்" என்று தீர்மானித்து விட்டார். தலைக்குனிவாக இருந்தது. பிள்ளையவர்களை மீண்டும் கைப்பிடியாகப் பிடித்துவந்து வைத்தியம் செய்து குணப்படுத்திக் குடும்பத்தில் மறுபடியும் கட்டிப்போட வேண்டும் என்று ஆசைப்பட்டார். சேதி கேட்டு வந்த இவ்விருவருக்கும், "அவுக திரும்ப மாட்டாக; நீங்க போனா அலச்சல்தான் மிச்சம்; நல்ல வளியிலே நாம போய் நல்ல பாம்பெ போடலாமா?" என்று நிதானம் குறையாமல் பேசிய மீனாட்சியம்மையின் வார்த்தைகள் தாம் புரியவில்லை. ஒருவேளை... ஒருவேளை, அவரை விரட்டிவிட்டுச் சொத்தையும் பொருளையும் தாய் வீட்டுக்குச் சுருட்டிக்கொண்டு போக மீனாட்சியம்மை வெட்டிய குழியோ என்று சந்தேகித்தார்கள்.
     பிள்ளைகளுக்குத் தாமே மைனர் கார்டியன் என்றும், செண்பகராமன் பிள்ளையவர்களின் குடும்ப நிர்வாகம் முழுவதும் தம் அதிகாரத்தின் கீழ் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் அவர் முதல் காரியமாகக் கோர்ட்டில் வழக்குத் தாக்கல் செய்தார். மீனாட்சியம்மையின் பந்துக்கள் இதைப் பார்த்துக்கொண்டிருப்பார்களா? அவளுக்கு ஒன்றுவிட்ட சகோதரர் ஒருவர் உண்டு. அவர்தாம் கிராமத்தில் இருந்துகொண்டு செண்பகராமன் பிள்ளையின் நிலபுலன் வரவுசெலவுக் கணக்குகளைப் பார்த்துக்கொண்டிருந்தார். நிர்வாகம் தம்வசமேதான் கொடுக்கப்படுவது நியாயம் என்பதற்கு அனுசரணையாக, செண்பகராமன் பிள்ளையின் ஒரு மகன் சார்பாக ஸிவில் வழக்குப் புலியான ஒரு வக்கீலுடன் சேர்ந்து எதிர் வழக்குத் தாக்கல் செய்தார். மஞ்சட் கயிறு அகலாது போனாலும் மீனாட்சியம்மையின் கதி வெள்ளைப் புடைவை வியவகாரமாயிற்று.
தங்கையம்மாள், ஊர் ஊராக ஆள்விட்டுத் தேட ஏற்பாடு செய்தாள். ஸிவில் வழக்கு ஆவேசத்திலிருந்த அவளுடைய கணவருக்கு அது பிடிக்கவில்லை. வீணாகக் காலத்தைப் போக்கி, சொத்துச் சீரழிந்த பிறகு அத்தான் வந்தென்ன, அப்படியே ஆண்டியாகப் போயென்ன என்று நினைத்தார். ஆள்விட்டுத் தேடுவதை அப்புறம் பார்த்துக் கொள்வோம் என்பது அவரது கட்சி. ஊரிலே அவருக்குச் செல்வாக்கு உண்டு; செயலுண்டு. செண்பகராமன் பிள்ளையுடைய வாண்டுப் பயலுக்கு முறைப்பெண் என்ற பாத்தியதைக்கு வாண்டுப் பெண் ஒருத்தி அவருக்கு உண்டு. அவ்விருவருக்கும் செல்லக் கல்யாணம் செய்துவைத்துச் செண்பகராமன் பிள்ளை விளையாடியதனால் பிடி பலமாகத்தான் இருந்தது. அது இன்னும் கொஞ்சம் பலமாகுமென்ற நைப்பாசையும் உண்டு. அவருக்குப் பிடி மட்டும் பலம். உரிமையோ பாத்தியதையோ இல்லை. எதிர்பாத்தியதைக்காரனுக்கு ஒரு வகையில் உரிமை இருந்தாலும் ஊர் தன் பக்கந்தான் சேரும் என்ற பலத்த நம்பிக்கை அவருக்கு உண்டு.
2
     செண்பகராமன் பிள்ளை காவிபோட்டுக்கொண்டு பக்கத்துச் சத்திரம் வரையில் நடந்தார். அங்கே சாப்பிடவில்லை. உடம்பிலே ஒரு தெம்பு, மனசிலே ஒரு கலகலப்பு. காரணம் அற்ற சந்தோஷம் என்று தான் சொல்ல வேண்டும்; சிட்டுக்குருவி மாதிரி, அவருக்கு இந்தத் தீர்க்கமான காரியம் இவ்வளவு சுளுவில் கைகூடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டதே இல்லை. கண்ணீரும் அழுகையும் வழிமறிக்கக் கூடும். ஊரார் வந்து நின்று எழுப்பும் கௌரவம் என்ற மதில்களைத் தாண்ட முடியாது போய்விடக் கூடும் என்ற அச்சம் அவருக்கு இருந்து வந்ததுண்டு. ஆனால் ஒன்று: யாரோ ஒருவர் கணீர் என்ற குரலில் "அப்பா, செண்பகராமா!" என்று கூப்பிடுவது போன்ற தோற்றம் அவரைப் பலமுறை ஏமாற்றியதுண்டு. சில சமயம் காலமாகிவிட்ட அவருடைய தகப்பனாரின் குரல் போலக் கேட்கும்.
