ஞாயிறு, 17 ஜூலை, 2011

நாஞ்சில் நாடன் - நேர்காணல்

‘‘கதாநாயக நடிகனுக்கு படத்துக்கு மூன்று கோடி ரூபாய் சம்பளம் தருகிறார்கள். பத்தாயிரம் ரூபாய் மாசம் சம்பளம் வாங்கும் உயர் நிலைப் பள்ளி ஆசிரியன் அந்தத் தொகையை ஊதியமாகப் பெற 300 ஆண்டுகள் பணி செய்ய வேண்டும். முன்னூறு நெடிய ஆண்டுகள், முப்பது தலைமுறைகள். கூலிக்காரன் என்றால் ஆயிரம் ஆண்டுகள்.
அழுகை வரவில்லையா உங்களுக்கு? எனக்கு வருகிறது. நடிகனைத் தொட்டுப் பார்க்க விரும்பியவர்கள் நாம், நடிகையைக் கோயில் கட்டி கும்பிட்டவர்கள் நாம், கவர்ச்சி நடிகை குடித்து மிஞ்சம் வைத்த எச்சில் சோடாவை அண்டாவில் விட்டு நீர் சேர்த்துக் கலக்கி அரை கிளாஸ் பத்து ரூபாய் எனப் பிரசாதம் விநியோகித்தவர் நாம், பச்சைக்குத்திக் கொள்ளவும் தீக்குளிக்கவும் செய்பவர்கள் நாம், நடிகைகக்குத் தீண்டல் தாண்டிப் போனால் பிரார்த்தனைக் கூட்டங்கள் நடத்துபவர்கள் நாம். மன்றங்கள் நடத்தி மாற்று மன்றத்தின் பட்டினிக் குடலைக் கிழித்து மாலை போடுபவர் நாம் _ நம்மை நாம் என்ன பெயர் சொல்லி அழைப்பது? ஏமாளி என்றா, மூடன் என்றா? மூர்க்கன் என்றா? கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாலுடன் பிறந்த வாயப்பன் என்றோ?’’ என்று அங்கதம் பொங்க பேசும் நாஞ்சில் நாடன் தமிழன் செவ்வியல் படைப்பாளி.
‘தலைகீழ் விகிதங்கள்,’ ‘என்பிலதனை வெயில் காயும்,’ மாமிசப் படைப்பு, ‘மிதவை’, ‘சதுரங்கக் குதிரை, என்ற ஆறு நாவல்களும் ‘தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள்’ ‘வாக்குப் பொறுக்கிகள்’ ‘உப்பு’ ‘பிராந்து’ ‘சூடிய பூ சுடற்க என்னும் ஐந்து சிறுகதை தொகுப்புகளும் ‘நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை’ நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று’ ‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’ என்னும் மூன்று கட்டுரை தொகுப்புகளும் ‘மண்ணுள்ளிப் பாம்பு’ என்ற ஒரு கவிதை தொகுப்பையும் எழுதி இருக்கிறார்.
இவரது மொத்தக் கதைகளையும் முழுத் தொகுப்பாக நாஞ்சில் நாடன் கதைகள் என்ற தலைப்பில் ‘தமிழினி’ பதிப்பம் வெளியிட்டிருக்கிறது. கூடவே இரு கட்டுரை தொகுப்பையும் மற்றவையெல்லாம் ‘விஷயா’ பதிப்பகம் வெளியிட்டவை. இனவரையில் நூலை காலச்சுவடு’ வெளியிட்டிருக்கிறது.
தன் வீட்டில் நேர்ந்த இரண்டு துக்க காரியங்களில் இரண்டு மாதங்கள் தள்ளிப்பான இந்த நேர் காணல் இந்த மாதம் சாத்தியமானது. கோவை சிங்காநல்லூர் ஐயர்லேஅவுட் பகுதியில் வசிக்கும் அவரை ஒரு மாலை பொழுதில் தீராநதிக்காக சந்தித்தோம்.
naanjil
தீராநதி : உங்களுடைய முதல் சிறுகதையான ‘விரதம்’ 1975 ஜூலை மாதம் ‘தீபம்’ இதழில் வெளிவந்திருக்கிறது. உடனே அந்தக் கதைக்கு ‘இலக்கிய சிந்தனை’ பரிசும் கிடைத்திருக்கிறது. அப்போது உங்களுக்கு உத்தேசமாக 28 வயதிருக்கும். அன்றிலிருந்து தொடர்ந்து இடைவிடாமல் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சமகால இலக்கியப் பரப்பில் இயங்கிக் கொண்டிருக்கிறீர்கள். இந்த ஆண்டோடு அறுபது வயதை எட்டி இருக்கிறீர்கள். அன்றைக்கு உங்களுக்கு எழுத்தின் மீதாக உண்டான ஆர்வம், வாசிப்பிலிருந்து இன்றைக்கு நீங்கள் அடைந்திருக்கும் ‘இடம்’ வரைக்குமான விஷயங்களை வாசகப் பதிவிற்காக ஞாபகப்படுத்தி பேசுங்களேன்?
நாஞ்சில் நாடன் : ஆரம்பத்தில் என்னுடைய தனிமையைக் கொல்வதற்காகத்தான் நான் எழுத ஆரம்பித்தேன். பிறமாநிலத்தில் சென்று பணி செய்யவேண்டிய கட்டாயம். பேச்சுத் துணைக்கோ, சுக, துக்கங்களைப் பகிர்ந்துக்கொள்வதற்கோ ஒரு தமிழனோ, மலையாளியோகூட இல்லாத சமயத்தில் தன்னந்தனியனாக உணர்ந்தேன். ஒருபுறம் பிறந்து வளர்ந்த ஊரின் ஞாபகங்கள் மனதை அழுத்திக்கொண்டிருக்கும் சமயத்தில் ஒரு வடிகாலாக எழுத ஆரம்பித்தேன். ‘விரதம்’ மாதிரியான சிறுகதைகள் எழுத வந்ததன் மூலம் நான் இழந்த அல்லது தொலைத்த ஒரு உலகத்தை எனக்குள்ளாகவே மறு வெளிப்பாடு செய்து பார்த்துக்கொண்டேன். அதிலொரு சுகம் இருந்தது எனக்கு. அப்படி எழுதியபோது தொடர்ந்து இதே வழியில் போகலாம் என்று ஒரு தைரியம் கிடைத்தது.
ஆரம்பத்தில் ழிஷீstணீறீரீவீணீ வாக உருவான என் எழுத்து நாள் போகப்போக ழிஷீstணீறீரீவீணீ என்ற இடத்தோடு மட்டும் நின்று விடவில்லை. பிறந்த வளர்ந்த இடம் பற்றி, என்னுடைய சூழல் பற்றி, சமூகம் பற்றி, எனக்குத் தெரிந்த விஷயங்கள் பற்றி, என்னுடைய நேரடியான அனுபவங்கள் பற்றி எனக்கு நிறைய சொல்வதற்கு இருந்தது. இதை ஒரு பகிர்தல் என்று வேண்டுமென்றால் வைத்துக்கொள்ளலாம். இந்தப் பகிர்தலுக்கு என்னுடைய சிறுகதைகளையும், நாவல்களையும் பயன்படுத்திக்கொண்டேன். இப்படித்தான் தொடங்கினேன். பின்னால் எனக்கென்று ஒரு பார்வை ஏற்பட்டது. இது சிறு வயதிலேயேகூட இருந்திருக்கலாம். ஆனால் அது துலக்கம் பெறாமல் இருந்தது. பிறகு ஒரு துலக்கம் கிடைத்த பிற்பாடு மேலும் தீவிரமாக என்னால் எழுத முடிந்தது. இப்படித்தான் முப்பத்துநான்கு வருஷமாக நான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
இந்த வடிவங்கள், யுக்திகள் பற்றி விஷயங்களை எல்லாம் கற்றுத் தேர்ந்துகொண்டு நான் எழுத வரவில்லை. எனக்கெது எளிதாக வாய்த்ததோ, எனக்கெது எளிதாக எழுத வந்ததோ அதில்தான் நான் தொடர்ந்து சென்றேன். இந்த வடிவச் சிக்கல்களுக்குள்ளாக நான் எப்போதும் திகைத்து நின்றதில்லை.
தீராநதி : உங்களின் ழிஷீstணீறீரீவீணீவைக் கொல்வதற்காகவே எழுத ஆரம்பித்தீர்கள் என்பது சரி, அப்படி எழுத ஆரம்பிப்பதற்கு முன்னவே உங்களுக்கு கதை, நாவல்கள் வாசித்த அனுபவம் இருந்ததா?
நாஞ்சில் நாடன் : என்னுடைய பதிநான்கு பதினைந்து வயதிலேயே வாசிக்க ஆரம்பித்துவிட்டேன். _ எனக்கெது புரிந்ததோ அதை. தொடக்கத்தில் எல்லா இளைஞர்களுக்குமே அந்தக் காலத்தில் கல்கி, சாண்டில்யன் போன்றவர்களின் சரித்திரக் கதைகள் மீது பெரிய ஆர்வம் இருந்தது. பிறகு வடுவூர் துரைசாமி அய்யங்கார், ஆரணி குப்புசாமி முதலியார் போன்றவர்களின் துப்பறியும் மர்மக் கதைகள் மீதும் பெரிய ஆர்வம் இருந்தது.
இவர்கள்தான் முதலில் என்னை வாசிப்பை நோக்கி நகர்த்தினார்கள். எங்கள் ஊர் வீரநாராயணமங்கலத்தில் நூலகமொன்று இருந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில், நாஞ்சில் நாடு என்ற பகுதியில், பழையாற்றங் கரையிலுள்ள ஒரு சின்ன, ரொம்ப அழகான விவசாய கிராமம் அது. சுற்றிலும் நெல் வயல், வாழை, தென்னை இந்த மூன்றுதான் முக்கிய பயிர்கள். அப்புறம் கன்றுகாலிகள் என்று, இவ்வாறான சூழலோடுதான் என்னுடைய வாசிப்பும் சேர்ந்து நகர்ந்தது.
எங்கள் ஊர் நூலகத்தில் கல்கி, சாண்டில்யன், நா. பார்த்தசாரதி பின்னால் தொடர்ந்து அகிலன். அதன்பிறகு அநுத்தம்மா, மு. வரதராஜன் இப்படி தொடர்ந்து போ. ஒரு காலத்திற்குப் பிறகு மர்மக்கதைகள் வாசிப்பதற்கான ஈடுபாடு குறைய ஆரம்பித்தது. மர்மக்கதை எழுத்தாளர்கள் எண்ணிக்கையில் பெரிய அளவில் நம்மிடம் இல்லை. நான்கு ஐந்து பொருட்படுத்தக் கூடிய எழுத்தாளர்களைத் தவிர்த்து சரித்திரக் கதைகள் என்பது சொல்லும்படியாக இல்லை. இப்படிப் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் அதாவது, என்னுடைய 26, 27 வயதில் நான் பாம்பேக்கு குடிபெயர்கிறேன். அங்கு பம்பாய் தமிழ்ச்சங்கத்தில் ஒரு நூலகம் இருந்தது. அங்கு உறுப்பினராக நான் சேர்ந்தேன். அந்த நூலகத்திலிருந்து வீட்டிற்கு தினமும் இரண்டு புத்தகங்கள் வாசிக்க எடுத்துக்கொண்டு போகலாம். இந்தச் சந்தர்ப்பத்தில் நான் தினமும் இரண்டு புத்தகங்கள் படித்தேன். ஏறக்குறைய 400, 500 பக்கங்கள் தினமும் படித்தேன். அதற்கான நேரமும் சாவகாசமும் எனக்கிருந்தது. அப்போது அந்த நூலகத்தில் வே. நாகராஜன் என்ற ஒருவர் இருந்தார். ‘வேனா’ என்ற பெயரில் அந்தக் காலத்தில் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். தொகுப்பாக எதுவும் வரவில்லை. அவருக்கு பூர்வீகம் கும்பகோணம். தி. ஜானகிராமனின் தெருவாசி. நண்பர். அவர், ‘கிருஷ்ணன் நம்பியைப் படிச்சிருக்கியா?’ ‘நீல. பத்மநாபனைப் படிச்சிருக்கியா?’ என்று கேட்டு நல்ல நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்தார். சுந்தரராமசாமியை அவர்தான் எனக்குச் சொல்லிக்கொடுத்தார். அவர் சொல்லச் சொல்ல அந்தப் புத்தகங்களைத் தேடி பிடிக்க ஆரம்பித்தேன். ஏற்கெனவே நான் படித்துக்கொண்டிருந்த அகிலன், பார்த்தசாரதி, கல்கி, சாண்டில்யன் அநுத்தம்மா, லக்ஷ்மி இவர்களைத் தாண்டின ஒரு விஷயம் எனக்குக் கிடைத்தது. கிருஷ்ணன் நம்பி அப்போது மொத்தமே இரண்டு புத்தகங்கள்தான் எழுதி இருந்தார். அப்போதுதான் நீல.பதம்நாபன் ‘தலைமுறைகள்’ நாவலை எழுதி முடித்திருந்தார். பிறகுதான் ‘பள்ளிகொண்டபுரம்’ வந்தது. இப்படி அன்று தொடர்ந்து இன்றைக்கு வரைக்கு ஒரு தரமான வாசிப்பிற்கு என்னை நான் ஆட்படுத்திக்கொண்டுதான் இருக்கிறேன். இன்றைக்கு சமகாலத்தில் வெளிவந்திருக்கும் எல்லா இளைய எழுத்தாளர்களின் புத்தகங்களையும் நான் வாசித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