     முன்பு எப்பொழுதோ ஒரு முறை, நடுநிசிப் போது, வாலிபம் குன்றாத காலம், மனைவியுடன் சல்லாபமாகப் பேசிக் கட்டித் தழுவும் சமயத்தில், யாரோ ஜன்னலுக்கு வெளியே வந்து நின்று, "அப்பா, செண்பகராமா!" என்று கூப்பிட்டது போலக் கேட்டது. "அப்பாவா? இதோ வருகிறேன்" என்று தழுவிய கையை வழுவவிட்டு, எழுந்து வெளியே கதவைத் திறந்து கொண்டு வந்தார். வந்து, வெளியே வெறிச்சோடிக் கிடந்த பட்டகசாலையில் நின்றபொழுதுதான் 'இதென்ன முட்டாள்தனம்!' என்ற பிரக்ஞை எழுந்தது. குரலும் தகப்பனாருடையது போல இருந்தது என்ற புத்தித் தெளிவு போன்ற ஒரு சந்தேகமும் ஏற்பட்டது. இவர் குரல் கொடுத்துக் கொண்டு எழுந்து சென்ற நிலையில் உடலும் மனமும் கூம்பிப் போன மீனாட்சியம்மாள், "அப்பா செத்து அஞ்சு வருஷமாச்சே. இதென்ன தெய்வக் குத்தமோ, சோதனையோ" என்று நடுங்கிக் கொண்டு கேட்டாள். அவளைத் தேற்ற, வேறு எங்கோ கேட்ட சத்தம் என்று சொல்லி சமாளித்துக் கொள்வதற்குள் அவர் பாடு பெரும்பாடாகிவிட்டது.
     இதே மாதிரிதான் நடுப்பகல்: கடையில் உட்கார்ந்து பெரிய கணக்கப்பிள்ளை எடுத்துக்கொடுத்த பேரேடுகளைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, இதே மாதிரி யாரோ கூப்பிட்டார்கள்; பதில் குரல் கொடுக்க வாயெடுத்தவர் மின்னலதிர்ச்சியுடன் எதிர்மோதி வந்த சூழ்நிலை உணர்ச்சி வேதனை கொடுத்தபடி வாயடைத்தது. கடையிலே உட்கார்ந்திருந்தபடி சமாளிப்பதற்கு மிகவும் சங்கடப்பட்டார்.
     சாலையிலே, சுருக்கிருட்டிலே முன் என்ன இருக்கிறது என்ற கவலை சற்றும் இல்லாமல், முதுகில் போட்ட சரடு புரண்டு விழாமல், 'கினிங் கினிங்' என்ற மணிச் சத்தத்துடன் நடந்துபோகும் காளைகளைப் போல மனசை அசை போடவிட்டு நடந்தார். சமயா சமயங்களில் ஊரில் எப்படி இந்தக் காரியம் கழித்துக் கொண்டு எதிர் ஒலிக்கும் என்பதை அவர் மனசு கற்பனை செய்ய முயலும். அவ்வளவையும் தப்பித்து வந்துவிட்டதில் ஓர் எக்களிப்பு; அதாவது, தாய் கிணற்றடியில் தண்ணீர் எடுக்கச் சென்றபோது மெதுவாக அடுக்குச் சட்டியைக் கவிழ்த்து அதன்மேல் ஏறி நின்று, உறியில் உள்ள நெய்விளங்காயைத் திருடித் தின்றுவிட்டு, உதட்டோ ரத்தில் ஒரு பொடி இல்லாமல் துடைத்துக் கொண்டதாக மனப்பால் குடித்துக்கொண்டு, "ஏளா, எனக்குப் பண்டமில்லையா?" என்று பாசாங்கு செய்யும் தன்னுடைய சுப்பையாவின் காரியம் போல, பிறர் கண்களில் படாதபடி வியவகாரத்தை நடத்திக் கொண்டதில் ஓர் எக்களிப்பு.
     "என்னலே திருட்டு மூதி! உன் ஒதட்டிலேதான், உறிப்பானேலெ இருந்த நெய்விளங்காய் உக்காந்திருக்கே" என்று அவனுடைய தாய் அவன் குண்டுணித்தனத்தைச் செல்லமாக வெளிப்படுத்துவது போல், காலம் என்ற அன்னையும் தம்முடைய திருட்டுத்தனத்தை வெளிப்படுத்திவிடும் என்பதை அவர் புரிந்து கொள்ளாமலில்லை. அப்போது நாம் இங்கு இருக்கமாட்டோ ம் என்பதில்தான் அவருக்கு ஏகமேனியாக எக்களிப்புத் தலைசுற்றி ஆடியது.
     ஆனால் ஒரு காரியம். "நாம் ஏன் இந்தக் காவியைப் போட்டுக் கொள்ள வேண்டும்?" என்ற கேள்வி மட்டும், செய்கிற காரியத்தை எதிர்த்துக் கேள்வி போட்டு மடக்கிக் கொண்டே இருந்தது.
     மாடு இழுக்க வண்டி உருண்டது. மனசு இழுக்க அவரும் நடந்தார், நடந்தார், நடந்தார்... நடந்துகொண்டே இருந்தார். கறுப்பாகச் செறிந்து கிடந்த மரங்கள், கரும்பச்சை கண்டு, கடும்பச்சையாகிப் பளபளவென்று மின்னின. நக்ஷத்திரங்கள் எப்பொழுது மறைந்தன என்ற விவரம் அவருக்குத் தெரியாது. ஊருக்கு வெகு தொலைவில், இரட்டை மாட்டு வண்டிக்குப் பின்னால் எங்கோ நடந்து கொண்டிருப்பது அவருக்குத் தெரிந்தது.
     தூங்கிக்கொண்டிருந்த வண்டிக்காரன் எழுந்து, அவிழ்ந்து கிடந்த முண்டாசை எடுத்துக் கட்டிக்கொண்டு, "தை, தை" என்று காளைகளை நிமிண்டினான். சக்கரங்கள் சடபடவென்று உருண்டன.
     வண்டியும் தூசிப்படலத்தை எழுப்பிக்கொண்டு அந்தத் திரை மறைவில் ஓடி மறைந்தது.
     எதிரியை மடக்குவதற்குத்தான் சரக்கூடம் போடுவார்கள்; பிரம்மா ஸ்திரத்தைப் பிரயோகித்தால் தான் புகைப்படலத்தின் மறைவில் வருகை தெரியாமல் வந்து எதிரியின் வல்லுயிரை வாங்கும். ஓடுகிற மாட்டுவண்டிக்கு இந்த ராசாங்கமெல்லாம் என்னத்திற்கு? இப்படியாக நினைத்துக்கொண்டு சிரித்தார் பிள்ளை. படித்த படிப்பு எல்லாம் மனசில் திசைமாறித் தாவி, தம்முடைய பயனற்ற தன்மையைக் காட்டிக் கொள்வதாக நினைத்தார். இனிமேல் படித்துப் பாழாய்ப் போன கதையை எல்லாம் தலையில் விஷம் ஏறுவதுபோல் ஏறித் தம்மைக் கிறங்க வைப்பதற்குச் சற்றும் இடம் கொடுக்கக் கூடாது என்று நினைத்தார். படித்த படிப்பென்ன! அறிந்த ஞானம் என்ன! எல்லாம் எதற்கு? யார் கூப்பிடுகிறார்கள் என்ற விடுகதையை விடுவிக்க வகையில்லாமல் திண்டாடுகிறதே!
     சாலை இருந்த இடத்தில் திடுதிப்பென்று வளைந்து திரும்புகிறது. பிள்ளையவர்களும் திரும்பினார். திருப்பத்துக்கு அப்பால் ஆலமரமும் ஒரு சின்ன மண்டபமும் கிணறும் இருந்தன. வண்டிக்காரன் காளைகளை நுகத்தடியில் கட்டிவிட்டு, அடுப்பு மூட்டி, ஆலம் விழுது கொண்டு பல் துலக்கிக்கொண்டிருந்தான். மண்டபத்து முகப்புத் தூணில் முதுகைச் சாய்த்து, அருகே ஆண்டிப் பொட்டணம் துணை இருக்க, கிழட்டுச் சாமி ஒன்று மனசைச் சோம்பலிலே மிதக்கவிட்டு நிர்விசாரமாக உட்கார்ந்துகொண்டிருந்தது. வண்டிக்காரனிடம் பட்டையை வாங்கி, பல் துலக்கி, ஸ்நானம் செய்து இரண்டு மிடறு தண்ணீர் பருகிவிட்டு மண்டபத்தில் கால் உளைச்சலைப் போக்கிக் கொண்டு நிதானமாக நடந்தால் என்ன என்று செண்பகராமன் பிள்ளை கருதினார்.
     வழக்கம் போல, "ஏலே, அந்தப் பட்டையை இப்படிப் போடு" என்று அதிகாரம் செய்யத்தான் அவருக்குத் தெரிந்திருந்தது.
     ஆண்டியாகிப் பன்னிரண்டு மணிநேரம் கடந்தும் அதிகார வாசனை போகவில்லை.
     "என்ன சாமி, ஏலே, ஓலே இங்கிய? ஓலே பட்டெல இருக்கும்" என்று எடுப்பாகப் பதில் சொன்னான் வண்டிக்காரன்.
     குத்துக்கல்லில் சாய்ந்திருந்த கிழட்டுச் சாமி சிரித்தது. முத்து முத்தான பல்லும், தாடியும் பார்ப்பதற்கு மோகனமாகத்தான் இருந்தன. பிள்ளையவர்களுக்கு வேட்டியின் காவிக்கு அடுத்த சொல் அதுவல்ல என மௌனத்தைக் கடைப்பிடித்து நிழலில் உட்கார்ந்தார்.
     குதிரைச் சதையை வருடிக்கொண்டார். தடவிக் கொடுத்துக் கொள்வது சுகமாக இருந்தது.
     அவருக்குச் சற்றுத் தூரத்தில் மாடுகள் படுத்து அசை போட்டுக் கொண்டிருந்தன. கறுத்த காளை போன ஜன்மத்தில் வழிமறிச்சான் உத்தியோகம் போலும்! ரஸ்தாவில் பாதி தனக்கென்று படுத்துக் கொண்டிருந்தது.
     இவர்கள் நடந்துவந்த திசையிலே, திருப்பத்துக்கு அப்பால், பூம்பூம் என்ற ஹார்ன் சப்தத்துடன் ஒரு வாடகை மோட்டார், கொள்ளுமட்டும் ஜனங்களை ஏற்றிக்கொண்டு பேரிரைச்சலுடன் ஐக்கிய ஜனநாயக நாடுகளின் 'ஏகோபித்த' அணி வகுப்பினர்களைக் கூட்டிக்கொண்டு திரும்பியது. வழிமறிச்சான் காளை உதறியடித்துக் கொண்டு எழுந்திருந்தது. பஸ் டிரைவர் 'ஸ்டியரிங்' சக்கரத்தை ஒடித்துத் திருப்பினான். பஸ் எதிரிலிருந்த புளியமரத்தில் ஏற முயன்றது; கவிழ்ந்தது. உள்ளே குமைந்த ஜனக் குமைச்சல் பிரலாபிக்கும் ரத்தக் களரியாயிற்று. அதிலிருந்து ஜனங்களும் மூட்டை முடிச்சுகளும் வெளியே பிய்த்து எறியப்பட்டன. உள்ளே பலர் அகப்பட்டு நசுங்கினர். ஸ்டியரிங் சக்கரத்தின் மீது டிரைவரின் பிரேதம் கவிழ்ந்து படுத்திருந்தது. ஒடிந்த கண்ணாடித் துண்டு அவன் மூக்கைச் செதுக்கி எங்கோ எறிந்துவிட்டது.