தீராநதி : அன்றைக்கு ஆரம்பித்து இன்றைக்கு நீங்கள் வந்து நிற்கும் இடம் வரைக்கும் மன நிறைவைத் தரக் கூடிய ஓர் எல்லையை எட்டி இருப்பதாக நீங்கள் உணருகிறீர்களா?
நாஞ்சில் நாடன் : இதை இரண்டு விதமாகப் பார்க்கலாம். ஒன்று _ என்னால் செய்ய முடிந்ததை நான் செய்திருக்கிறேன். அப்படிப் பார்க்கும் போது ஒரு நிறைவெனக்கிருக்கிறது. இரண்டு நான் செய்தது போதுமா என்று பார்த்தால் எனக்கு இன்னும் செய்வதற்கு நிறைய இருக்கிறது. அதைச் செய்துவிட்டு சென்று விட வேண்டும் என்ற எண்ணமும் எனக்கிருக்கிறது. இதை நான் அகம்பாவமாகச் சொல்வதாகக் கூட நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.
சில விஷயங்களை நான்தான் சொல்லியாக வேண்டும் என்ற எண்ணம் எனக்கிருக்கிறது. இதை தான் சொல்லவில்லையென்றால், இது தமிழ் மக்களுக்கு சொல்லப்படாமலேயே கூட போய்விடக் கூடிய ஓர் அபாயம் இருக்கிறது என்பது எனக்குத் தெரிகிறது. இதை நீங்கள் கர்வமாக எடுத்துக் கொண்டாலும் சரி, அல்லது வேறு எப்படி எடுத்துக் கொண்டாலும் எனக்கு சரிதான். சாதாரணமாக ஒரு ‘விரதம்’ என்று சிறுகதையை எழுத ஆரம்பித்து நேற்றைக்கு ‘டைம்ஸ் இன்று’ வில் வெளியான ‘கோம்பை’ வரைக்கும் எடுத்துக் கொண்டு பார்த்தால், ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு அந்த தீப் பந்தத்தைத் தூக்கிக் கொண்டு நான் நடந்திருக்கிறேன் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். இது என்னால் சாத்தியமாகி இருக்கிறது. தமிழிலக்கிய உலகில் சிறுகதை என்ற பிரிவிலேயோ அல்லது நாவல் என்ற பிரிவிலேயோ இருக்கின்ற மொத்த தூரத்தையும் நான் கடந்து விட்டேன் என்று சொல்லவில்லை. ஆனால் என்னால் முடிந்த தூரத்தை நான் கடந்திருக்கிறேன்.
தீராநதி : உங்களுடைய சிறுகதையிலோ கட்டுரையிலோ அல்லது நாவல்களிலோ பழந்தமிழ் இலக்கியங்கள் மிகுதியாக கையாளப்பட்டிருக்கின்றன. அப்படிப் பயன்படுத்தும் போது அது துருத்திக் கொண்டு நிற்காமல் தன்னியல்பாக அவற்றை எடுத்துப் பிரயோகிக்கிறீர்கள். திருமந்தரம், சைவத் திருமுறைகள், திருக்குறள், சங்கப்பாடல்கள், கம்பராமாயணம், சிலப்பதிகாரம் என்று உங்களின் பழந்தமிழ் பற்று ஒரு கல்வியாகவே உங்கள் படைப்பிலக்கியத்தில் போதிக்க, வாசிப்பிற்கான சுவைக் கூட்ட வந்து வந்து விழுகிறது. வெள்ளாள பிள்ளைமார்கள் மரபில் பாரம்பரிய தொடர்ச்சியாகவே ஒரு பழந்தமிழ் பாண்டித்யம் சர்வசாதாரணமாகவே புழங்கும். அந்த அறிமுக அளவீட்டிற்கான அறிவு கூட உங்களின் படைப்புகளுக்கு உதவி இருக்கலாம். ஆனால் நீங்கள் முதலில் கதை சொல்லத் தொடங்கி பிற்பகுதியில் ஒரு சங்கப் புலவனைப்போல உரைநடையில் கதைபாட ஆரம்பித்திருக்கிறீர்கள். நவீன செவ்வியல் மரபைச் சேர்ந்த ஒரு படைப்பாளியாகவே உங்களை நான் அடையாளப்படுத்த விரும்புகிறேன். உங்களுக்குக் கிடைத்த பழந்தமிழ் இலக்கிய பரிட்சயம் விருப்பத்தின் பால் அமைந்ததா? அல்லது கல்விப் புலம் சார்ந்ததா? ஏனென்றால் நீங்களரு கணிதவியல் வகுப்பைச் சார்ந்த மாணவனென்பதால் கேட்கிறேன்?
நாஞ்சில் நாடன் : பழந்தமிழ் இலக்கியப் பயிற்சி என்பது என்னுடைய குடும்பத்தின் மூலமாக எனக்குக் கிடைக்கவில்லை. என்னுடைய குடும்பம் ரொம்ப சாதாரணமான அன்றாடங் காய்ச்சும் விவசாயக் குடும்பம். வெள்ளாளர் மரபில் குறிப்பிட்ட சில குடும்பங்கள் மட்டுமே தேவாரம், திருவாசகம், மற்ற சமய திருமுறைகள் பற்றிய அறிமுகத்துடனிருக்கும். இது எல்லா குடும்பத்திற்குள்ளும் இருக்குமென்று சொல்ல முடியாது. நூறு குடும்பங்களில் ஒன்று அல்லது இரண்டு குடும்பத்திற்குத்தான் அந்த வாய்ப்பு அதிகம். என் குடும்பம் அதற்கு தொடர்பில்லாத விவசாய குடும்பம்.
நானெப்படி பழந்தமிழ் இலக்கியத்திற்குள் வந்தேனென்றால், ஆரம்ப பள்ளியைத் தாண்டி உயர்நிலை பள்ளிக்கு வருகின்ற போதே பள்ளியில் நடக்கின்ற பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டிகளிலெல்லாம் நான் கலந்து கொள்வேன். அப்படி கலந்து கொள்கிறபோது எங்கள் ஊரில் படித்தவர்களிடம், விஷயம் தெரிந்தவர்களிடம் ‘நான் இந்தத் தலைப்பில் பேசப் போறேன் அல்லது எழுதப் போறேன். எனக்கு எழுதிக் கொடுங்கள்’ என்று கேட்டு எழுதி வாங்கிக் கொள்வேன். ஒரு மூன்று அல்லது நான்கு பக்கங்கள் எழுதிக் கொடுப்பார்கள். நான் மனப்பாடம் செய்வேன். அவர்கள் எழுதிக் கொடுக்கும் போது அந்தக் கட்டுரையை அல்லது பேச்சை செறிவாக்குவதற்காக அங்கங்கே பழந்தமிழ் பாடல் வரிகளை செருகுவார்கள். பொங்கலின் சுவையைக் கூட்ட முந்தரி பருப்புகளை சேர்ந்து நாம் சுவையேற்றுவதைப் போல பழந்தமிழ் பாடல்களை சேர்த்து எழுதி தருவார்கள். அச்சுவைக்கு பழக்கப்பட்ட நான் பிறகு எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் போது தனியாகவே அந்த ‘முந்திரிப் பருப்புகளை’ தேடத் தொடங்கினேன். பள்ளி படிப்பு முடிந்த பிற்பாடு நானே என்னுடைய பேச்சுகளுக்கு, கட்டுரைகளுக்கான புத்தகங்களைத் தேடி எழுதுவதற்கான பயிற்சி எனக்கு வந்து விட்டது. திருக்குறள், கவிமணி, நாமக்கல் கவிஞர், பாரதியார் பாரதிதாசன் பிறகு பாடப்புத்தகத்தில் இருக்கின்ற செய்யுள்கள் என்று ஊன்றிப் படிக்க ஆரம்பித்தேன். பாடத் திட்டத்தில் மனப்பாட பாடல்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அந்தப் பாடல்கள் எனக்கு மனப்பாடமானதாகி விடும். செய்யுள்களில் அப்படி ஒரு ருசி எனக்குத் தெரிய ஆரம்பித்தது.
நான் எட்டாம் வகுப்பு படிக்கின்ற போது சீவகசிந்தாமணியிலிருக்கின்ற பாடல்கள் என்னுடைய பாடபுத்தகத்தில் இருந்தது. வசந்த சேனை பந்தாடுகின்ற இரண்டு பாடல்கள். ரொம்ப சுவாரஸ்யமான சந்தமுள்ள பாடல். ரொம்ப சுவையாக இருக்கும். எனக்கென்ன அப்போது தோன்றியதென்றால் அந்த சீவகசிந்தாமணி முழுக்க இப்படித்தான் பாடல்கள் இருக்கும் போல என்று. எங்கள் ஊர் நூலகத்திலிருந்து அந்தப் புத்தகத்தை வீட்டிற்கு எடுத்துக் கொண்டுப் போனேன். தெருவில் அதை எடுத்துக் கொண்டு போகும் போது ஊர் மக்கள் எல்லோரும் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார்கள். ‘‘எதுக்குடா இத்த தண்டி புத்தகத்தை தூக்கிட்டுப் போற தலையில வெச்சு தூங்கறதுக்கா?’’ என்று கேலி பேசினார்கள். நான் ஒரு கௌரவத்திற்காக புத்தகத்தை மூன்று நாட்கள் வீட்டில் வைத்திருந்து விட்டு திரும்ப கொண்டு வந்து கொடுத்துவிட்டேன். என்னால் அதை படிக்க முடியவில்லை. எப்படி ஒரு எட்டாம் வகுப்பு மாணவனால் அதை படிக்க முடியும்? ஆக, இப்படி எந்தப் புத்தகம் கையில் கிடைத்தாலும் நான் படிக்க ஆரம்பித்தேன். செய்யுள், உரைநடை, கதை, கவிதை என்று பலவிதமாக படிக்க ஆரம்பித்தேன். அப்போதெல்லாம் பத்தாம் வகுப்பிலேயே பாடத்திட்டத்தில்‘குகப்படலம்’ இருந்தது. சிலப்பதிகாரத்தினுடைய ‘வழக்குரைகாதை’ இருந்தது. வாசிப்பில் தேர்ச்சி வருகின்றபோது அந்த மொழி உங்களை வசீகரிக்கின்றது. 1964_ல் நான் எஸ்.எஸ்.எல்.சி. படித்த போது எனக்கு தமிழ் சொல்லி தந்த ஆசிரியர்கள் எல்லாம் ஈடுபாட்டோடு சொல்லித் தந்தார்கள்.
கூலிக்கு மாரடிக்கவில்லை அன்றைக்கு இருந்த தமிழாசிரியர்கள் உரைநடையை வாசிப்பதைப் போல செய்யுளை வாசிக்க மாட்டார்கள். அசை பிரித்து சொற்கள் தெளிவாக, அர்த்தம் தெளிவாக புரிகின்ற விதத்தில் பாட்டை சொல்லிக் கொடுப்பார்கள். அப்படி இரு முறை, மூன்று முறை அவர்கள் பாட்டை சொல்லும் போது அந்தப் பாட்டெனக்கு மனப்பாடமாகி விடும். இன்றைக்குள்ள சமகால கல்வி மாணவர்கள் அந்தக் கல்வி முறையை இழந்து விட்டார்கள். இன்றைய தமிழாசிரியர் பலரும் தமிழ் சொல்லித் தரும் முறை அறியாதவர்கள்.
இன்னொன்றையும் இங்கு நான் சொல்ல வேண்டும். ஆரம்பக்காலத்தில் எனக்கு கொஞ்சம் அரசியல் ஈடுபாடு இருந்தது. ஏ.கே. கோபாலன் காலத்தில் அதாவது 1962_ம் ஆண்டு வாக்கில் இந்தோ_சீனா யுத்தம் வந்ததில்லையா அப்போது ஒரு பொதுவுடமைவாதி எங்க ஊரில் வந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருந்தார். கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக பிரியாத காலம் அது. அவர் ஒரு மலையாளி. அவருடைய மனைவிக்கு எங்கள் ஊர்தான் சொந்த ஊர். மலையாள நாளிதழ்களைதான் அவர் படிப்பார். அவர் எங்களுடன் கோட்பாடுகள் சம்மந்தமாக உரையாடுவார். அவர் மூலமாக பொதுவுடமை கருத்துக்களை தெரிந்து கொள்ள ஆரம்பித்தேன். அதே போல எங்கள் வீட்டிற்கு ‘திராவிட நாடு’ பத்திரிகை வரும். என் சித்தப்பா அப்பத்திரிகையை தொடர்ந்து வாங்கிக் கொண்டிருந்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் தோன்றிய முதல் இரண்டு தி.மு.க. கிளைகளில் எங்கள் ஊரும் ஒன்று. முத்தாரம், முரசொலி, தென்றல் இப்படி தி.மு.க. சார்புடைய பத்திரிகைகள் தொடர்ந்து ஊருக்கு வந்துக் கொண்டிருந்தன.
அப்புறம் அரசியல் சொற்பொழிவுக் கூட்டங்கள் கேட்க ஆரம்பித்தேன். அநேகமாக அன்றைய காலத்திய எல்லாத் தலைவர்களின் சொற்பொழிவுகளையும் கேட்டிருக்கிறேன். ஈ.வெ.ரா. பெரியார், ஈ.வெ.கி.சம்பத், நெடுஞ்செழியன், அண்ணாதுரை, சி.பி. சிற்றரசு பி.ராமமூர்த்தி, எஸ்.ஏ. முருகானந்தம், கே.டி.கே. தங்கமணி, ம.பொ.சி. இப்படி எல்லா சொற்பொழிவுகளையும் கேட்டிருக்கிறேன். இந்தத் தலைவர்கள் சொற்பொழிவுகளின் நடுவில் சில கவிதை வரிகளை மேற்கோள் காட்டுவார்கள். திருக்குறளை பாரதியை மேற்கோள் காட்டுவார்கள். பாரதிதாசனை கண்டிப்பாக மேற்கோள் காட்டுவார்கள். மு. வரதராசனின் வரிகளை மேற்கோள் காட்டுவார்கள். இப்படி அரசியல் கூட்டங்களுக்கு போவதால் என்னுடைய சிந்தனை வளத்தை பெருக்கிக் கொள்ள வாய்ப்பாக அது அமைந்தது. பின்னால் தான் இலக்கிய மதிப்பீட்டின் படி, அளவீட்டின்படி எது சிறந்தது? எது அதை விட சிறந்தது? எது அதை விட அதை விட சிறந்தது என்று ஒப்பிடுகின்ற தன்மை எனக்கு மிக பிற்பாடுதான் வந்தது. அதனால் நான் சகட்டுமேனிக்கு எல்லாவற்றையும் படித்தேன். இதன் மூலம்தான் எனக்கு சமூகம் சார்ந்த ஒரு பார்வை கிடைத்தது. அரசியல் சார்ந்த பார்வை கிடைத்தது. இலக்கியம் சார்ந்த பார்வை கிடைத்தது.
1964_ல் எஸ்.எஸ்.எல்.சி. முடித்து விட்டு பி.எஸ்.சி. படிக்க வருகிறேன். 1967 தேர்தலில் தான் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ் நாட்டில் முதல் முறையாக பெரும்பான்மையான இடங்களை பிடித்து வெற்றி கொள்கிறது. 1962 தேர்தலிலேயே ஒன்பதாவது படிக்கும்போது நான் வாடகைக்காரில் உட்கார்ந்து ‘மைக்’ பிடித்துக் கொண்டு, வாக்காள ‘பெருமக்களே...’ என்று பேசி தி.மு.க.விற்காக ஓட்டு சேகரித்திருக்கிறேன். காலையிலிருந்து மாலைவரைக்கும் கிராமம் கிராமமாக போய் பிரச்சாரம் செய்திருக்கிறேன். பிறகு இந்த அரசியல் கட்சிகள் பற்றிய அபிப்ராயம் தலைகீழாக மாறியது. ஆகவே அரசியல் நடவடிக்கைகளையெல்லாம் ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு தொடர்ந்து வாசிப்பதில் மட்டும் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.
தீராநதி: என்னுடைய கேள்வி பழந்தமிழ் இலக்கியங்களை தனிப்பாடமாக கற்றீர்களா?
நாஞ்சில் நாடன்: தனியாகப் பாடமாக எடுத்து நான் படிக்கவில்லை. பழந்தமிழ் இலக்கிய அறிமுகம் என்பது நானே தேடிக் கொண்டது. அதற்கு என்னுடைய ஆசிரியர்களும் உதவி இருக்கிறார்கள். நான் பி.எஸ்.ஸி. படிக்கும் போது, வகுப்பு இல்லாதபோது நூலகத்தின் மாடியில் அமர்ந்து படித்துக் கொண்டிருப்பேன். அப்போது கீழே எம்.ஏ. பாடம் நடந்து கொண்டிருக்கும். நான் மேல் இருந்தே அந்தப் பாடத்தை கவனிப்பேன். ஒரு நாள் ஆசிரியர் ‘என்ன பார்க்குற?’ என்றார். ‘பாடம் கவனிக்கிறேன்’ என்றேன். ‘பாடம் கவனிப்பதாக இருந்தால் பின் பெஞ்ச்சில் வந்து உட்கார்ந்து கவனி’ என்றார். உடனே போய் உட்கார்ந்துவிட்டேன். தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரியில் எம்.ஏ. மட்டும் இருந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வேறு எந்தக் கல்லூரியிலேயும் ‘றிநி கோர்ஸ்’ கிடையாது.
டாக்டர் எஸ்.எஸ்.சுப்ரமணியன், டாக்டர். இ.வி.மணி, டாக்டர் அரசு ஆறுமுகம், புலவர் கே.சி.தானு தெ.ந. மகாலிங்கம் என்று எங்கள் கல்லூரியில் தமிழில் திறமை வாய்ந்த நிறைய ஆசிரியர்கள் இருந்தார்கள். பின்னால் நான் பம்பாய்க்கு போய் வாசிப்பை தொடர்ந்த காலத்தில் காரைக்குடி அழகப்பா இன்ஜினியரிங் கல்லூரியில் மேனேஜராக இருந்த ரா. பத்மநாபன் என்பவர் பம்பாய் தமிழ்ச்சங்கத்தில் கம்பன் வகுப்பெடுத்துக் கொண்டிருந்தார். இவர் தமிழ்க்கடல் ராய. சொக்கலிங்கத்தின் மாணவர். அதில் பதினேழு மாணவர்கள் சேர்ந்தோம். வாரத்தில் மூன்று நாட்கள் வகுப்பு. தொழிற்சாலையில் வேலை முடிந்தவுடன் நான் ஒழுங்காக வகுப்பிற்கு போய்விடுவேன்.
உரையே இல்லாமல் மர்ரே ராஜம் அய்யர் போட்டிருந்த கம்பராமாயணம் புத்தகத்தை எங்கள் கையில் கொடுத்து விட்டு, வை.மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் உரையை கையில் வைத்துக் கொண்டு பாடம் நடத்துவார். இந்த பதினேழு மாணவர்கள் என்பது நாட்பட நாட்பட பதினொன்றாகி, ஒன்பதாகி, ஏழாகி, மூன்றாகி, இரண்டாகி கடைசியில் ஒன்றாக ஆனது. அந்த ஒரே மாணவன் நான்தான். கடைசியில் அவர் என்ன சொன்னார். இந்த ஒரு மாணவனுக்காக ஏன் நான் வகுப்பிற்கு வரவேண்டும். ‘நீ வேண்டுமானால் என் வீட்டிற்கு வா’ என்றார். நான் போனேன். முகம், கை கால் அலம்பிவிட்டு வீட்டிற்கு சென்றால் அந்த அம்மா, ஆசிரியர் மனைவி, (எனக்கு மாமி தெரியாது. அம்மா தான் தெரியும்) எனக்கு காபி போட்டு கொண்டு வந்து கொடுப்பார்.
என்ன வாழ்நாளில் ஙிமீst சிஷீயீயீமீமீயை அங்குதான் முதன் முதலில் குடித்தேன். என்னுடைய ஆசிரியர் தீவிர பக்தர். சைவ நெறி, கம்பன் மீது பெரிய ஈடுபாடு. அவர் ராமர் பட்டாபிஷேக படத்திற்கு முன்னால் உட்கார்ந்து தான் பாடம் நடத்துவார். நான் அந்த வயதில் தீவிர நாஸ்திகன். ஆனால் எங்களுக்குள் ஒரு பரஸ்பரம் மரியாதை இருந்தது. அப்படி மூன்று வருடம் பாடம் கேட்டேன். அவருடைய சிறப்பென்னவென்றால் வெறும் கம்பனோடு மட்டும் பாடத்தை நிறுத்திக் கொள்ள மாட்டார். மார்கழி மாதம் என்றால் திருப்பாவை திருவெம்பாவை படிப்போம் என்று அதை சொல்லிக் கொடுப்பார். இப்படி தினமும் ஒரு திருப்பாவை, திருவெம்பாவை பாடலை சொல்லிக் கொடுப்பார். கிட்டதட்ட திருப்பாவை திருவெம்பாவை முழுக்க எனக்கு மனப்பாடம். அதேபோல தேவாரம், திருவாசகம் சொல்லிக் கொடுப்பார்.
கம்பனில் 13 ஆயிரத்துச் சொச்சம் பாடல்களில் ரசிகமணி டி.கே. சிதம்பர நாத முதலியார் இடைச் செருகல் என்று தள்ளிய பாடல்கள் உட்பட சேர்த்து அவரிடம் பாடம் கேட்டிருக்கிறேன். பாடம் எடுக்க உடல் நலம் இல்லை என்றால் அபிராமி அந்தாதி கோளாறு பதிகம், ஜெயதேவர் அஷ்டபதி பாடல் காசட்டுகளை போட்டு கேட்கச் சொல்லுவார். அவருக்கு திருக்குறளில் நல்ல புலமை இருந்தது. சமய இலக்கியம் மீது எனக்கு ஓரளவுக்கு பரிச்சயம் கிடைத்ததற்கு முக்கிய காரணம் ரா. பத்மநாபன்தான். அவர்தான் ‘நாராயணீய’த்தை தமிழ் செய்தார் பின்பு.