     பதறி அடித்துக்கொண்டு எழுந்திருந்தார் பிள்ளை. மோட்டாரின் அடியில் சிக்கிக் கிடப்பவர்களை விடுவிப்பது எப்படி என்று தெரியாமல், அர்த்தமற்ற கூப்பாடு போட்டுக்கொண்டு வண்டியைச் சுற்றி சுற்றி ஓடிவந்தார். விபத்து பலமாகிவிட்டதனால் தனக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று உலைப் பானையைச் சற்றும் கவனிக்காமல், கட்டை வண்டிக்காரன் வண்டியைப் பூட்டிக்கொண்டு குறுக்குப் பாதையாக ஓடி ஆட்களை அழைத்துவருவதாகச் சொல்லிச் சிட்டாகப் பறந்துவிட்டான். விழுந்த காக்கையைச் சுற்றி ஓலமிடும் காக்கை மாதிரிதான் செண்பகராமன் பிள்ளை கத்தினார். அவருக்கு எப்படி உதவிசெய்வது என்று புரியவில்லை. இதற்குள் மோட்டார் வண்டியில் பின்னே இருந்தவர்கள் அதிர்ச்சியின் வேகம் அடங்கியதும் இறங்கினார்கள். செண்பகராமன் பிள்ளைக்கு மூட்டைகளை எடுத்து வரிசையாக அடுக்கத்தான் முடிந்தது. எதிரே கண்ட ஆபத்து அவரைக் கதிகலங்க வைத்துவிட்டது.
     எதிரே வந்து போக்கு வண்டிகள் இரண்டொன்று நின்றன. அடிபட்டவர்களை அடுத்த ஊர்வரையில் ஏற்றிச் செல்லச் சம்மதித்தனர்.
     கோடை இடி மாதிரி நிகழ்ந்த இந்த ரௌத்திர சம்பவத்தின் ஆரவாரம் ஒடுங்கி அந்த இடம் மறுபடியும் நிம்மதியாக இரண்டு மணி சாவகாசம் பிடித்தது.
     தம்மை அழைக்கும் குரலின் மாயக்கூத்துப் போலத் தென்பட்டது பிள்ளைக்கு. ஆனால் ஒடிந்து வளைந்த இரும்பாக நின்ற வாடகை மோட்டார்தான் அச்சம்பவத்தை நினைப்பூட்டும் தழும்பாக, கண்களை உறுத்தியது.
     செயல் ஒடுங்கி நின்ற பிள்ளை, நிதானம் பெற்றுக் கட்டை வண்டிக்காரன் போட்டுவிட்டு ஓடின பட்டையை எடுத்துக்கொண்டு கிணற்றருகில் சென்றார்; பல் துலக்கினார்; குளித்தார்; ஈரவேட்டியை ஆலம் விழுதுகளில் தொங்கவிட்டார்; மண்டபத்தில் வந்து உட்கார்ந்தார்.
     அடுப்பு, புகைந்து கொண்டிருந்தது. அதையே கவனித்துக் கொண்டிருந்தார்.
     "இன்னும் நெருப்பு அணையவில்லை" என்றது கிழட்டுச்சாமி.
     இத்தனை கோரத்தையும் கல்லுப் பிள்ளையார் மாதிரி இருந்த இடத்தைவிட்டு அசையாமல் கிழட்டுச்சாமி பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தது என்ற உணர்ச்சி செண்பகராமன் பிள்ளையின் மனசில் ஈட்டி கொண்டு செருகியது. துறவித் தன்மையை வெறுத்தார். மறுகணம் 'அவ்வளவு கல்நெஞ்சோ!' என்று பதைத்தார். அதே மண்டபத்தில் உட்காரக் கூடப் பயந்தவர் மாதிரி சற்று நகர்ந்து தள்ளி உட்கார்ந்தார். பதில் சொல்லத் தெரியவில்லை.
     "மோட்டார் வண்டியைச் சுற்றிச் சுற்றி ஓடி வந்ததனால் யாருக்கு என்ன லாபம்?" என்று கேட்டது கிழட்டுச்சாமி.
     சும்மா இருந்தது போதாதென்று தம்மையும் வேறு கேலி செய்கிறான் இந்தக் கிழட்டு ஆண்டி என்று கோபப்பட்டார் செண்பகராமன் பிள்ளை. எழுந்தார். பதில் பேசவில்லை.
     "அடுப்பு இன்னும் புகைகிறது; அணையவில்லை" என்று சிரித்தது கிழட்டுச்சாமி.
     "அதை அணைத்துவிடட்டுமா?" என்றார் பிள்ளை. அவருக்குப் பேச்சுக் கொடுத்துக்கொண்டிருக்க விருப்பம் இல்லை. ஒரு பட்டை தண்ணீர் மொண்டு, அடுப்பில் ஊற்றி அணைத்துவிட்டு, வேட்டி உலர்ந்துவிட்டதா என்று வேட்டியைத் தொட்டுப் பார்த்தார்.
     "கிழட்டுப் பட்டையானாலும் ஒரு பட்டை தண்ணீருக்கு எவ்வளவு சக்தி இருக்கு பாத்தியா?" என்றது கிழட்டுச்சாமி.
     உலர்ந்த வேட்டியைக் கொசுவி, உதறிக் கட்டிக்கொண்டார் பிள்ளை.
     மறுபடியும் மண்டபத்தில் வந்து உட்கார்ந்தார்.
     "சாமி எங்கே போறதோ" என்று கேட்டார்.