தீராநதி : அந்தக் காலத்தில் தி.மு.க. சார்புள்ளவனாக அரசியலில் தீவிரமாக இயங்கி இருக்கிறேன் என்று நீங்கள் சொன்னீர்கள். மிகப் பெரிய பொருளாதார மேதையான டாக்டர் ப. நடராஜன் அவர்களை எதிர்த்து தி.மு.க. சார்பில் பிரச்சாரம் செய்தீர்கள். அன்றைக்கு விடலைத் தனமாக அரசியல் களத்தில் நீங்கள் எதிர்த்தவர் மிகப் பெரிய ஆளுமையானவர். இன்றைக்கு அதை யோசிக்கும் போது நெருடலாக உணருகிறீர்களா? தவறு இழைத்து விட்டோம் என்ற குற்ற உணர்ச்சி மேலெழுகிறதா?
நாஞ்சில் நாடன்: அதாவது 1962_வருட தேர்தல் என்று நினைக்கிறேன். டாக்டர் பா. நடராஜன் என்பவர் எகிப்திய அரசுக்கு பொருளாதார ஆலோசகராக இருந்தார். திருமந்திரத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் அவர். உண்மையிலேயே மேதைதான் அப்போது நான் ஒன்பதாம் வகுப்பு மாணவனாக இருப்பேன் என்று நினைக்கிறேன். அந்தத் தேர்தலில் சிறுவர்கள் தேர்தல் பிரச்சார வண்டிகளின் பின்னால் ஓடுவது, சுவரொட்டிகளை ஒட்டுவது என்று இருந்தபோது, நான் பிரச்சார வண்டியில் மைக் பிடித்திருந்தேன். அந்தத் தேர்தலில் நடராஜன்தான் ஜெயித்தார்.
ஜெயித்த பிற்பாடு அவருக்கு எங்கள் ஊரிலேயே ஒரு வரவேற்பு கொடுத்தார்கள். ஊரைச் சார்ந்தவன் என்ற முறையில் நான் வரவேற்பு உரை ஆற்றினேன். ரொம்ப சின்ன பையன்தான் நான். அன்று பேச எனக்கு சிலர் எழுதியும் தந்தார்கள். கொஞ்சம் நானாவும் பேசினேன். நான் பேசியதை பார்த்துவிட்டு ‘பையன் நன்றாகப் பேசுகிறான்! ஆனால் கொஞ்சம் வழி தப்பி நிற்பதை போல தெரிகிறது?’ என்று ஒரு கருத்தைச் சொன்னார். அதை இப்போது யோசித்து பார்க்கும் போது ரொம்ப அவமானமாகத்தான் கருதுகிறேன். எவ்வளவு பெரிய மேதை? திருமந்திரத்தை தமிழில் படித்து புரிந்து கொள்வதே எவ்வளவு சிரமமான காரியம். அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். ஒரு அரசாங்கத்திற்கு பொருளாதார ஆலோசகராக இருந்தவர். தமிழ் நாட்டிற்கு ‘பிலானிங் திட்டக் கமிஷன் சேர்மேனாக’ வந்தவரை நாம் இப்படி எதிர்த்து செய்திருக்கிறோமே என்று பின்னால் யோசித்து பார்க்கின்றபோது வருத்தமாகத்தான் இருக்கிறது.
தீராநதி : ஒரு காலத்தில் தி.மு.க. கலாச்சாரம் கொண்டு வந்த மேடை நாகரீகம் என்பதற்கு மக்களிடம் ஒரு ஈர்ப்பும், அவசியமும் இருந்தது. அதில் நீங்கள் குறிப்பிட்ட ஈ.வெ.கி. சம்பத் என்பவர் ஒரு முக்கியமான பேச்சாளர். அவரை மறுத்து வரும் பேச்சுகளை கூட நாகரிகமாக மறுப்பவர் அவர் பொய் சொல்கிறார் என்று சொல்லமாட்டார். ‘உண்மைக்கு மாறாக பேசுகிறார்’ என்றுதான் குறிப்பிடுவார். தன் பேசில் கூட ‘பொய்’ என்ற வார்த்தை கலக்க கூடாது என வாழ்ந்தவர். அப்படியான தி.மு.க.வின் மேடை மரபு பிற்காலத்தில் நழுவி கொச்சையாகிவிட்டதே?
நாஞ்சில் நாடன் : அதாவது 1967 காலகட்டத்தில் மேடைத் தமிழ், எழுத்துத் தமிழ் என்று தமிழை ஓரளவிற்கு சமூக பயன்பாட்டிற்கு முன்னெடுத்து சென்றதில் திராவிட இயக்கத்தினுடைய சேவையை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. அன்றைக்கு சினிமா தியேட்டருக்கு போகின்ற ஒரு கல்லூரி மாணவனின் கையில் கூட ஒரு புத்தகம் இருக்கும். புத்தகம் கையில் எடுத்துச் செல்வதை ஒரு பெருமையாக கருத செய்தவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர்கள். மேடைகளில் அவர்கள் தான் புத்தகத்தை பரிசளிக்கச் சொன்னார்கள். புத்தகத்தின் பக்கங்களை மேற்கோளிட்டார்கள்.
நெடுஞ்செழியன் போன்றவர்கள் இலக்கியம் பேசுகின்ற போது ஒன்றரை மணிநேரம் ஆடாமல் அசையாமல் அப்படியே உட்கார்ந்து கேட்க முடியும். அந்த ஆற்றல் அவர்களுக்கு இருந்தது. அவர்கள் நடமாடும் பல்கலைக்கழகங்களாக இல்லாவிட்டாலும் படிப்பாளிகளாக இருந்தார்கள். மேடைக் தமிழை மட்டுமல்ல எழுத்து தமிழையும் அவர்கள் தம்பங்குக்கு முன்னெடுத்துச் சென்றார்கள். ஆனால் என்ன நடந்த தென்றால் அவர்கள் அதை தாண்டி வளரவில்லை. பிறகு இது அலங்காரமாக மாறியது. ‘ஷீஸ்மீக்ஷீளீவீறீறீ’ என்று சொல்லுவோமில்லையா அப்படி மொழியை பயன்படுத்திப் பயன்படுத்தி நொந்து போகச் செய்து விட்டார்கள். அருவருக்க தக்க ஒரு மொழி நடையாக பிற்காலத்தில் அது மாறியது. தமிழ் சினிமாக்களிலேயே திராவிட கலாச்சாரத்தின் மேடை மொழி நடையை கொச்சைப்படுத்துகிற மாதிரியான காட்சிகள் இன்றைக்கு வருகின்றன.
அதன் மூலம் அந்த நடையை கிண்டல் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். அன்றைக்கு திராவிட இயக்கத்தினர் குறைந்த பட்சம் பாரதிதாசனையாவது அறிமுகம் செய்தார்கள். மு.வ.வை அறிமுகப்படுத்தினார்கள். திருக்குறளைச் சொன்னார்கள். புறநானூற்றிலிருந்து பாடல்கள் சொன்னார்கள். அகநாநூற்றிலிருந்து பாடல்கள் சொன்னார்கள். குறுந்தொகையிலிருந்து சொன்னார்கள். இப்படி குறைந்த பட்ச தமிழறிவையாவது மேடைகளில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அந்த மரபு நின்று போய்விட்டது. இன்றைக்கு எந்தத் தலைவனுக்கும் ‘இரண்டு வரி’ சொல்ல முடியும் என்பதை நாம் எதிர்பார்க்க முடியவில்லை.
தீராநதி : தொடர்ந்து உங்களின் படைப்புகளில் உணவு வகைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள். அதுவும் போகிறப் போக்கில் சொல்லாமல் உணவு முறைகளில் புதைந்திருக்கும் செய்முறை, செய்நேர்த்தி, பண்பாட்டுக் கூறுகள், அது சமூகத்திற்குள் எவ்வாறு கையாளப்படுகிறது என்ற கலாச்சார தகவல்களையெல்லாம் பிரக்ஞை பூர்வமாக பதியவைத்திருக்கிறீர்கள். அண்மையில் நீங்கள் எழுதி இருக்கும் ‘யாம் உண்டோம்’ சிறுகதை வரை இது தொடர்ந்து வந்திருக்கிறது. சுந்தரராமசாமி வீட்டில் எதேட்சையாக ஒரு சந்திப்பில் ஜெயமோகனை பார்த்த போது ‘‘நீங்க குலசேகரம் பக்கம் தானே? அந்தப் பக்கமெல்லாம் அவியலிலே மாங்கா போடும் வழக்கம் கிடையாதே’’ என்று பேச்சை சாப்பாட்டின் பொருட்டே தொடங்குகிறீர்கள். ‘அன்னம்’ எதன் பொருட்டு உங்களின் படைப்புகளில் ‘வேள்வி’ பெறுகிறது?
நாஞ்சில் நாடன்: இது ஒரு நினைவிலின்று மனநிலையிலிருந்துதான் உருவாகிறதெ நினைக்கிறேன். அல்லது ஆழ்மனநிலை என்று கூட வைத்துக் கொள்ளலாம். எது பொருத்தமானதோ அதை தேர்ந்தெடுத்துக் கொள்வது உங்களின் சௌகர்யம். இதற்கு காரணம் என்னை என்று யோசிக்கும் போது நான் இளம் பருவத்தில் தாங்கொணா வறுமையை அனுபவத்திருக்கிறேன். இதையெல்லாம் ஃபேஷனுக்காக இன்று சொல்லிக் காட்ட விரும்பவில்லை. அறுவடை காலத்தில் மூன்று வேளைக்கும் சோறு இருக்கும். மாதத்தில் ஓரிரு நாட்கள் தோசைக்கு போடுவார்கள். எங்கள் ஊரில் நெல்லைத் தவிர வேறு பயிர் கிடையாது. கம்மங்கூழ் எங்களுக்குத் தெரியாது. சோளம் தெரியாது. கேழ்வரகு தெரியாது. நாங்கள் அரிசியை நம்பி வாழ்கிறவர்கள். அறுவடையான நாலுமாதத்தில் நெல் காலியாகி விடும். கடனுக்கு நெல் வாங்க வேண்டும்.
இந்த வறுமை என்னை தொடர்ந்து கல்லூரி படிப்பு முடிக்கின்ற வரை தாக்கிக் கொண்டுதான் இருந்திருக்கிறது. ஆகவே சோற்றினுடைய அருமை என்பது எனக்குத் தெரியும். ஒருவரின் வீட்டுவாசலில் போய் நின்று குடிக்க சுடு கஞ்சி கொடுங்கள் என்று கேட்டு வாங்கி சாப்பிடுகின்ற ஒரு எளிய மாணவனின் மனநிலை என்ன என்பது எனக்குத் தெரியும். நல்ல சாப்பாடு என்பதே கல்யாண வீட்டில்தான் கிடைக்கும். 21 கூட்டான் என்று எங்கள் ஊர்பக்கம் சொல்வார்கள். அத்தனை வகை வகையான சாப்பாடுகள் பரிமாறப்படும். கிடைக்குமோ கிடைக்காதோ என்பதற்காக முதல் பந்தியில் சாப்பிட உட்கார்ந்து பாதியிலேயே நான் எழுப்பிவிட பட்டிருக்கிறேன். பல சமயங்களில் இப்படி நடந்திருக்கிறது. ஆக, தொடர்ந்து வறுமை என்பது என்னை தாக்கிக் கொண்டிருக்கிறது. இதுவெல்லாம் சேர்ந்து உணவு மீது ஒரு அபரிமிதமான காதலை, வெறியை, ஒரு விருப்பத்தை _ எந்தச் சொல்வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம்_ எனக்கு ஏற்படுத்தி இருக்கிறது. இப்போது நான் சம்பாதிக்கிறேன். ஓரளவுக்கு சோத்துக்கவலை இன்றிதான் இருக்கிறேன். நினைப்பதை இன்று என்னால் வாங்கிச் சாப்பிட முடியும். ஆனாலும் உணவை என்னால் வீண் செய்ய முடியாது.
அதேபோல பம்பாய் மாதிரியான வெளி மாநிலத்திற்கு சென்ற பிற்பாடு நம் கலாச்சாரம் சார்ந்த உணவுகளின் நெருக்கடி ஏற்படுகிறது. சாதாரணமாக தமிழ்நாட்டுத் தமிழர்கள் கொத்தவரங்காயை விரும்பிச் சாப்பிடமாட்டார்கள். ஆனால் பம்பாய் சென்றால் சாப்பிட்டுதான் ஆக வேண்டும். இங்கு கத்திரிக்காய் சாப்பிடாதவர்கள் கூட பம்பாய்க்கு சென்றால் சாப்பிட்டே தீரவேண்டும். ஆக, இப்படியான நெருக்கடி எந்த வகையான உணவின் மீதும் ஒரு காதலை ஏற்படுத்துகிறது. எந்த வீட்டிற்குச் சென்றாலும் சாப்பிடுகின்ற சாப்பாடு நன்றாக இருந்தால் இன்னும் கொஞ்சம் போடுங்கள் என்று கேட்டு வாங்கிச் சாப்பிடக் கூடியவன் நான். என்றைக்குமே சாப்பாட்டின் முன்னால் நான் கூச்சப்படமாட்டேன். நான் விரும்பி உண்கின்றவன்.
கொஞ்சம் கொச்சையாக சொன்னால் நானொரு நல்ல சாப்பாட்டு ராமன். சாப்பாட்டு ராமன் என்ற அந்த நிலையிலேயே நின்று விடாமல் மேற்கொண்டு அதை பற்றி கேள்விகளை எழுப்பிக் கொண்டு தொடர்ந்து போய் கொண்டிருக்கிறேன். ஒரு பெங்காலி வீட்டில் எப்படி ‘தால்’ தயாரிப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். வங்காளத்தில் தோலுடன் கூடிய உளுந்தை வேக வைத்து அதில் ‘தால்’ செய்து பொரித்த அயிலை மீனை போட்டுக் கொடுப்பார்கள். இதற்கெல்லாம் ஒரு ரசனையை நீங்கள் உருவாக்கிக் கொள்ளவில்லை என்றால் நீங்கள் அதை அனுபவிக்க முடியாது. வேண்டாம் என்று நீங்கள் அதை தவிர்த்தால் அந்த அனுபவத்தினை நீங்கள் தவற விடுகிறீர்கள். நான் அந்த அனுபவத்திற்கு என்னை தயார்படுத்திக் கொள்கிறேன். அதைத்தான் என் எழுத்தில் பதிவு செய்கிறேன். வெறுமனே சாப்பிட்டேன் என்று சொல்லாமல் அந்த அனுபவத்தை வாசகனுக்கு ஏற்படுத்துகின்ற விதத்தில் சொல்லவேண்டும். அப்படித்தான் சொல்லிக் கொண்டு இருக்கிறேன்.
அப்புறம் பயிர் வகைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். காய்கறிகளை பசுமையாக பார்ப்பது எனக்கு பிடிக்கும். காய்கறிகளை வாங்குகிறேனோ இல்லையோ உழவர் சந்தைக்கு போய் காய்கறிகளை தினமும் பார்த்துவிட்டுத் திரும்புவேன். மலர்களை பார்ப்பதை போல கத்தரிக்காய் குவியலாக இருப்பதையும், வெண்டைக் காய் குவியலாக இருப்பதையும் பார்ப்பதென்பது எனக்கு ஒரு கிளர்ச்சி ஊட்டக் கூடிய விஷயமாக இருக்கிறது. நீங்கள் ரோஜாவையும், முல்லையையும், மல்லிகையையும் பார்த்து தான் கிளர்ச்சி அடைய வேண்டுமென்ற அவசியமில்லை. அதற்கு ஒரு வாசனை உண்டென்றால் இதற்கும் ஒரு வாசனை இருக்கிறது. பறித்த உடன் வெண்டைக் காயை முகர்ந்து பார்த்தால் அதற்கு ஒரு வாசனை இருக்கும். பறித்தவுடன் பால் வடிகின்ற புடலங்காய்க்கு ஒரு வாசனை இருக்கிறது. கத்தரிக்காய்களிலேயே எத்தனை ரகம் நம்மிடம் இருந்திருக்கிறது தெரியுமா?
மண்ணை நேசிக்கின்றவனுக்கு, மண்ணினுடைய மக்களை நேசிக்கின்றவனுக்குத்தான் இப்படியான பார்வைகள் இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது.