     "எல்லாரும் போற எடத்துக்குத்தான்? வேற எங்கே போக்கடி; இந்தா இந்த அவலைத் தின்னுகிறாயா?" என்று மூட்டையை அவிழ்த்துக் கையில் ஒரு குத்து அவலைக் கொடுத்தது கிழட்டுச்சாமி.
     பிள்ளை இரண்டு கைகளையும் நீட்டி வாங்கிக்கொண்டார். வாயில் கொஞ்சம் இட்டுக் குதப்பிக்கொண்டே, "அது என்ன புஸ்தகம்?" என்று புருவத்தை நிமிர்த்திச் சுட்டிக் காட்டினார். கிழட்டுச்சாமி அதை எடுத்துக் கையில் கொடுத்தது. பிழைகள் மலிந்த திருவாசகப் பதிப்பு அது அநாதியான சிவபிரான் மாதிரி முன்னும் பின்னும் அற்றிருந்தது.
     பிள்ளையவர்களுக்கு மனப்பாடமான கிரந்தம்; ருசியோடு படித்த புஸ்தகம்.
     "அதை வாசியும்" என்றது கிழட்டுச்சாமி.
     பிள்ளையவர்கள் அவலை மடியில் கட்டி வைத்துவிட்டு ராகத்துடன் வாசிக்க ஆரம்பித்தார். சாமி கேட்டுக்கொண்டே இருந்தது.
     "வெளியிலே குப்பையிலே கிடந்தது; ஆருக்காவது உதவுமே என்று எடுத்து வந்தேன்; எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது" என்றது கிழட்டுச்சாமி.
     படிக்காதவன் தூக்கின சுமையா என்று அதிசயப்பட்டார் பிள்ளை. எழுத்தறிவற்ற மூடமோ, வயிற்றுப் பிழைப்புக்குக் காவியோ என்று சந்தேகித்தார் பிள்ளை.
     கிழடு சிரித்துக்கொண்டிருந்தது.
     "நான் கைலாசத்துக்குப் போகிறேன்" என்றது கிழட்டுச்சாமி.
     'கிண்டல் ரொம்பப் பலமாக இருக்கிறதே' என்று நினைத்தார் பிள்ளை. உதறியடித்துக்கொண்டு சாடிப் பேச அவருக்குத் தைரியம் இல்லை.
     "கூண்டோட கைலாசம் இல்லை; கைலாச பர்வதத்துக்குத்தான் போகிறேன்; நீரும் வருகிறீரா?" என்று அவரைப் பார்த்துச் சிரித்தது அந்தக் கிழட்டுச்சாமி.
     "எங்கே போனால் என்ன? வருகிறேன்" என்று எழுந்தார் பிள்ளை.
     "சரி, இருக்கட்டும். உம்ம பேரு என்ன?" என்றது கிழட்டுச்சாமி.
     "சாந்தலிங்கம் என்று சொல்லணும்" என்றார் பிள்ளை.
     "இதுவரை சொல்லிக்கொண்டு வந்தது?" என்றது கிழட்டுச்சாமி.
     "செண்பகராமன் பிள்ளை என்று சொல்லுவார்கள்" என்றார்.
செண்பகராமன் பிள்ளையின் வாண்டுப்பயல் வடிவேலுவுக்கு மாமனாரான ஆனையப்ப பிள்ளைக்கு எதிராக வழக்குத் தொடுத்த மனைவிவழி மைத்துனர் நல்லசிவம் பிள்ளை, அவருடைய இரண்டாவது மகன் முத்துசாமியின் சார்பாகச் சொத்தைத் தம் நிர்வாகத்தின் கீழ் ஒப்படைக்க வேண்டும் அல்லது கோர்ட்டார் மேற்பார்வையில் வைத்திருக்க வேண்டும் என்று கட்சி ஆடினார். அவருடைய வக்கீல் கெட்டிக்கார வக்கீல். ஆனையப்பப் பிள்ளைக்கு ஊரில் செல்வாக்கு உண்டு. நல்லசிவம் பிள்ளையின் வக்கீல், வருகிற அறுவடைவரை வழக்கை ஒத்திவைத்து, பூநெல்லை அகற்றிக் கிஸ்திப் பணத்தையும் மீனாட்சியம்மை சார்பாகத் தாமே கட்டிவிட்டால், குடுமி தம் கைக்குள் சிக்கிவிடும் என்று திட்டம் போட்டார்.
     வடிவேலுவின் நலத்தை முன்னிட்டு வழக்காடப் புகுந்த ஆனையப்ப பிள்ளையின் யோசனை வேறு. அறுவடையின் போது களத்து நெல்லை மடக்கிவிட வேண்டும், அப்பொழுது நல்லசிவம் பிள்ளையின் கொட்டம் அடங்கும் என்று மனப்பால் குடித்தார் ஆனையப்ப பிள்ளை. கோர்ட்டில் இன்ஜங்ஷன் வாங்கி அப்படியே நெல்லை மடக்கிக் கொண்டு போய்விட வேண்டும் என்று அவர் யோசனை பண்ணியிருப்பது வாண்டு வடிவேலு மூலம் மீனாட்சியம்மையின் காதுக்கு எட்ட, நல்லசிவம் பிள்ளை உஷாரானதில் அதிசயம் இல்லை. ஆனையப்ப பிள்ளை மருமகனைத் தன் வீட்டோ டு கூட்டிப் போய் வைத்துக் கொண்டு அவன் படிப்பை மேற்பார்வை செய்யாவிட்டால் அவன் கெட்டுக் குட்டிச்சுவராகப் போவான் என்பதைத் தன் மனைவி மூலம் மீனாட்சியம்மைக்குச் சொல்லிவிட்டார். பையன் மீது உள்ள பாசத்தினால் அது சரியெனவே அவளுக்குப் பட்டது. "ஒங்க வீட்டு மருமகன் தானே? அவனை ஒப்படியாகப் பண்ணுவது இனி உங்க பொறுப்புத்தானே?" என்று பதில் சொல்லித் திருப்தி அடைந்தாள்.