தீராநதி : நீங்கள் குறிப்பிடுவதைப் போல ஒவ்வொரு காய்கறியிலேயும் பல்வேறு வகைகள் இருந்திருக்கின்றன. இன்றைக்கு ஒரு கை விரலில் அடக்கி விடுகின்ற எண்ணிக்கைகளுக்கு சுருங்கி போய்விட்டன. சிலி நாட்டிலிருந்து பச்சை மிளகாய் வந்த பிற்பாடுதான் ‘அல்சர்’ என்ற புதுவகை நோய் நம் சந்ததிகளுக்கு அறிமுகமாகிறது. பச்சைமிளகாய்க்கு முன்னால் ‘மிளகு’க்கு பழக்கப்பட்டவர்கள் நாம். இப்படி பல்வேறு வகைகளிலிருந்து சுருங்கி ஒன்றை நோக்கி மட்டுமே விதைப்பு, உற்பத்தி, விற்பனை என்பதை நினைத்தால் உங்கள் மனசு கொதிக்கவில்லையா?
நாஞ்சில் நாடன் : இதை பெரிய சமூக இழப்பென்று தான் நான் நினைக்கிறேன் என்றாலும் நமது அல்சருக்குக் காரணம் பச்சை மிளகாய் அல்ல. ஒவ்வொரு மண்ணிற்கும் தோதான காய்கறிகள் நம்மூர்களில் விளைகின்றது. ஆம்பூர் அல்லது ஆற்காட்டில் விளைகின்ற கத்திரிக்காயின் ருசி வேறு. தஞ்சாவூரில் விளைகின்ற கத்திரிக்காயின் ருசி வேறு. நாகர்கோவிலில் விளைகின்ற கத்திரிக்காயின் ருசி வேறு. இப்படி ருசியில் சின்ன வித்தியாசங்கள் இருக்கின்றன. அதன் நிறத்தில் வித்தியாசம் இருக்கிறது. வடிவத்தில் வித்தியாசம் இருக்கிறது. பின்னால் விவசாய ஆராய்ச்சி நிலையங்கள் எல்லாம் வருகின்றபோது மகசூல் மாத்திரத்தையே மனசில் வைத்துக் கொண்டு வீர்ய விதை, வீர்ய பயிர், வீர்ய சாகுபடி என்று தரப்படுத்திவிட்டார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 67 வகையான நெல்கள் பயிரிடப்பட்டதாக ஆய்வாளர் அ.கா. பெருமாள் சொல்கிறார்.
எனக்கே இருபது முப்பது நெல்களின் பெயர்கள் தெரியும். கட்டிச் சம்பா என்று ஒரு ரகம். சுத்தமான சம்பா அரிசி. அது கேரளாவில் பயன்பாட்டில் இருக்கின்ற மட்டை அரிசி இல்லை. நம்முடைய மண்ணுக்கே உரிய வகையை சேர்ந்தது. நம்முடைய சீதோஷ்ணத்திற்கு, நம்முடைய காற்றிற்கு, மழைக்கு தாக்குப்பிடிக்கின்ற ஒரு பயிர் இது. இவர்கள் வேறு பயிர்களை அறிமுகம் செய்து கட்டிச் சம்பாவை அழித்து விட்டார்கள். வல்லரக்கன் என்ற ஒரு நெல் வகை. அரிசி மாவில் செய்கின்ற பலகாரங்களுக்கு பெண்கள் விரும்பி பயன்படுத்தும் அரிசி வகை. தொன்ணூ று நாட்களில் அறுவடை செய்கின்ற ‘அறுவங் கொறுவா’ என்று ஒரு பயிர். இவை எல்லாம் இன்று எங்கே?
இப்படி மண் சார்ந்த பல விஷயங்களை நாம் இன்றைக்கு இழந்தாயிற்று. ‘அரிக்கிதராதி’ என்ற நெல் இன்றைக்கு கிடைக்குமா என்று தெரியவில்லை. ‘அறுவங்குறுவா’ கிடைக்குமா தெரியவில்லை. ‘கல்மணல்வாரி’ என்று ஒரு நெல் வகை. ‘தட்டாரை வெள்ளை’ என்ற நெல்லை எங்கள் ஊர் வடமதியில் விதைப்பார்கள். கார், பசானம் என்று சொல்வார்கள். ஒன்று பொடியில் விதைப்பது. மற்றது தொழியில் விதைப்பது. ‘வாசறுமிண்டான்’ என்ற நெல்லை ஊரில் நடுவார்கள். அந்த அரிசியை சோறு பொங்கி இலையில் போட்டால் பிச்சு வெள்ளைப் பூ மாதிரி வெள்ளை வெளேர் என்று இருக்கும். அதே போல ‘காணம்’ என்ற பயிறு வகை இருந்தது. கொள்ளு என்று இதை சொல்வார்கள். இதை மலையாளத்தில் ‘முதிரை’ என்பார்கள். சங்க இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சுத்தமான தமிழ்ச்சொல்லிது. இதில் கருப்பு, வெள்ளை என்ற நிறத்தில் தனித்தனியாகவும் கருப்பு வெள்ளை இரண்டும் சேர்ந்த நிறத்திலும் இருக்கும். இப்போது வீரிய விதை உற்பத்தி மூலம் தவிட்டு நிறத்திலானது மட்டுமே கிடைக்கிறது. சுவையும் கெட்டுப் போயிற்று.
அதேபோல் தட்டை பயிறு. இதை நாங்கள் பெரும் பயிறு என்போம். இது சிகப்பு, கருப்பு, வெள்ளை என்று மூன்று நிறங்களில் கிடைத்தது. இன்றைக்கு தவிட்டு நிறம் மட்டும்தான். அப்புறம் மொச்சை, கருத்த மொச்சை தென்மாவட்டங்களில் கிடைக்கிறது. கருத்த எள்ளிற்கும் வெள்ளை எள்ளிற்கும் குணங்களில் வேறு பாடு உண்டு. பாகற்காயில் மிதிபாகற்காய் என்று ஒன்று உண்டு. தரையில் படரும். சின்ன குமிழ் மாதிரிதான் இருக்கும். அதை இன்று காண்பதற்கில்லை. இப்படி பல விஷயங்களை நம்முடைய சந்ததிகள் இழந்து கொண்டிருக்கின்றன. நம்மால் இதற்கு என்ன செய்ய முடியும்? புலம்பத்தான் முடியும். நம்மாழ்வார் போன்ற இயற்கை விஞ்ஞானிகளிடம் கேட்டால் கண்ணீர் விட்டு கதறுகின்ற மாதிரி கதை கதையாகச் சொல்வார்.
தீராநதி : நமது நாடு அடிப்படையில் விவசாய நாடு. விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய நமது அரசியல்வாதிகள் அணுஆயுத ஒப்பந்தத்தை தலையில் தூக்கிக் கொண்டு திரிகிறார்கள். சமீபத்தில் விமிஞிஷி ஐ சேர்ந்த நாகராஜன் என்பவர் விவசாயத் தற்கொலைச் சாவுகள் குறித்து மேற்கொண்ட ஆய்வின் முடிவில் 89362 பேர் தற்கொலை கொண்டிருப்பதாக ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறார். 2002க்கு பிறகு 30 நிமிடத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்வதாக புள்ளி விபரம் தெரிவித்திருக்கிறார். இதற்கெல்லாம் ஒரு விவசாய படைப்பாளியாக எப்படி சஞ்சலப்படுகிறீர்கள்? எப்படி வெளிப்படுத்துகிறீர்கள்?
நாஞ்சில் நாடன் : என்னுடைய படைப்புகள் மூலமாகத்தான் இந்த ஆதங்கத்தையெல்லாம் நான் வெளிப்படுத்துகிறேன். சமீபத்தில் ‘யாம் உண்பேம்’ சிறுகதையில் ஒரு விவசாயின் சோகத்தைதான் நான் சொல்லி இருக்கிறேன். தமிழ்நாட்டில் இருக்கின்ற விவசாயிகளுடன் பீகாரில் இருக்கின்ற ஒரு விவசாயின் நிலைமையை ஒப்பிட்டு பார்த்தால் அவனுடைய நிலைமை அதலபாதாளத்தில் இருக்கிறது. இன்றைக்கும் குடிநீருக்காக மூன்று நான்கு கிலோ மீட்டர் நடக்க வேண்டிய நிலை அவர்களுக்கு இருக்கிறது. ஒரு நாளைக்கு இரண்டு சுக்கா ரொட்டி கிடைக்காமல் பட்டினி கிடைக்கின்றவர்கள் அங்கு இருக்கிறார்கள். அவனால் எப்படி தன்னுடைய பிள்ளைகளுக்கு கல்வி கொடுக்க முடியும்? நான் இருபது வருடத்திற்கு முன்னால் சந்தித்த கை வண்டி இழுக்கின்ற ஒரு உ.பி.த் தொழிலாளியிடம் வறுமை குறித்து பேசியபோது ‘‘சாப்பிடுவதற்கான ரொட்டியின் மாவு அளவுக் குறைவாக இருந்தால் ‘சப்ஜி’ யில் காரத்தை ஏற்றிவிடுவோம்’’ என்றார். காரம் அதிகமாக இருந்தால் குழந்தைகள் அதிகமாக தண்ணீர் குடித்து விடுமாம். இப்படித்தான் இருக்கின்றது தொழிலாளிகளின் நிலைமை, விவசாயிகளின் நிலைமை.
பத்து வருடத்திற்கு முன்னால் விற்பனையான சோப்பின் விலை இன்றைக்கு எவ்வளவு கூடி இருக்கிறது? அன்றைக்கு அதே விவசாய பொருளின் விலை இன்றைக்கு எத்தனை மடங்கு கூடி இருக்கிறது என்று ஒப்பிட்டு பார்த்தால் சோப்பின் விலை நான்கு மடங்கு உயர்ந்திருக்கிறது. விவசாய பொருளின் விலை ஒன்னரை மடங்கு உயர்ந்திருக்கிறது. ஒரு பருவத்தில் தக்காளியின் விலை கூடுதலாக இருக்கிறது என்று தக்காளி போட்டால் விலை கிலோ எட்டு அணாவிற்கு இறங்கிவிடுகிறது. அதே போல் வெங்காயளம். முப்பத்திரண்டு ரூபாய் உயர்கிறது என்று பார்த்தால் உடனே இரண்டு ரூபாய்க்கு இறங்கி விடுகிறது. வெங்காயம், உருளைக் கிழங்கும் வட மாநிலங்களில் ஆட்சியையே தீர்மானிக்க கூடியதாகக் கூட இருக்கிறது. ஆக, இங்கே விவசாயத்தை புறக்கணிக்கின்ற ஒரு அரசியல் அமைப்பு தான் நம் நாட்டில் இருக்கிறதென்று எனக்குத் தோன்றுகிறது.
தீராநதி : யதார்த்த வகை எழுத்து என்பது இன்றும் பலருக்கு உபப்பளிக்கக்கூடிய எழுத்தாகவே இருக்கிறது. ரியலிஸம் என்ற சொல்லே ஜெர்மானிய மொழிச் சொல்லான ‘ஸிமீணீறீ றிஷீறீவீtவீளீ’ என்ற பதத்திலிருந்து பெறப்பட்டது. ‘ஸிமீணீறீ’ என்பது யதார்த்தம். ‘றிஷீறீவீtவீளீ’ என்பது ஆங்கில சொல் குறிக்கும் அரசியல் என்ற பொருளிலிருந்து பெறப்பட்டது. இச் சொல்லை முதன் முதலாக ‘பிஸ்மார்க்’ என்பவர்தான் உச்சரித்தார். ஐரோப்பிய அதிகாரம் சமநிலையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கில் அவர் இந்தச் சொல்லை உபயோகித்தார். பிரெஞ்சு நாவலாசிரியரான ‘பால்ஸாக்’ ரியலிஸத்தின் தந்தையென்று அறியப்பட்டவர். அவர் பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்த மிகப் பெரிய மேட்டுக் குடிகளிலிருந்து திருடன், தாசி, என்று விளிம்பு நிலை மனிதர்கள் வரைக்கும் மிகத் துல்லியமாக சித்தரித்தவர். அதே போல க்யுஸ்தாவ் ஃளோபெரின் ‘மாதாம் வொவாரி’ (னீணீபீணீனீமீ ஙிஷீuணீக்ஷீஹ்) ஒரு மகத்தான ரியலிஸ நாவலாகும். தமிழில் ஜெயகாந்தன் இதையட்டி எழுதிய எழுத்தாளராக நம்மால் எடுத்துக் கொள்ள முடியும். அதே போல மலையாளத்தில் தகழி சிவசங்கரப் பிள்ளையைச் சுட்டலாம். இப்படி உயரிய அரசியல் தத்துவார்த்த பார்வையுடன் விழிப்புற்ற இந்த இஸத்தையட்டி தமிழில் எழுதும் பல சமகால எழுத்தாளர்களுக்கு (விதிவிலக்கும் உண்டு) கொஞ்சம் கூட அரசியல் பார்வையே அற்று வெறும் உரையாடலை மட்டுமே எழுதுவது யதார்த்தமான எழுத்தாக இங்க போதிக்கப்படுகிறது. ஒரு சமூகம் ஏன் கல்வி கற்கும் சமூகமாக தொடர்ந்து இருந்து வருகிறது? ஒரு சமூகம் ஏன் தொடர்ந்து வறுமையின் பிடியிலேயே சிக்சிச் சீரழிகிறது? ஒருவன் எப்படி பணக்காரனாக இருக்கிறான்? ஒருவன் ஏன் ஏழையாகவே இருக்கிறான்? பாரதி கூட கஞ்சி ‘குடிப்பதற்கு இதன் காரணம் இதுவென்ற அறியுமிலார்’ என்கிறார். அரசியல் புரிதலோடு கூடிய பார்வையும் எழுத்தில் சேர்ந்து பதியப்பட பட வேண்டாமா?
நாஞ்சில் நாடன் : நீங்கள் குறிப்பிடுவதை போல எல்லாவற்றிற்குள்ளும் அரசியல் என்பது இருக்கிறது. ஒரு முருங்கை மரத்தை பற்றி பேசினாலும் அதற்குள் ஒரு அரசியல் இருக்கிறது. சமகால எழுத்தாளர்களுக்கு ஒரு அரசியல் பார்வை இருக்கிறதா என்பதில் எனக்கு சந்தேகம் இருக்கிறது. அல்லது இருந்தே எழுதுவதற்கு தயக்கம் காட்டுகிறார்களா என்ற கேள்வியும் இருக்கிறது. அரசியல்வாதிகளை, நிர்வாகத்தை எதற்கு பகைத்து கொள்ள வேண்டும் என்ற ஒரு எண்ணம் இருக்கிறது.
எழுத்தாளனுக்கு தினமும் நல்ல செய்தித்தாள் படிக்கிற பழக்கமாவது இருக்கிறதா என்ற ஐயம் வருகிறது எனக்கு. இதை பொதுமைப்படுத்திச் சொல்லவில்லை. ஈழத்தில் இருக்கின்ற மாதிரி ஒரு பிரச்னை இங்கில்லை. ஒரு ஜீவ மரண போராட்டத்தின் நெருக்கடிக்குள் தமிழ் நாட்டு எழுத்தாளன் இல்லை. இவர்களுக்கு தெள்ளத் தெளிவாகத் தெரியும். சூழ்நிலை மாசுப்பட்டிருக்கிறது என்று. சுற்றுச்சூழல் மோசமாக இருக்கிறது என்று. நதிகள் மாசு பட்டிருக்கிறது என்று. தகுதியானவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்று. தகுதியானவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கவில்லை என்று. இந்த அரசியலை நேருக்கு நேர் சந்திப்பதில் சமகால எழுத்தாளனுக்கு ஒரு பயம் இருக்கிறது. போன தலைமுறை எழுத்தாளனுக்கு இருந்த பயத்தை விட சமகால எழுத்தாளனுக்கு இந்தப் பயம் கூடுதலாக இருக்கிறது.
இலக்கியம் என்பது ஒரு பார்வையில் பொழுது போக்கு என்றிருந்தாலும் கூட அதை தாண்டிய ஒரு பயன் நிலை அதற்கு இருக்கிறது. ஆகவே அடிப்படையான சில கேள்விகளை ஒரு கவிதை, ஒரு சிறுகதை, ஒரு கட்டுரை எழுப்ப வேண்டிய தேவை இருக்கிறது. அகவய பயணியான எழுத்தாளனுக்கு இந்தச் சிக்கல்கள் இல்லை. சட்டம் அவனுக்கு ஒரு அச்சமல்ல. ஆனால் யதார்த்தை எழுத வருகின்றவனுக்கு பிரச்னை இருக்கிறது. ஏனென்றால் யதார்த்தம் மூர்க்கமாக இருக்கிறது. இந்த யதார்த்தத்தை நேரடியாக சொல்லியாக வேண்டும். நெத்தியடியாக சொல்ல வேண்டியதாக இருக்கிறது. அப்படி நெத்தியடியாக சொல்வதெல்லாம் யதார்த்தமா என்ற உப கேள்விகளும் பின்னால் வரும். யதார்த்தமும் நமக்கு அளவற்ற சுதந்திரத்தை வழங்கி இருக்கிறது. இந்தச் சுதந்திரத்தை தமிழ் எழுத்தாளன் பரிபூர்ணமாக பயன்படுத்திக் கொள்கிறானா என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய தேவையும் எழுகிறது. நொய்டாவில் 52 உடல்களை தோண்டி எடுத்தார்கள். அவர்களின் கை எலும்பு கிடைக்கிறது. கால் எலும்பு கிடைக்கிறது. tஷீக்ஷீsஷீ கிடைக்கவில்லை என்றால் அதனுடைய காரணங்கள் என்ன? பத்திரிகை செய்திகள் கூறுகின்றன இதில் சிறுநீரகங்கள் கலவாடப்பட்டிருக்கின்றன என்று. அப்போது 52 நபர்களின் சிறுநீரகங்களும் 104 நபர்களுக்கு போய் சேர்ந்திருக்கின்றன.
அப்போது அதை வாங்கியவர்கள் யார்? இதை நடத்தி வைக்கின்ற மருத்துவமனைகள் எவை? அதன் நிர்வாகிகள் யார்? அறுவை செய்த மருத்துவர்கள் யார்? உதவி செய்த செவிலியர்கள் யார்? இவர்களுக்கு எல்லாம் மயக்க மருந்து கொடுத்தவர்கள் யார்? இப்படி விரிந்துக் கொண்டே போக வேண்டும் ஒரு எழுத்தாளனின் சிந்தனை. இது குறித்தெல்லாம் விசாரணை இருக்கிறது. வழக்கு இருக்கிறது. தீர்ப்புகள் வரும் என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். ஆனாலும் இது குறித்து எழுத்தாளனின் எதிர்ப்பு என்ன? உங்களின் வாசகனுக்கு நீங்கள் சொல்லப்போவதென்ன? இந்தப் பொறுப்பு எழுத்தாளனுக்கு இல்லையா? ஆக, இதன் மூலம் பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்கள் கோழைகளாக இருக்கிறார்கள் என்று நாம் சொல்ல வேண்டியது இருக்கிறது. சமீபகால என்னுடைய கதாப்பாத்திர படைப்பான ‘கும்பமுனி’ மூலம் சமூகத்தில் இருக்கின்ற சிக்கல்கள் சம்மந்தமான என்னுடைய எதிர்வினைகளை நான் செய்து கொண்டுதான் இருக்கிறேன். என்னுடைய எல்லா கட்டுரைகளிலும் நான் வெளிப்படையாகவேதான் பேசுகிறேன். சாடுகிறேன்.
தீராநதி : ‘குடி’ என்ற பழக்கம் நம் சமகால சூழலில் ஒரு அவச் சொல்லாக மாற்றப்பட்டிருப்பதைக் குறித்து தொடர்ந்து மூன்று கட்டுரைகள் எழுதி இருக்கிறீர்கள். ‘உண்ணற்க கள்ளை’ கட்டுரையே இறுதி கட்டுரை என்று நீங்கள் குறிப்பிட்டாலும் இன்னும் நீளுமென்று நான் நினைக்கிறேன். ‘கள்’ உண்பது என்பது வெப்பம் தகிக்கும் பூமத்திய ரேகை அருகாமையில் வாழ்கின்ற நமது குடிகளுக்கு பண்பாடு சம்மந்தப்பட்டது என்பதை தாண்டி உடல் நலம் சம்மந்தப்பட்டதாகிறது. கள் ஒரு அருமருந்து ‘பனை மரம்’ தான் நமது தமிழகத்தின் தேசியச் சின்னம். ஆனால் இன்று ‘கள்’ அந்நியமாக்கப்பட்டு கூடவே குற்றமாகவும் மாற்றப்பட்டிருக்கிறது. ஆனால் மதுபான வகைகள் அரசு அங்கிகரிக்கும் ஒன்றாக இன்றைக்கு இருக்கிறது. ‘தரமான’ குடிகாரர்களின் பட்டியலை வெளியிடும்போது ஜெய மோகன் உங்களுக்கு முதலிடம் வழங்கி இருந்தார். 30 ஆண்டுகளுக்கு மேலாக நிதானமான குடிகாரனாக நீங்கள் இருப்பது குறித்தும் எழுதியும் இருக்கிறீர்கள். ஆண் பெண் இருபாலரையும் சேர்ந்து ஆறரை கோடிக்கு சற்று அதிகமுள்ள தமிழக மக்கள் தொகையில் இந்த வருடம் தீபாவளி பண்டிகை நாளில் மட்டும் (பத்திரிகை தகவலின்படி) 60 கோடிக்கு மது விற்பனையாகி இருப்பதாக தெரிய வருகிறது. அரசு இதன் மூலம் தனது வருவாயை அதிக அளவில் குவித்திருக்கிறது. நான் என்ன கேட்க வருகிறேன் என்றால் உங்களைப் போல ‘தரமான’ குடிகாரர்கள் என்பது சொற்ப எண்ணிக்கையை ஒட்டியது. பெரும்பாலான குடித்தனங்களில் ‘குடி’ கலாச்சாரம் என்பது குடும்பத்தைச் சிதைப்பதாக இருக்கிறது. இதை எப்படி நியாயப்படுத்துகிறீர்கள். மெத்தப் படித்த குடிகாரர்களின் அளவீடுகளை வைத்து விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலுக்கும் சேர்த்து நியாயம் உரைப்பது சரியா?
நாஞ்சில் நாடன் : இதில் இரண்டு அடிப்படையான வேறுபாடுகள் இருக்கிறது. ஒன்று குடிப்பவன். இன்னொன்று குடிகாரன். இதில் நான் முதல் வகையைச் சேர்ந்தவன். இன்னும் சொல்லப் போனால் குடித்தவன். குடிகாரன் என்பனை ‘அடிக்ட்’ என்று நாம் எடுத்துக் கொள்ளலாம். குடிப்பவன் என்பவனை குடிக்கின்ற பழக்கமுள்ளவன் என்று நாம் எடுத்துக் கொள்ளலாம். இதில் குடிக்கின்றவன் மொத்த மக்கள் தொகையில் எவ்வளவு? குடிகாரன் என்பவன் எத்தனை சதவீதம் என்று நாம் பிரித்து பார்க்கிறோம். ரோட்டில் விழுந்து கிடப்பவன், பொண்டாட்டியை அடிப்பவன், வாங்குகின்ற சம்பளத்தையெல்லாம் குடித்துவிட்டு வீட்டுக்குப் போகிறவன் என்பவர்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட சதவீதம் மட்டும்தான்.
இவர்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு குடிப்பவனை எல்லாம் குடிகாரன் என்று முடிவுக்கு வந்து தீர்பெழுதலாகாது. இந்தச் சிக்கல் எல்லாவிதமான நுகர் கலாச்சாரத்திலும் இருக்கின்ற ஒன்று. குடிப்பழக்கமே இல்லாத ஒருவன் தினமும் எழுபது ரூபாய் எண்பது ரூபாய் செலவு செய்து ஹோட்டலில் பரோட்டாவும் சிக்கனும் சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு போகவும் செய்கிறான். இவனும் ஒரு வகையில் குடும்பத்திற்கு எதிராக செயல்படுபவன்தான். திரும்பத் திரும்ப என்னுடைய மூன்று கட்டுரைகளிலும் நான் சொல்ல வருகின்ற விஷயம்: இதை அறம் சார்ந்த விஷயமாக பார்க்கவில்லை என்பதும் ஒரு ஒழுக்கம் சார்ந்த விஷயமாக பார்க்கிறேன் என்பதும். இங்கு நீங்கள் குடிப்பதை தோந்தெடுக்கவில்லை என்றால் ரொம்ப நல்லது. குடிப்பதை நீங்கள் விரும்புகிறீர்கள் என்றாலும் ரொம்ப நல்லதே.
‘குடி’ என்ற ஒன்றை பெரிய அளவில் நாம் நம் சமூகத்திற்குள் அறிமுகப்படுத்தி விட்டோம். இது கடந்த 50 ஆண்டுகளில் நம்முடைய நாட்டில் ஏற்படுத்தப்பட்ட விஷயம். இனி திரும்பி போவது முடியாத காரியம். நீங்கள் விரும்பினாலும் திருப்பிப் போக முடியாது. சினிமா பார்த்து கெட்டு போனவர்கள் எத்தனை பேர் நம் சமூகத்தில் இருக்கிறார்கள்? எங்கள் ஊரில் அல்வா வாங்கி தின்னே கெட்டு போனவர்கள் என்று ஒரு பட்டியல் சொல்கிறார்கள்? ஆக, நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் ஒருவனுடைய குடிப்பழக்கத்தை வைத்து அவன் நல்லவனா? கெட்டவனா என்ற நற்பத்திரத்தை வழங்காதீர்கள் என்று தான். நம்முடைய சமண நூல்களும் அதற்கு பிற்பாடு வந்த நீதி நூல்களும் சொல்வதில் ஒரு உண்மை உள்ளது. ‘நஞ்சுண்பான் கள் உண்பானே’ என்கிறது குறள். ‘சான்றோரால் எண்ணப்பட வேண்டாதவர்’ என்றும் வள்ளுவர் பேசுகிறார். அதை நான் மறுக்கவில்லை. இதையெல்லாம் குடியை அதீதமாக கையாண்டு கெட்டுப் போய்விடாதே என்பதற்கான எச்சரிக்கைச் சொல்லாகத் தான் நாம் கொள்ள வேண்டும்.
தீராநதி : ‘நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை’ என்ற கட்டுரை நூலை எழுதி இருக்கிறீர்கள். அது ஒரு இனவரைவியல் ஆவண நூல். அவலா, தோசையா என்ற சொற்பிரயோகத்தை வைத்தே அவர்கள் மருக்கள் தாயவழியை சார்ந்தவரா மக்கள் வழி தாயத்தை சார்ந்தவரா என்பதையெல்லாம் குறிப்பில் உணர்த்தி அம்மக்கள் வாழும் பண்பாட்டினை தெளிவுற பதிவு செய்வதோடு திருமணத்திற்கு முன் மணமகனுக்கு ‘சர்வாங்க சவரம்’ செய்யப்படுவது, சோரம் போன பெண்களை வீட்டு மூலையிலேயே கொன்று புதைப்பது என்ற அதிர்ச்சியுறும் தகவல்களைக் கூட பட்டவர்த்தனமாக பேசுகிறீர்கள். இப்படி நாஞ்சில் நாட்டிற்கென்று தனி கலாச்சாரம் இருப்பதை எழுத்தின் மூலம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறீர்கள். கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை ‘மருமக்கள் வழி மான்மியம்’ என்ற இனவரைவியல் நூல் எழுதி இருக்கிறார். என்னுடைய கேள்வி: ஒரு சமூகத்தை பற்றி எழுதப்படும் இனவரைவியல் நூலென்பது அச்சமூகத்தின் உள் பார்வையாளனாக இருப்பவரால் மட்டுமே எழுதப்பட வேண்டும் என்ற வலியுறுத்தலும், அப்படி உள் பார்வையாளனாக இருந்து பதியப்படும் தகவல்களில் உயர்வு நவிற்சி ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது ஆகவே வெளி பார்வையாளன் எழுதுவதன் மூலமே இவைரைவியலின் மெய்மையை அடைய முடியும் என்ற விவாதமும் இன்றைக்கு உலக முழுவதும் பேசப்பட்டு வருகிறது. அதே வேளையில் வெளிபார்வையாளன் என்பவன் பல பண்பாட்டுத் தகவல்களை பகுத்தறிவு என்ற கண்கொண்டு மட்டுமே அணுகி கலாச்சார அணுகுமுறைகளை கேலிக்குரியதாக மாற்றி தவறாக புரிந்துகொள்ள வழி ஏற்படுத்தி விடுவதும் உண்டு. உள் பார்வையாளனாக நீங்கள் எழுதி அப்புத்தகத்தில் ‘எங்களுக்கே இதெல்லாம் சாத்தியம்’ என்ற உயர்வு நவிற்சி குரல் தென்படவே செய்கிறது. இந்த உள் பார்வை? வெளிப்பார்வை குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
நாஞ்சில் நாடன் : இந்தத் தன்மைகள் நான் பிறந்து வளர்ந்த இனத்திற்கு மட்டும்தான் இருக்கிறதென்று ஆணித்தரமாக நான் சொல்ல வரவில்லை. இந்த இனத்திற்கு இந்தத் தன்மை இருக்கிறது. இந்த சிக்கல் இருக்கிறது என்றுதான் சொல்ல வருகிறேன். இதன் மூலம் பிற இனங்களுக்கும் இந்த மாதிரி சிக்கல்கள், தன்மைகள் இருக்கும் என்பது எனக்கு தெரியும். எதையும் மிகைப்படுத்தி நான் பேசவில்லை. ஒருவேளை புதியதாக நீங்கள் கேள்வி படுவதால் இந்தச் சந்தேகங்கள் வரலாம். மரபுகளில் இருக்கின்ற விஷயங்கள் எப்படி மாறிப்போய் இருக்கிறது. எப்படி திரிந்து போய் இருக்கிறது என்று சொல்வதுதான் என்னுடைய வேலை. மிகைப்படுத்துவதல்ல; இந்தச் சமூகத்தில் நான் பிறந்து வளர்ந்ததினால் உள் பார்வையாளன். ஆனால் நானொரு எழுத்தாளனாக இருப்பதினால் நானொரு வெளிப்பார்வையாளன். இரண்டும் ஒரே ஆள் தான். ஆகையால் அதனுடைய பலமும் எனக்கிருக்கும். பலவீனங்களும் எனக்கிருக்கும். என்னுடைய சமூகத்தில் எனக்கொரு நாற்காலி வேண்டும் என்று எதிர்பார்த்து நான் இந்தக் காரியத்தை செய்யவில்லை.
தீராநதி : ‘ஊதுபத்தி’ என்ற உங்களின் சிறுகதை பெருத்த எதிர்வினையை சந்தித்தது. ‘‘தனது வெள்ளாளச் சாதி வெறியை மீண்டும் நிருபிக்கிறார்’’ என்று குற்றஞ்சுமத்தப்பட்டு அதை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் பாடமாக வைக்கக் கூடாது என்று துணை வேந்தருக்கும் அமைச்சருக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. இந்தச் சாதி திமிர் குற்றச்சாட்டை இடித்துரைத்து ‘ஷிலீஷீuறீபீ ஜிலீமீ கிutஷீக்ஷீ ஙிமீ ரிவீறீறீமீபீ’ என்ற கட்டுரையைக் கூட எழுதி இருக்கிறீர்கள். அதில் புதுமைப்பித்தன், சுஜாதா, சுந்தரராமசாமி, ஜெயமோகன் எல்லோருக்கும் இதுதான் நடந்தது என்று வருந்துகிறீர்கள். ஒரு படைப்பு சாதிய பின்புலத்தோடு வாசிக்கப்படுவதென்பது ஒரு சரியான முறையா? ஆரோக்கியமான போக்கா?
நாஞ்சில் நாடன் : இதை ஆரோக்கியமான போக்கில்லை என்பதுதான் என்னுடைய கருத்தும். உண்மையாக நேர்மையாக எழுத வருகின்ற எவனும் முதலில் தன்னுடைய சாதியை கடந்தாக வேண்டும். சாதியை கடந்ததாக வேண்டுமென்று சொல்கிற போது அவன் தனிமனிதனாக இருந்தால் மட்டுமே அது சாத்தியம். அவனொரு குடும்ப மனிதனாக இருக்கின்ற போது அவனால் எல்லா சந்தர்ப்பத்திலும் சாதியை கடந்தவனாக தன்னை பீற்றிக் கொள்ள முடியாது. அதில் நெருக்கடிகள் உண்டு. என்னை பொறுத்த அளவில் ஒரு எழுத்தாளன் என்பவன் தன்னுடைய எழுத்துக்கள் மூலமாகவோ அல்லது தன்னுடைய செயல்பாடுகள் மூலமாகவோ பிற ஜாதியை இழிவுபடுத்துகிறானா? தன் ஜாதிக்கு மட்டும் வக்காலத்து வாங்கி பேசுகிறானா? தன் ஜாதியே உயர்வானதென்று நினைக்கிறானா? அதன் மூலமாக வன்முறையில் ஈடுபடுகிறானா? அதன் பொருட்டு அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடுகிறானா என்று ஒரு கணக்கெடுத்துப் பார்த்தால் தான் அது நேர்மையானக் கணிப்பாக இருக்க முடியும். தெரிந்தோ தெரியாமலோ நான் வெள்ளாள சாதியில் பிறந்திருக்கிறேன். வேளாண்மை என்பது விவசாய சம்பந்தப்பட்ட சாதி. இது ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வகையான பெயர்களில் வழங்கப்படும். ஆய்வாளர் அ.கா. பெருமாள் தன் ஆய்வின்படி தமிழ்நாட்டில் 66 வகையான வெள்ளாளர்கள் இருக்கிறார்கள் என்கிறார். அதில் ஒரு வகை வெள்ளாளர் குடும்பத்தில் நான் பிறந்திருக்கிறேன். நான் பிறந்த வகுப்பு சிறுபான்மை வகுப்பை சார்ந்த சாதி. எங்கள் சாதியில் ஒரு எம்.எல்.ஏ. வருவது கூட சிரமம்.
ஒரு காலத்தில் நிலவுடைமையாளர்களாக இவர்களில் சிலர் இருந்திருக்கிறார்கள். எல்லா வெள்ளாளர்களும் நிலவுடைமையாளர்கள்அல்ல. 10 சதவீதமானவர்கள் நிலவுடமையாளர்கள் என்றால் 90 சதவீதம் விவசாய கூலிகளாக இருந்திருக்கிறார்கள். ‘சேட்’ களிலும் பிச்சைக்காரர்கள் உண்டு என்பது போல. என் மீது ‘இவன் வெள்ளாளர் சாதிக்கு எதிராக எழுதுபவன்’ என்ற குற்றச்சாட்டும் என் சாதியை சேர்ந்தவர்கள் வைக்கிறார்கள். வெளியில் இருப்பவர்கள் இவன் வெள்ளாளர் சாதிக்கு ஆதரவாக எழுதுகிறான் என்கிறார்கள். ஆனால் ஏதோ இதற்குள் ஒரு அரசியல் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். ஒரு நோக்கத் தோடு என் மீது சுமத்தப்படுகின்ற குற்றச் சாட்டுகளுக்கு நான் பதில் சொல்வதாக இல்லை.