     கிராமத்திலிருந்து வந்த நல்லசிவம் பிள்ளை அக்கா என்று உறவு கொண்டாடிக்கொண்டு வந்து, "பிள்ளையை வேறு வீட்டில் விட்டு வைப்பது நமக்குக் குறைச்சல்; மேலும் ஆனையப்ப பிள்ளைக்கு இப்பொழுது கடன் தொல்லை அதிகம்; சிறுசை வைத்துக் கொண்டு தன் காரியத்தைச் சாதித்துக் கொள்ளப் பார்க்கிறான்" என்று ஓதினார்.
     "செண்பகராமன் பிள்ளையின் சம்பாத்தியம் மண்ணாங்கட்டியாகப் போகும்; முதலில் வடிவேலை வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வா" என்று யோசனை சொன்னார்.
     மீனாட்சி அம்மாளுக்கு அவர் சொல்லுவதும் சரியாகத்தான் பட்டது. அவனுடைய நன்மையை எண்ணி முத்துசாமியை உருப்படாமல் ஓட்டாண்டி ஆக்கிவிடுவதா என்று மனசு பொங்கியது. பகல் மூன்று மணிக்குத் தன்னுடைய நாத்தனார் வீட்டுக்குப் போனாள். பள்ளிக்கூடம் போகாமல் வீட்டிலே கொட்டமடித்துக்கொண்டிருந்த வடிவேலைத் தரதரவென்று இழுத்துக் கொண்டு வந்தாள். "நான் மாமா வீட்டில்தான் இருப்பேன்" என்று வடிவேலு கத்தினான். அவளுடைய கைகளைப் பிறாண்டினான். ஆனால் அவளுக்கு பின்னால், 'ஓ ராமா' என்று படைப்பயம் போட்டுக்கொண்டுதான் தெரு வழியாக இழுபடவேண்டி இருந்தது.
     நயினார்குளத்தங் கரையில் மாலை மயங்கும் சமயத்தில் ஆனையப்ப பிள்ளையும், நல்லசிவம் பிள்ளையும் சந்தித்துக் கொண்டார்கள். வார்த்தை தடித்தது; நல்ல காலம், உடல் தடிக்கவில்லை.
     "உன் கொட்டத்தை அடக்குகிறேன்" என்றார் ஆனையப்ப பிள்ளை.
     "செண்பகராமன் பிள்ளை ஊரிலே கண்ட மழுமாறிகளுக்குச் சொத்துச் சம்பாதித்து வைத்துவிட்டுப் போகவில்லை" என்று உறுமினார் நல்லசிவம் பிள்ளை.
     "யாரடா மழுமாறி? செண்பகராமன் பிள்ளை சொத்து என்ன கொள்ளியற்றுப் போச்சு என்று நினைத்துக்கொண்டாயா?" என்று பதிலுக்கு உறுமினார் ஆனையப்ப பிள்ளை.
     கிராமத்தில் பயிர் அரிவாளை எதிர்பார்த்துத் தலைசாய்த்து நின்றது.
   "அண்ணாச்சி, நாளைக்கு நாம் நினைக்கிற காரியம் கைகூடத் திருச்செந்தூருக்குப் போய் ஓர் அர்ச்சனை நடத்திவிட்டு வருவோம்" என்று சொல்லிக்கொண்டே ஆனையப்ப பிள்ளையின் வீட்டுக்குள் ஒரு புல்லுருவி நுழைந்தது. பரமசிவம் பிள்ளை நல்லசிவம் பிள்ளை சார்பில் கிருஷ்ண பரமாத்மாவாக எதிர்கோட்டைக்குள்ளே சென்று விளையாடினார். முருகனுக்கு வெள்ளியன்று அர்ச்சனை நடத்தி, பிறகு கோர்ட்டுக்கும் வக்கீலுக்கும் அர்ச்சனை நடத்தினால் காரியம் நிச்சயமாக ஜயம் என்று இரவோடு இரவாகத் திருச்செந்தூருக்குப் பிரயாணமானார்கள். ஆனையப்ப பிள்ளையும் புல்லுருவி பரமசிவமும், பணத்தைப் பணம் என்று பாராமல் நல்லசிவம் பிள்ளை அறுவடையை அசுர கதியில் நடத்த ஆரம்பித்தார்.
     வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்களில் நெல்லை எத்தனை கோட்டையானாலும் ஒதுக்க முடியாதவன் ஒரு வேளாளனா என்பது நல்லசிவம் பிள்ளையின் கட்சி.
     அர்ச்சனை பாலபிஷேகம் செய்துவிட்டு, நெஞ்சில் சந்தோஷத்தோடு கோவில் வசந்த மண்டபத்தில் உட்கார்ந்து, மேற்கொண்டு நடக்க வேண்டிய காரியத்தைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கும்போது அவருடைய மறவன் ஓட்ட ஓட்டமாக ஓடிவந்து காரியம் மிஞ்சிப் போனதாகச் சொன்னான். பக்கத்தில் பரமசிவம் பிள்ளை இல்லை. அவர் கோவிலிலிருந்தே நழுவி விட்டார். "அண்ணாச்சி இங்கே ஒரு எடத்துக்குப் போயிட்டு வருகிறேன்" என்று அவர் சொல்லும்போது அவர் வார்த்தையைக் கபட நாடகம் என்று ஆனையப்ப பிள்ளை நினைக்கவில்லை. இன்ஜங்ஷன் யோசனையைக் கைவிடவேண்டியதாயிற்று.