தீராநதி : ‘நேர்காணல்’ என்ற உங்கள் சிறுகதையில் எழுத்தாளர் ‘கும்பமுனி’க்கு சாகித்ய அக்தெமி விருது கிடைக்கிறது. உடன் அவ்விருதை கும்பமுனிய மறுத்து விடுகிறார். அது பரபரப்பில் செய்தியாகி விடுகிறது. ‘எள்ளல்’ தொனிக்கு விதத்தில் கதை நீளுகிறது. ‘நேர்காணல்’ கதை வெளியானது 1998_ம் வருடம். ஆனால் சில வருடங்களுக்கு முன்னால் நாகர்கோவிலில் அமைச்சர் முன்னிலையில் உங்களுக்கு விருது வழங்க முன் வந்தபோது நிஜத்தில் நீங்கள் மறுத்தீர்கள். ஆக, உங்களின் உள்மன சித்திரம்தான் கும்பமுனி மூலம் கதையாகி இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு ‘இயல் விருதின் மரணம்’ என்று ஜெயமோகன் ‘தமிழினி’யில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். இலக்கிய வெளிக்குள் விருதுகளின் இருப்பென்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

நாஞ்சில் நாடன் : தமிழ்நாட்டில் பதினொன்றோ பனிரெண்டோ பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. இந்தப் பல்கலைக் கழகங்கள் எல்லா முதலமைச்சர்களுக்கும் டாக்டர் பட்டம் வழங்குகின்றனர். எனக்கு தெரிந்து நடிகர் விஜய் என்பவருக்கு ஒரு பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கி இருக்கிறது. திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்துவிற்கு இரண்டு பல்கலைக் கழகங்கள் டாக்டர் பட்டங்கள் வழங்கின. நாற்பது வருடங்களாக தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிற ஓர் எழுத்தாளனுக்கு ஏதாவது ஒரு பல்கலைக் கழகம் ஏதாவது ஒரு டாக்டர் பட்டம் வழங்கி இருக்கிறதா? ஒரு பல்கலைக் கழக ‘செனட்’டிற்கு அல்லது துணைவேந்தருக்கு நேற்றைய சமூகத்தையும், இன்றைய சமூகத்தையும், நாளைய சமூகத்தையும் பற்றி சிந்திக்கின்ற சமூக அளவில் செயல்படுகின்ற படைப்பிலக்கியவாதிகள் குறித்து ஏதாவது அக்கறை இருக்கிறதா? இப்படி ஒரு படைப்பாளி இருக்கிறான் என்ற நினைப்பாவது அவர்களுக்கு இருக்குமா? இதே சூழல்தான் பரிசு தருகின்ற நிறுவனங்களிலும் இருக்கிறது.
சிறந்த எழுத்தாளர்களுக்கு இந்த மொழியில் எந்த விருதும் கொடுக்கப்படவில்லை. ஆ. மாதவனுக்கு கொடுக்கப்படவில்லை. சுந்தரராமசாமிக்கு கொடுக்கப்படவில்லை. நகுலனுக்கு கொடுக்கப்படவில்லை. ஒரு மொழியின் உச்ச நிலையில் செயல்படுகின்றவர்களுக்கு வழங்கப்படாமல் அதே மொழியில் தரம் குறைந்து செயல்படுபவர்களுக்கு வழங்கப்படுகின்றது. விருதுகள் இன்று கொடுக்கப்படுவன அல்ல. வாங்கப்படுவன. அதற்கு சாதிப்பலம், பணபலம், அதிகாரபலம் அதிகமாக வேண்டும்.
தீராநதி : மிதவையில் ‘சண்முகம். சதுரங்க குதிரையில் ‘நாராயணன்’. எட்டுத்திக்கும் மதயானையில் ‘பூலிங்கம்’. தலைகீழ் விகிதங்களில் ‘சிவதாணு’. மாமிசப்படைபில் ‘கந்தையா’. என்பிலதனை வெயில் காயும் ‘சுடலையாண்டி’. அப்புறம் ‘கும்பமுனி’. இப்படி ஆண் மையப்படுத்தப்பட்ட படைப்பாகவே உங்களின் ஒட்டுமொத்த படைப்புலகமும் இருக்கிறதே?

நாஞ்சில் நாடன் : நீங்கள் சொல்ல வருவது எனக்குப் புரிகிறது. ஜெயமோகன் தனது விமர்சனத்தில் இதை முக்கியப்படுத்திச் சொல்கிறார். யோசித்து பார்க்கும் போது அது சரிதான் என்று எனக்கு தோன்றுகிறது. அப்படித்தான் அது அமைந்திருக்கிறது. இதை திட்டமிட்டு செய்தேன் என்று எனக்கு சொல்லமாட்டேன் ஒருவேளை என் குண அமைப்பு அதற்கு ஒரு காரணமாக இருக்குமோ என்று தோன்றுகிறது.
தீராநதி : உங்களுடைய உரைநடை இலக்கியங்களை படித்து விட்டு கவிதையை படித்தால் அதில் கவிதைக்கான அம்சம் குறைந்திருப்பதாக நான் நினைக்கிறேன். அது சரியா?
நாஞ்சில் நாடன் : சரிதான் என்று நினைக்கிறேன். நான் கொஞ்சம் கவிதைகள் எழுத முயற்சி செய்தேன். என்னுடைய முதல் காதல் கவிதையின் மீதுதான். ஆனால் எந்தக் காலத்திலும் என்னை நான் கவிஞனாக உணர்ந்ததில்லை. நான் கவிதை எழுத முயற்சித்தாலும் அது கிட்டதட்ட ஒரு செய்யுள் வடிவத்தில்தான் வெளி வருகிறது. ஆகவேதான் தொடர்ந்து கவிதை முயற்சியில் நான் ஈடுபடவில்லை.
தீராநதி : எழுத்தைப் போலவே இசையின் மீதும் காதல் கொண்டவர் நீங்கள். நமது இலக்கிய மரபென்பது இயல் இசை நாடகம் என்று மூன்று வகைபடுத்தப்பட்டிருந்தாலும் ஒன்றிலிருந்து ஒன்றை தனித்து நோக்குவென்பது கடினம். சிலப்பதிகாரம் என்ற காப்பியமே ‘இசைக் குறிப்புகளால் உண்டாக்கப்பட பேரிலக்கிய இசை குறிப்பு’ என்று வீ.க.பா. சுந்தரம் குறிப்பிடுகிறார். படைப்பிலக்கியத்திற்கும் இசைக்குமான உள்ள தொடர்பு தி.ஜானகிராமன் காலம் வரைக்கும் வந்திருக்கிறது. நவீன இலக்கிய காலத்திற்கு பிறகு படைப்பிலக்கியத்திற்கும் இசைக்குமான உறவு அறுந்து விட்டதைப் போல் தெரிகிறதே?
நாஞ்சில் நாடன் : எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. பெரும்பாலானய நவீன இலக்கிய வாதிகள் இசைக்குத் தொடர்பற்றுப் போய் விட்டார்கள் என்றுதான் தெரிகிறது. இதில் திராவிட அரசியலும் குறுக்கிட்டிருக்கிறது. தமிழிசை என்பது கர்நாடக இசை என்ற பெயரில் வழங்கப்பட்டாலும் கூட அது தமிழின் இசைதான். ஆனால் ஒரு காலகட்ட அரசியல் நமக்கு இதை பார்ப்பனர்களின் இசை என்று சொல்லித் தந்திருக்கிறது. இதனால் வெகு ஜனத்தை இந்த இசையிலிருந்து விலக்கி நிறுத்தி விட்டோம். தாளம் என்பது மனிதனின் அடிப்படையான ஒரு விஷயம். சுருதி என்பதும் அப்படிதான். இவையெல்லாம் மொழி மீறிய, பிரதேசங்களை மீறிய, ஜாதியை மீறிய ஒரு தன்மை. பிஸ்மில்லாகானின் ஷெனாய் இசைக்கு நீங்கள் என்ன மொழி சொல்ல முடியும்.
திருஞானசம்பந்தரின் தேவாரத்தை எடுத்துக் கொண்டால் எல்லா பாடல்களும் பண் அடிப்படையில்தான் இருக்கிறது. எந்தப் பண் எந்தக் கர்நாடக இசையாக மாறியது என்பதெல்லாம் இசை அறிஞர் ஆய்வாளர் மம்மது போன்றவர்கள் சொல்கிறார்கள். பெரிய அறிஞர்கள் விரிவாக பேசுகிறார்கள். நாம் ஒரு காலகட்டத்தில் அரசியல் காரணத்திற்காக மரபிசையை புறக்கணித்தோம். ஆனால் சினிமா இசையை புறக்கணிக்கவில்லை. மரபிசையை புறக்கணித்ததால் சினிமா இசை பெரிய அளவுக்கு ஆட்சி செய்ய ஆரம்பித்துவிட்டது. ஆக, நவீன இலக்கியவாதிகள் பலர் இந்த அரசியல், குடும்பச் சூழல் காரணமாக மரபிசைக்கு வந்து சேரவில்லை.
நன்றி: தீராநதி
flow1