     இப்படியாக, செண்பகராமன் பிள்ளையின் குடும்ப நிர்வாகத்தை யார் கவனிப்பது என்பதற்காக, இரண்டு நபர்கள் அவருடைய சொத்தை வாரி இறைத்துக் கொண்டு கோர்ட்டு வாசலில் காத்துக் கிடந்தார்கள்.
4
     சாந்தலிங்கச்சாமி மறுபடியும் தென் திசை நாடும்பொழுது வருஷம் பத்து ஓடிவிட்டன. எங்கெங்கோ கிழட்டுச்சாமியுடன் சுற்றினார். கைலாச பர்வதத்தில் கிழட்டுச்சாமி ஒடுக்கமானபோது அருகில் இருந்தவர் சாந்தலிங்கச்சாமிதான்.
     அவர் கொடுத்த திருவாசகப் புஸ்தகம், அவர் வைத்துவிட்டுப் போன மூட்டை இரண்டோ டும், நிம்மதி இன்மை என்ற நிஜச் சொத்துடன் உலகம் முழுவதும் சுற்றித் திரிந்தார். கடைசியாக, திருச்செந்தூருக்கு வந்து உட்கார்ந்தார். மனசு மட்டும் இருப்புக் கொள்ளவில்லை. யாரோ தம்மைத் தேடி அழைப்பது போன்ற ஒரு மனநிலை; வாசியை வசப்படுத்தும் பழக்கம் பெற்றும் அடங்கவில்லை. கூப்பிட்டவர் யார்? ஏன் கூப்பிட வேண்டும்? பத்து வருஷங்களாக வாட்டும் கேள்வி.
     கடைசியில் ஆனையப்ப பிள்ளையின் பாலபிஷேகத்துக்கு ஏமாறாத முருகன் காலடியில்தான் அவர் வந்து விழுந்தார். ஓயாத கடலும் ஓயாத மனசும் அவரை அலட்டின. காவித் துணியை அணிந்துகொண்டபோது இருந்த மன உல்லாசம் எங்கோ ஓடி மறைந்துவிட்டது. புறப்பட்ட இடத்தையே அலகை போல, தாம் சுற்றிச் சுற்றித் திரிந்து கொண்டிருப்பதாக நினைத்துக்கொண்டார். தமக்குச் சாந்தலிங்கம் என்று பெயர் இட்டுக் கொண்டதைக் கண்டு கிழட்டுச் சாமி சிரித்ததில் அர்த்தபுஷ்டி இருந்ததாகவே இப்பொழுது அவருக்குப் பட்டது.
     நல்ல வெள்ளிக்கிழமையும் நாளுமாக வௌவால் மாதிரி இருட்டில் அல்லாடக் கூடாது என்று நினைத்துக் கோவிலுக்குச் சென்றார்.
     சந்நிதியில் தம்மை மறந்த நிஷ்டை சற்றுக் கைகூடியது. லயத்தில் இருப்பவரை "அத்தான்" என்று யாரோ ஓடி வந்து கட்டிப் பிடித்துக் கொண்டார்.
     ஆனையப்ப பிள்ளைதான். வழக்கம்போல வெள்ளிக்கிழமை வழிபாட்டுக்காகத் திருச்செந்தூருக்கு வந்திருந்தார்.
     மங்கிய விளக்கொளியும் பத்து வருஷங்களும் போட்ட திரை அவருடைய பார்வையை மழுங்க வைக்கவில்லை. முருகனிடம் மாறாத நம்பிக்கை வைத்ததன் பலன் என்று அவர் கருதினார்.
சாந்தலிங்கச்சாமி அதிர்ச்சியிலிருந்து தெளிந்து நிதானப்பட்ட பிறகு தம்முடைய சகோதரி புருஷன் என்பதை உணர்ந்தார். செண்பக ராமன் பிள்ளையாக நடந்துகொள்ள மனம் ஒப்பவில்லை.
     ஆனையப்ப பிள்ளைக்கு எப்படித் தம் காரியத்தைச் செண்பகராமன் பிள்ளையிடம் சாதித்துக்கொள்வது என்ற யோசனை. எதிர்க்கக் கூடாது; போக்கில் விட்டுத் திருப்ப வேண்டும்; அவ்வளவுதான்.
     இரவு இரண்டு மணிவரையில் இரண்டு பேரும் வசந்த மண்டபத்தில் உட்கார்ந்து பேசினார்கள்.
     "நீங்கள் நல்ல வழியில் இருப்பதை நான் கெடுக்க விரும்பவில்லை; சிறு பையன்கள் என்ன பாவம் பண்ணினார்கள்? சொத்தை ஊர்க்காரன் தின்னாமல் ஒரு ஒழுங்குபடுத்திவிட்டு மறுபடியும் காஷாயம் போட்டுக்கொள்ளுங்கள்" என்றார் ஆனையப்ப பிள்ளை.
     மறுபடியும் வெள்ளை உடுத்துக் கோர்ட்டு ஏறிக் குடும்பத்தைச் சீர்தூக்கி வைக்க வேண்டும். ஆமாம். வடிவேலுவும், முத்துசாமியும் என்ன பாவம் பண்ணினார்கள்? அவர்களுக்காக இந்தக் கட்டை உழைப்பதில் குற்றம் இல்லை என்றது சாந்தலிங்கச்சாமியின் மனசு. 'ஊர்ப் பயல்கள் கொட்டத்தை அடக்காமல் ஓடியா போவது?' என்றது செண்பகராமன் பிள்ளையின் மனசு.
     "சரி, வருகிறேன். எழுந்திருங்கள். மீனாட்சி எப்படி இருக்கா?" என்றார் செண்பகராமன் பிள்ளை.
     "அவளை உங்களுக்குத் தெரியாதா? கேப்பார் பேச்சைக் கேட்டுக் கேட்டுத்தான் குடும்பம் குட்டிச்சுவராய்ப் போச்சு. காலையில் நான் சொல்லுவதற்குச் சரி என்று தலையாட்டுவாள். மாலையில் அவன் சொல்லுவதற்குச் சரி என்று தலையாட்டுவாள். கடைசியில் வீண் சிரமமும் பணவிரயமுந்தான் மிச்சம்" என்றார் ஆனையப்ப பிள்ளை.
     இரண்டு பேரும் மூன்று மணி சுமாருக்குத் திருநெல்வேலிக்குப் போகும் பஸ்ஸில் ஏறினார்கள். சாந்தலிங்கசாமியின் மனசு என்னவோ செய்யத் தகாத காரியத்தில் ஈடுபடுவதாகவே அல்லாடியது.
     'நான் இந்த வேஷத்தில் வீட்டு நடைப்படியை மிதிக்கலாமா?' என்றது செண்பகராமன் பிள்ளையின் மனசு.
     பலபலவென்று விடியும்போது பஸ் ஸ்ரீவைகுண்டத்துக்கு வந்து விட்டது. இன்னும் ஒரு மணிநேரம் கழித்தால் சாந்தலிங்கச் சாமிக்கு ஒடுக்கம்; அதாவது அப்புறம் செண்பகராமன் பிள்ளைதான்.
     "ஆனையப்ப பிள்ளையவாள், நீங்க சொல்லுவது ரொம்பச் சரியாத்தான் படுகிறது; எனக்குக் குடும்பம் ஏது, குட்டி ஏது? நான் ஆண்டி" என்றார் சாந்தலிங்கச்சாமி.
     "அத்தான், வண்டியைவிட்டு இறங்குங்க, நாம் காப்பியைச் சாப்பிட்டுவிட்டு அப்புறம் பேசிக்கொள்வோம்" என்றார் ஆனையப்ப பிள்ளை.
     இருவரும் இறங்கி எதிரில் இருந்த ஹோட்டலுக்குள் போனார்கள். அங்கே இரைச்சல் காதை அடைத்தது. இருவரும் குழாயடியில் முகத்தைத் தேய்த்துக் கழுவிப் பல் துலக்கினார்கள்.
     குனிந்து வாயை உரசிக் கொப்பளித்துக் கொண்டிருக்கும் சாந்தலிங்கச்சாமிக்கு, "அப்பா செண்பகராமா!" என்று யாரோ உரத்த குரலில் கூப்பிட்டது கேட்டது.
     "அத்தான், அதாரது என்னை அடையாளம் கண்டு கூப்பிட்டார்கள்?" என்று தலையை நிமிர்ந்து கேட்டார் செண்பகராமன் பிள்ளை.
     பக்கத்தில் இருந்த சிறுவன், "சாமி, ஒங்களை யாரும் கூப்பிடலியே? நான் தானே பக்கத்தில் நிக்கேன்?" என்றான்.
     'இந்தச் சென்மத்திலே நான் சாந்தலிங்கமாக மாட்டேன் போலும்!' என்று தனக்குள்ளே சிரித்துக்கொண்டது ஜீவாத்மா.
     காவி தரித்த செண்பகராமன் பிள்ளைதான் அங்கு நின்றார். சாந்தலிங்கம் மனசுக்குள்ளாகவே ஆழ்ந்து முழுகிவிட்டது. மனசு ஆழம் காணாத கிணறு அல்லவா?
     "அத்தான், நேரத்தைக் களிக்காதிய" என்று ஆனையப்ப பிள்ளை குரல் கொடுத்தார்.
     செண்பகராமன் பிள்ளைக்குப் பத்து வருஷங்களுக்குப் பிறகு காப்பி உடலிலே வேறு ஒரு விதமாகப் புழுக்கத்தையும் புளகாங்கிதத்தையும் கிளப்பியது.
     இருவரும் மீண்டும் பஸ்ஸில் ஏறினார்கள். பஸ் புறப்பட்டது.
     எப்போதோ ஒரு காலத்தில் கிழட்டுச் சாமி, கல்லுப் பிள்ளையார் மாதிரி உட்கார்ந்திருந்ததும், இப்போது தம்முடைய சதை ஆடுவதும் பக்கத்தில் பக்கத்தில் நினைவுக்கு வந்தன. கைலயங்கிரியில் ஒடுக்கமான கிழட்டுச்சாமி எதிரே உட்கார்ந்துகொண்டு கேலி செய்வது மாதிரி இருந்தது.
     "சாமி, ஒங்களெ செலம்பரத்திலே பாத்த மாதிரி தோணுதே" என்றான் பக்கத்தில் உட்கார்ந்திருந்த கிழவன்.
     "நீ யாரைச் சொல்லுகிறாய்?" என்று கேட்டார் செண்பகராமன் பிள்ளை.
     "ஒங்களை எனக்குத் தெரியாதா? நீங்க சாந்தலிங்கச்சாமி இல்லே? பொத்தாமரை பக்கத்திலியே உக்காந்திருப்பியளே?" என்றான் அந்தக் கிழவன்.
     "சாந்தலிங்கச்சாமி ஒடுக்கமாயிட்டுது. எனக்கும் அவரைத் தெரியும்" என்றார் செண்பகராமன் பிள்ளை.
     "எப்பம்?" என்றான் கிழவன்.
     "அவங்க ஒடுக்கத்தில் ஆகி சுமார் நாலு மணி நேரமாச்சு" என்றார் செண்பகராமன் பிள்ளை, நிதானமாக.
flow1