கட்டிலை விட்டிறங்காக் கதை - புதுமைப்பித்தன்

(நான் பாளையங்காலில் குளித்துக் கொண்டிருக்கும்போது சில ஏடுகள் மிதந்து வந்தன. உடம்பைத் தேய்த்துக் கொண்டிருந்தவன், ஒன்றை எட்டி எடுத்துக் கவனித்துப் பார்க்க, கதை மாதிரி தெரிந்ததால், கிடைத்ததை எல்லாம் சேகரித்து வாசித்தேன். தேறினது இந்தக் கதைதான். இந்த ஏட்டுக்கு ஆதாரமோ, நான் சாக்கிரதைக் குறைவாக மிதக்கவிட்டுவிட்ட கதையின் முற்பகுதியோ pudu5 இனிமேல் கிடைக்காதாகையால், இது விக்கிரமாதித்தன் கதையென்று வழங்கும் கதைகளில் இதுவரை வெளிவராத பாடம் என்பதுடன் இவ்வாராய்ச்சியை முடித்துக் கொள்ளுகிறேன். தெரிந்தவர்கள் தொடர்க.)
முத்துமோகனவல்லிப் பதுமை என்ற முப்பத்தேழாவது பதுமை சொல்லிய கட்டிலை விட்டிறங்காக் கதை
நேம நிஷ்டைகள் (ஏடுகள் சிதிலமானதனால் எழுத்துத் தெளிவாகத் தெரியவில்லை) செபதபங்கள் யாவும் முடித்து, பார்ப்பனர்களுக்கும் பரிசனங்களுக்கும் கோதானம், பூதானம் வஸ்திரதானம் யாவும் குறைவறக் கொடுத்து, தம் மந்திரிப் பிரதானிகள் சூழ, தோகையர் பல்லாண்டிசைப்ப ஜாம்ஜாமென்று கொலுமண்டபத்திலே புகுந்தருளி, சிங்காதனத்துக்கு அபிடேக ஆராதனைகள் யாவும் முடிப்பித்து, போச மகாராசனானவன் அந்தச் சிங்காதனத்திலே ஏறி அமர்வதற்காகக் காலடி வைப்பானாயினான்.
முப்பத்தேழாவது படியின்மீது அவன் கால் நிழல் பட்டவுடன் முத்துமோகனவல்லிப் பதுமை என்ற முப்பத்தேழாவது பதுமை அட்டகாசமாய்ச் சிரித்து... வாரீர் போச மகாராசரே, உமக்கு இந்தச் சிங்காதனம் அடுக்குமோ, இது விக்கிரமாதித்த ராசாவானவர், பட்டி என்கிற மந்திரியோடு, காடாறு மாதமும் நாடாறு மாதமுமாய் அறுபத்தீராயிரம் வருஷம் வரை, மனு நெறி தவறாது, புலியும் புல்வாயும் ஓரிடத்துறையும் பெற்றி வழுவாது, அபேதமாக, அபூர்வமாக அட்டமா திக்குகளையும் கட்டியாண்டு, மூட்டைப் பூச்சிக்கும் முறைமை வழுவாது நடந்தமை அறியீரோ! அந்த மகாராசனுடைய கீர்த்தி வல்லபங்களிலே ஆயிரத்தில் ஒரு பங்காவது உமக்கு உண்டோ எனக் கை மறித்தது.
போச மகாராசனும், 'ஓகோ இதேது! அதிசயமாகத் தோணுது! மூட்டைப் பூச்சிக்கும் முறைமை வழுவாத செங்கோலாவது!' என அதிசயித்து, அன்று இரவு தான், நடுச்சாமத்திலே, பேயும் உறங்கும் நள்ளிரவிலே, தன் பட்டமகிஷியானவள் சப்ரமஞ்சத்திலே, தாதியர் சிலர் வீசவும், சிலர் பனிநீர் தெளிக்கவும் உறக்கம் செய்யும் சமயத்திலே ஓஹோவெனப் பதைத்தபடி, ஊர்ப் பேய் பிடித்தவள் போலவும், உன்மத்தம் கொண்டவள் போலவும் கூக்குரலிட்டோலமிட, தான் வீரவாள் எடுத்து, அந்தக் கிருகத்தில் அந்த நேரத்தில் ஆரோகணித்துப் பிரவேசித்து, "என் பட்டத்து ராணியே, பாக்கியவல்லியே, நாட்டின் குலக் கொழுந்தே, என்ன உனக்குச் சம்பவித்தது?" என்று கேட்டும் பதில் வராததனால், கட்டிலைத் தடவி, மூட்டையொன்று விழித்து நிற்கக் கண்டு, கட்டைவிரலால் நசுக்காமல், கட்கத்தினால் கொன்ற சேதி நினைவுக்கு வர, திகைத்துப் பதைத்து அருகில் நின்ற மந்திரி சுமந்திரனை விளித்து, "மூட்டையைக் கொன்றதற்குப் பிராயச்சித்தம் உண்டா? மூட்டைக்கு மனு நெறி உண்டா? சொல்லும், சொல்லும்" என்று கேட்க, மந்திரி சுமந்திரனானவன், ஏதேது, தம் தலைக்குத் தீம்பு வந்ததென்று திட்டப்படுத்திக் கொண்டு தெண்டனிட்டு, "ராச்சிய பாரத்திலே பலவிதமுண்டு.
தேசந்தோறும் ராசமும் (ராசம் என்ற சொல், ராச்சியபார முறையைக் குறித்த வழக்கொழிந்த பிரயோகம் போலும்) மாறும்; கையில் வெண்ணெய் வைத்து நெய்க்கு அழுவாருண்டோ ? இப்பேர்க்கொத்த அதிசயங்களையும் சொல்லற்கொத்த அதிமோகனப் பதுமை இருக்கும் போது, பறையறைந்து, பார்ப்பனர்களைக் கூட்டுவித்துச் சாஸ்திர விசாரம் செய்து தேவரீர் திரு நேரத்தை வீணாக்குவாருண்டோ ? நான் சுமந்திரனல்லவா? அப்பேர்க்கொத்த ஆலோசனை சொல்லுவேனா?" என்று தலைவணங்கி நின்றான். "சவாசு, சவாசு, மந்திரி சுமந்திரனாரே! நீர் சொன்னது ஆயிரத்துக்கு ஒரு வார்த்தை! அதைத் தெரிந்துதானே, நாம் உமக்கு மந்திரிப் பதவி தந்தோம்? இந்தாரும் உம் புத்திக் கூர்மைக்கு மெச்சியும், நம் சந்தோஷத்தைத் தெரிவித்தும், தருகிறோம்.
இந்த முத்து மாலையை அதை நீரே நேரே சென்று நும்முடைய பத்தினிக்குக் கொடுத்துவப்பீர்" என்று கட்டளையிட்டுவிட்டுப் பதுமையைப் பார்த்து, வாராய் முத்துமோகனவல்லிப் பதுமையே, உங்கள் விக்கிரமாதித்தன் மூட்டைப் பூச்சிக்கு முறைமை வழுவாது நடந்தமை சொன்னீரே; அதன் வயணமென்ன?" என்று குத்துக்கால் போட்டு, குடங்கையிலே மோவாயை ஊன்றிக் குனிந்து நின்று கேட்டான். அதற்கு அந்த முத்து மோகனப் பதுமையானது, "விக்கிரமாதித்த ராசா கதை என்றால் விடுகதையா விட்டுச் சொல்ல; பொட்டென்று மறக்க? நீர் இந்தப் படியில் இப்படி அமரும்; நான் சொல்லுகிறேன். காது கொடுத்துக் கேளும். இடையிலே கொட்டாவி விட்டால், நட்டாற்றில் சலபானம் பண்ணியவன் பாவம் வந்து சம்பவிக்கும்...
(இதிலிருந்து பத்து ஏடுகளைக் காணவில்லை) ...லே, நாமகள் திலதம் போலும், நாரணன் நாபி போலும், அட்டகோண யந்திரத்தின் மையக் கோட்டை போலும், செம்பாலும் இரும்பாலும் கல்லாலும் கருத்தாலும் கட்டிய நகரம் ஒன்றுண்டு. அதற்குப் பகைவர்கள் வரமாட்டார்கள். பாவம் அணுகாது. பசியும் அணுகாது. அதன் கோட்டை வாசலோ எண்ணூறு யானைகளை வரிசையாக நிறுத்தினாலும், அதன் பிறகும் ஒரு பாகம் இடம் கிடக்கும். அந்தக் கோட்டைக் கதவுகள் வயிரத்தினால் ஆனவை. இரவில் கோடி சூரியப் பிரகாசம் போலச் சுடர்விட்டு, நூற்றிருபது காதத்துக்குப் பகைவர்கள் வந்தாலும் காட்டிக் கொடுத்துவிடும்; பட்டப்பகலிலோ என்றால், அவர்கள் கண்களைக் கூசவைத்துப் பொட்டையாக்கித் திக்குத் தெரியாமல் அலைந்து, முதலைகளும் சுறா மீன்களும், எங்கே, எங்கே என்று நடமாடும் அகழிக்குள் விழுந்து, தம் ஆயுசைப் போக்கும்படி செய்விக்கும்.
இப்பேர்க்கொத்த கோட்டை வாசலை உடைத்தாயிருக்கிறதனாலே, இந்தப் பட்டணத்துக்கு மாந்தை என்று பெயர். கேளாய் விக்கிரமார்க்க அரசனே, இதற்கு இன்னும் ஒரு காரணமும் சொல்லுவார்கள். இந்தப் பட்டணத்து மாந்தர்கள் மன்னர் இட்ட கட்டளையை மறவாது, மறையாது, ஒழுகி வந்ததனால், மந்தைபோல் நடக்கும் மாந்தர் வாழ் சாந்தமாம் நகர் இச்செகதலத்திலுண்டோ ? நீர் ஒரு முறை வாரும், அந்த ஊரைப் பாரும். தேவலோகத்து அளகாபுரியும், குபேரபட்டணமும், பூலோகத்து அத்தினாபுரியும் அதற்கு ஈடாகா. அதில் இல்லாதன இல்லை என்றால் முற்றும் உண்மை, முக்காலும் உண்மை. அந்தப் பட்டணத்திலே, முந்தையோர் வரம்பின் முறைமை வழுவாது, மனு நெறி பிசகாது மன்னவனாம் தென்னவனுக் கிளையான் இணையாரமார்பன், அஜமுகன் என்பான் அரசாட்சி செலுத்தி வந்தான். அவனுக்கு ஐம்பத்தாறாயிரம் பத்தினிமாரும், அதற்கு இரட்டிப்பங்கு வைப்பாட்டிமாரும் உண்டு.
அந்த ஐம்பதினாயிரவரில், அவனுடைய கண்ணுக்குக் கண்ணாக, கட்டிக் கரும்பாக, நகத்திற்குச் சதையாக, பூவுக்கு மணமாக, பத்தினிப் பெண்களிலே பதுமினிப் பெண்ணாய், கண்ணால் பார்க்கவும் மயக்கம் போடும் மோகலாகிரி தரும் - அஜமுகி என்பவள் ஆசைக்குகந்த பட்ட மகிஷி. வாஞ்சைக்குகந்த வஞ்சிக் கொடியாளுக்குப் பிள்ளையே பிறக்காமல், சிங்காதனச் சிறப்புக்கு ஆண் வாரிசே அளிக்கமாட்டேன் என்று தெய்வங்கள் யாவும் ஒன்று கூடிச் சங்கற்பித்தது போலவும், பட்டமகிஷியின் பேரிளம் பெண் பருவத்தையும் வெகு துரிதத்தில் ஓட்டி விரட்டியடித்துக் கொண்டு போவான் போல, காலதேவன், நாட்களை வாரங்களாகவும் வாரங்களைப் பட்சங்களாகவும் பட்சங்களை மாதங்களாகவும் மாதங்களைப் பருவமாகவும் பருவங்களை வருஷங்களாகவும் நெருக்கிக் கொண்டு வரவும், வயிற்றுக்குப் பாரமாகப் பிறந்த வைப்பாட்டிப் பிள்ளைமார்கள் நாள் தவறாமல் படித்தரம் பெற்றுப் போக, பட்டி மண்டபத்தில் முட்டி மோதுவதைக் கண்டு ஆறாச் சினமும் அளவிலாப் பக்தியும் கொண்டவனாகி, அதிவீர சூர பராக்கிரம கேதுவான அஜமுகன் என்ற செகதலம் புகழும் மகிபதி, அவனியில் உள்ள சாத்திர விற்பனர்கள் யாவரையும் கூட்டுவித்து, "ஐயன்மீர்! கடையேன் கடைந்தேற ஒரு வழி அருளல் வேண்டும்" என்று விண்ணப்பித்துக் கொள்ள, சகலகலா வல்லவனும், அட்டமா சித்தியில் கெட்டிக்காரனுமான சித்தவல்லப சிரோன்மணி யொருவன் சபாமண்டலத்தே எழுந்தருளி நிமிர்ந்து நின்று, "புவித்தலம் முழுதும், கவித்தொரு குடைக்கீழ், செவித்தலம் தன்னிற் பவத்துயர் கேளாது செங்கோல் நடாத்தும் அங்கண்மா ஞாலத்து அதிவீர மன்னா, நம் சயனக்கிருகத்தில், வடதிசை கிடக்கும் சப்ரமஞ்சக் கட்டிலின் சாபமே நுமக்குப் பிள்ளைப் பேறு வாயாதது; கட்டிலை அகற்றி, கானகத்தின் கீழ்த் திசையில், கருங்காலியும் சந்தனமும் பின்னிப் பிணைந்து வளர்ந்து நிற்கிறது; அதை வெட்டிக் கட்டிலாக்கிக் கால் நீட்டிப் படுத்தால், பத்தாம் மாதம் ஆண் மகவு நிச்சயம்" என்று சொல்லாநிற்க, அத்துறவிக்குப் பசிப்பிணி போக்க மடமும் மான்யமும் கொடுத்து, சைத்தியோபசாரம் செய்விக்கச் சேடிப் பெண்கள் அறுநூற்றுவரையும் உடனனுப்பினான். பிறகு முரசறைவித்து, 'காட்டிலே கருங்காலியும் சந்தனமும் கட்டித் தழுவி வளர்ந்த மரத்தைக் கொண்டு வந்து தருவோருக்கு ஆயிரம் பொன் பரிசு' என்று பரிசனங்களிடையே சொல்லச் சொல்லி, தச்சர்கள் யாவரையும் அழைப்பித்துக் கட்டில் செய்ய ஆணையிட்டான். காட்டிலிருந்து மரமும் வந்தது. கட்டிலும் செய்து முடித்தார்கள்.
அப்பொழுதுதான் அரசே, நாங்கள் இருவரும் அந்தக் கட்டிலின் குறுக்குச் சட்டத்தின் கீழ் ஈசான திசையில் இருந்த சிறு பொந்தில் குடிபுகுந்தோம். விக்கிரமாதித்த மன்னா வெற்றிவேல் அரசே, நாங்கள் காலெடுத்து வைத்த நேரம், காலன் கரிக்கோடு போட்ட நேரம் போலும்! என்று அந்தப் பெட்டை மூட்டைப் பூச்சி ரெட்டைச் சொட்டுக் கண்ணீர் சிந்தி விட்டு, பட்டியைப் பார்த்துப் பெருமூச்சுவிட்ட விக்கிரமார்க்க மகாராசாவை நோக்கித் தன்னுடைய துயரக் கதையைத் தொடர்ந்து சொல்லலாயிற்று.
     தச்சன் வீட்டுத் தடுக்கின் இடுக்கில் பசிக்கு வேளாவேளை எதுவும் கிடைக்காமல், தச்சக் குழந்தைகளின் ஆள்காட்டி விரலுக்கும் கட்டை விரலுக்கும் பயந்து நித்திய கண்டமும் பூர்ண ஆயுசுமாகத் தவித்து வரும் நாளில், சந்தனக் கருங்காலி சப்ரமஞ்சக் கட்டில் அதிர்ஷ்டம், எங்களுக்குத் தந்த பேருபகாரமாக, தெய்வம் கொடுத்த வரமாக, எங்களை வாழ்வித்தது. பிறகு கேட்பானேன்? மன்னா, மல்லிகை மொக்கும், பனிநீர்ச் சந்தனமும், பக்குவமான ராச ரத்தமுமே எங்களுக்குக் கிடைத்துவந்தன. என் கண்ணுக்குக் கண்ணாளரும் மூட்டை வம்ச மன்மதனுமான என்னுடைய கட்டழகன், கருநாவற்பழம் போலும், காட்டீச்சைப் பழம் போலும், முதிர்ந்து கனிந்த களாப்பழம் போலும், மேனி பொலிந்து, வண்ணம் மிகுந்து, நடை நிமிர்ந்து என் உயிரைக் கொள்ளை கொண்டதுடன், மாந்தை நகர் மூட்டைக் கதிபதி காட்டு வீரப்பன் என்ற விருதெடுத்து அண்டாண்ட புவனங்களையும் கட்டியாண்டார். கோவணாண்டிகள் குபேரபட்டணத்து வாரிசாகப் போன கதையாக நாங்கள் புகுந்து விட்டாலும், தெய்வம் கொடுத்த திருவரத்தால் நியம நிஷ்டைகள் பிறழாது, ஆசார சீலம் அகலாது வாழ்ந்துவரும் நாளில், ஒருநாள் என் கணவர் முகம் சோர்வுற்று, நலங்குலைந்து, முடுக்கில் ஒண்டிக் கிடந்ததைக் கண்ணுற்று, "மூட்டைக்கரசா, என் ஆசைக்குகந்த ஆணழகா, கவலை என்ன?" என்று கால் பிடித்துக் கேட்டேன். அதற்கு அவர், "என் பத்தினிப் பெண்ணே, அருந்ததியே, புத்திரப் பேறு வாய்க்காவிடில் நம்முடைய ராச்சியம் சீரழிந்து கெட்டுக் குட்டிச் சுவராகப் போகுமே. க்ஷேத்திராடனம் செய்வோமா, தீர்த்த விசேடம் தரிசித்து வருவோமா என்று கருதுகிறேன்" என்றார். நான் அதற்கு, "அரசே, நேற்றிரவு நான் பசியாற்றப் பவனி சென்றபோது பட்டமகிஷி, மன்னவன் தங்கபஸ்பம் உண்டதனால் உள்ள அருங்குணங்களை வர்ணித்துக் கொண்டிருந்தாள். நீர் போய், மன்னவன் துடையில் நாலு மிடறு ரத்தம் பருகிவாரும். பிறகு யோசிப்போம்" என்றேன். என் கணவரும் என் புத்திக்கும் மெச்சி, "கெட்டி கெட்டி! நீயொருத்தியே, இந்த ராச்சியத்திலே எனக்கு ஏற்பட்ட பட்டகிஷி. இனிமேல் எனக்கு மந்திரி ஏன்?" என்று என்னைக் கட்டித் தழுவிவிட்டு வெளியே சென்றார். நானும் என் வாயில் திருடிக் கொணர்ந்த சந்தனத்தைப் பூசி, வாசனையிட்டு அலங்கரித்து என் மன்மதனார் வரவுக்காக காத்திருதேன். கணப்பொழுது கழிந்ததோ இல்லையோ, என் கணவனார் பகையரசரைக் கண்ட பட்டாளம் போலும், மந்திரவாதியைக் கண்ட தந்திரப் பேய் போலும் திடுதிடு என்று ஓடிவந்தார். நானோ பதறிப் போய் என்ன என்ன என்று பயந்து அவரைக் கட்டித் தழுவிக் கொண்டேன். "பெண்ணே, என் பதுமினிக் கண்ணே! பதறாதே. பெண் புத்தி கேட்பவன் பின்புத்திக்காரன் என்று சொல்லுவார்கள். அது வாஸ்தவமாகப் போய்விட்டது. ஆனால் உன் தாலிப் பாக்கியத்தால் நான் இன்று தப்பிப் பிழைத்தேன். நீ பத்தினி என்பதற்கு இது ஒன்றே போதும். முதலில் நம் ராச்சியபாரத்துக்கு ஒரு மந்திரியை நாளை காலையிலேயே அமர்த்தி வைத்திவிட்டுத்தான் மறுகாரியம் பார்க்க வேண்டும்" என்றார். "அது கிடக்கட்டும், அரசே! நாளை விஷயம் நாளையல்லவா கவனிக்க வேண்டும். இன்னும் நாளை வர நாழிகை எத்தனையோ கிடக்கிறதே. நடந்த கதை என்ன இப்பொழுது சொல்லலாமே?" என்று நான் கேட்டேன்.

     அதற்கு அவர், "இப்பொழுது நான் போன நேரம், சகுனப் பிழையோடு, நேரங்கெட்ட நேரமுமாகும். கண்ணை மூடிக்கொண்டு போகவேண்டியதாப் போச்சு. என்னடா கர்மகாண்டம் என்று பகவத் கீதையில் நாலு சுலோகத்தை உச்சரித்துக் கொண்டே காலிருக்கும் இடம் என்று நினைத்துக் கொண்டு உத்தேசமாகச் சென்று கடித்தேன். அது பிருஷ்ட பாகம். என்னவோ சுருக்கென்றதே என்று மன்னன் எழுந்திருக்க, நான் சற்று விலகாமற் போயிருந்தால் நசுங்கியே போயிருப்பேன். மன்னன் அசங்க, மகாராணி கைகளைக் கட்டிலிலே ஊன்றினாள். அவளுடைய மோதிரத்துக்கிடையில் ஏறி ஒளிந்துகொண்டேன். பிறகு மன்னனும் ராணியும் கட்டிலைத் தேடுதேடென்று தேடினார்கள். அவர்கள் இருந்த நிலையை என்னால் பார்க்க முடியாமல் கண்களை மூடிக்கொண்டே காயத்திரி ஜபித்துக் கொண்டு இருந்தேன். பிறகு கட்டிலில் உட்கார்ந்துகொண்டு சல்லாபமாகப் பேசுகையில், "மூட்டையாக இருக்கும்" என்றாள் பட்டத்து ராணி. அதற்குக் கீர்த்திவாய்ந்த அந்த மகிபதியானவன், "பெண் புத்தி என்பது பின்புத்தி என்ற ஆன்றோர் வாக்கு உன் விஷயத்தில் முற்றும் பொருந்தும். செகதலம் தாங்கும் மகிபதி கட்டிலில், பட்ட மகிஷிக்குத்தான் இடமுண்டேயல்லாமல் மூட்டைப் பூச்சிக்கு இடம் உண்டா? விவரம் தெரியாமல் பேசுகிறாயே! அதிருக்கட்டும். இந்த மாதம் மாதவிடாய் நின்றுவிட்டதா?" என்று கேட்டான். அதற்கு அவள், "அரசர்க்கு அரசே, தாங்கள் சொல்லுவது என் விஷயத்தில் முற்றும் பொருந்தும். நான் பெண்தானே? இருந்தாலும், மாதவிடாய் குறித்துத் தாங்கள் கேட்டது அவசரப்பட்ட கேள்வி. கட்டில் வந்து இருபத்தைந்து நாளும் பதினெட்டு நாழிகையுந்தான் கழிந்திருக்கின்றன; அதற்குள் எப்படி நிச்சயமாகச் சொல்ல முடியும்?" என்று சொல்லிக் கொண்டே கட்டிலில் மீண்டும் கைகளை ஊன்றினாள். நான் இதுதான் சமயம் என்று தப்பி ஓடி வந்து விட்டேன் என்று சொல்லிவிட்டு, நெற்றியில் வடிந்த வியர்வையை ஆள்காட்டி விரல் கொண்டு வடித்து, 'சொட்டி' தரையில் முத்துப் போல் விழுவதைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, "என் அருமைக் கதிர்ப்பச்சையே, என் ஆட்சியின் அணிகலனே, நெஞ்சு 'படக்குப்படக்கு' என்று அடித்துக் கொள்ளுகிறது. உன் மடியில் தலையைச் சற்றுச் சரிக்கிறேன்" என்று படுத்துக் கொண்டார். நான் வெளியே உலாவச் சென்றிருந்தபோது திருடி எடுத்துக் கொண்டு வந்திருந்த பனிநீர் தெளித்து வீசினேன். கண்ணயர்ந்தாற்போல் படுத்திருந்தார். எனக்கோ, அவர் ரத்த பானம் பண்ணினாரா, தங்கபஸ்பம் கலந்த ரத்தம் எப்படி இருக்கிறது என்று கேட்டுத் தெரிந்துகொள்ள ஆவல். மெதுவாக அவரை உசுப்பிக் கேட்க, என் மூட்டைக்கு அதிபதி சொல்லுவார்:
     "கேட்டாயோ பத்தினியே, ரத்தம் உண்டது நினைவிருக்கிறது, ஆனால் ருசி நினைவில்லை; பயத்தில் மறந்தே போச்சு. நாளை காலையில் நமக்கு ஒரு மந்திரியை நியமித்த பிற்பாடுதான் அந்தக் காரியத்தைக் கவனிக்க வேண்டும்; அது நம்முடைய ராச்சியத்துக்குட்பட்ட எல்லையானாலும் அன்னிய அனுபோகமாச்சே, ஆருயிருக்கு அச்சமாச்சே! மந்திரி சொல்லாமல் தந்திரம் பண்ண முடியுமா?" என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் படுத்துக்கொண்டார். எனக்கோ ருசி எப்படி என்று தெரிந்துகொள்ளத் துடியாய்த் துடித்தது. புருஷதிலகத்தின் சிரசை மெதுவாகத் தூக்கி ஆடாமல் அசங்காமல் வைத்துவிட்டு எங்கள் அரண்மனையைவிட்டு வெளியே வந்தேன். மெதுவாகப் படுத்துக் கிடந்த தோள்பட்டையண்டை நெருங்கினேன். இருந்தாலும் சங்கோசமாக இருந்தது. பர புருஷனல்லவா? தொடாமல் எப்படி ரத்தம் பருகுவது? என் ஆசைக் கணவர் என்னை அருந்ததி என்று அழைத்தது ஞாபகம் வர, ஓடோ டியும் திரும்பி வந்து படுத்துக் கொண்டேன். கற்பிழப்பது பஞ்சமாபாதகங்களில் ஒன்றல்லவா? பெண் புத்தி பின்புத்திதானே? இந்தச் சமயத்தில் அது சற்றே முன்புத்தியானது, பூர்வ ஜன்ம வாசனைதான்.

     மறுநாள் காலை என் மூட்டையழகர் நியம நிஷ்டைகளை எல்லாம் முடித்துவிட்டு, எங்கள் அரண்மனை முற்றத்திலே சற்று நேரம் கொலுவீற்றிருந்தார். வெயில் 'சுள்' என்று காய்ந்து வெளி வாசலை எட்டியவுடன், வழக்கம் போல நாங்கள் எங்கள் ராச்சியத்தைப் பரிபாலனம் பண்ணிவரப் பவனி புறப்பட்டோ ம். யமன் திசையில் கொஞ்ச தூரம் போகையிலே, வாடி வதங்கித் தள்ளாடி நடந்த மூட்டைப்பூச்சி ஒன்றைக் காண, நான் சங்கோசப்பட்டு என் கணவரின் பின்புறமாக ஒதுங்கி நின்றேன். உடனே என் கணவரானவர், அட்டகாசமாக ஆரோகணித்து நின்று, "அகோ, வாரும் பிள்ளாய், தள்ளாடித் தவிக்கும் புதியவரே, உமக்கு எதிரே நிற்பவர் யார் என்று தெரிந்துகொள்ளக் கண் பொட்டையாங் காணும்! நாம் இந்த மூட்டை ராச்சியத்துக்கு மணிமுடி தரித்த மன்னவன் காணும்; காலில் விழுந்து தெண்டனிட்டு நமஸ்காரம் செய்யும். நாம் உமக்கு உயிர்பிச்சை தந்தோம்; அஞ்சாதீர்" என்றார். அதற்கு அந்தப் பரக்கழி மூட்டைப்பூச்சி, 'அக் அக்' என்று சிரித்து, "முடிமன்னரே, நீர் செங்கோல் நடத்த மருந்துக்குக்கூட பரிசனங்கள் உம் ராச்சியத்தில் கிடையாதா? நானும் நாலு நாழிகையாகச் சுற்றிச் சுற்றிப் பார்க்கிறேன்; சுஜாதி வர்க்கத்தில் ஒருத்தரையும் காணவில்லையே!" என்றது. மீசை கோபத்தில் துடித்தாலும் அடக்கிக் கொண்டு, "உம்முடைய முதல் பிழை பொறுத்தோம். பரிசனங்கள் இல்லாவிட்டால் ராச்சியம் ஆள முடியாது என்று எந்தச் சாஸ்திரத்தில் படித்தீர்? நாங்கள் ஆண்டுகொண்டிருப்பதைத்தான், இதோதான் நேரில் பார்க்கிறீரே, நமக்கு ஒரு மந்திரி தேவை. உமக்கு வேலை பார்க்க இஷ்டமா?" என்று என் கணவர் அதட்டிக் கேட்க அந்தப் பரக்கழி காலில் விழுந்து 'அபிவாதயே' சொல்லியது; அத்திரேய கோத்திரமாம்; அஷ்டசஹஸ்ரம்; நாலு சாஸ்திரமும் ஆறுவேதமும் படித்த வைதிக வித்து; ஆனால் பிரம்மசாரி. புராதன காலத்திலிருந்தே அமாத்தியத் தொழிலில் பிரக்கியாதி பெற்ற குடும்பமாம்; மந்திரி வேலையையும் போக ஒழிந்த வேளைகளில் வைதிக கர்மாக்களையும் செய்து கிடப்பதற்காக, அவனைத் திட்டம் பண்ணி அமர்த்தினார்.

     காலை எழுந்தவுடன் கொலு மண்டபத்திலிருந்து என் மன்னர் செங்கோல் செலுத்துவது கண் நிறைந்த காட்சியாக இருக்கும். "அகோ வாராய் மதிமந்திரி! மாதம் மும்மாரி பெய்து வருகிறதா?" என்று கேட்பார். அமாத்திய குலதிலகமான மந்திரி சுமந்திரனும், "ஆம் அரசே, நுங்கோலே செங்கோல்" என்று தெண்டனிட்டுத் தெரிவிப்பான். பிறகு இரண்டு பேருமாய் வெளியே போய் ராச்சியத்தைப் பரிபாலனம் பண்ணிவிட்டு வருவார்கள். இப்படி வெகு காலமாக அரசாட்சி பண்ணி வந்தோம்.

     அப்படியிருக்கையில் ஒரு நாள் மந்திரி சுமந்திரனானவன், "ராஜ்யம் என்றால் பரிசனங்கள் இருக்க வேணும். அவர்கள் வந்து திறை கொடுக்க வேணும்; நாம் இருந்த இடத்தைவிட்டு அசையாமல் அலங்காமல் ராஜ்யபாரம் பண்ணவேணும்; அதுதான் மன்னனுக்கு அழகு; மேலும் பட்டமகிஷியாருக்குச் சேடிப் பெண்கள் வேண்டாமா? தன்னந்தனியாக எத்தனை நாள்தான் தாமே சீவி முடித்துச் சிங்காரித்துச் சிரமப்படுவார்கள்? நான் போய்ப் பரிசனங்களைக் கூட்டி வருகிறேன்" என்று சமுகத்தில் செப்பியது; மன்னனும் என்னைப் பார்த்துச் சரிதானே என்று தலையசைத்தார்.

     எங்கள் விருப்பம் தெரிந்ததுதான் தாமதம். அந்த விவேகியான மந்திரி கணப்போதில் கோடானுகோடி பரிசனங்களைக் கட்டிலில் கொண்டுவந்து நிரப்பிவிட்டது. எனக்கு அறுபதினாயிரம் சேடிப் பெண்கள். எனக்குக் களைப்பாயிருந்தால் எனக்குப் பதிலாகக்கூடச் சுவாசம் விடுவார்கள், சாப்பிடுவார்கள் போலிருக்கிறது. அவ்வளவு பணிவிடை. இந்த மாதிரியாக ராச போகத்தில் இருந்தபோது ஒருநாள் நான் என் சேடிப் பெண்களுடன் ரத்தபானம் செய்யப் போனேன். ராணியின் தோள்பட்டையை உறிஞ்சிப் பார்த்தேன். ரத்தம் வேற்றாள் மாதிரி ருசி வேறாக இருந்தது. ஆண்களே இப்படித்தான் என்று மனம் கசந்து கணவர் மீதும் கோபம் வர ஊடலுடன் வந்து அரண்மனைக்குள் ஒண்டி இருந்தேன். அவருடன் பேச்சுக் கொடுக்கக் கூடாது, அவரும் ஒரு புருஷந்தானே என்று இருந்தேன்.

     அச்சமயத்தில் என் கணவர் படபடவென்று உள்ளே ஓடிவந்தார்.

     "இந்த மானிட வம்சத்திலேயே யோக்கியமான பெண்ணைப் பார்க்க முடியாது போலிருக்கிறது! நான் இன்று போய் ரத்தபானம் செய்ய முயன்றேன். ருசி வேறாக இருந்தது. என் பத்தினியே, நீயே பாரு, மனித ஜந்துக்கள் எவ்வளவு கேவலம்!" என்று அவர் சொல்ல, எனக்குக் கோபம் பின்னும் அதிகமாயிற்று. அவர் பிற பெண்ணையும் என்னைப் போல் ஸ்பரிசித்துவிட்டு, ஆள்மாறாட்டமாகத் தப்பு நினைப்பு வேறு வைத்துக்கொண்டு பெண்பழி வேறு சுமத்துகிறார். எனக்கு அன்று ரத்த ஆசை இருக்கத்தான் செய்தது. கண்மூடித்தனமாகப் போய்ப் பிற புருஷனைத் தொட்டேனா? குருட்டுத் தனமாக நடந்துகொண்டதோடு மட்டும் அல்லாமல் பெண் பழி வேறு சுமத்தினால் யாருக்குத்தான் கோபம் வராது? பேசாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டேன். பெண்கள் மீது அவருக்கு இருந்த அபார கோபத்தினால் ஊடலாக்கும் என்று நினைத்துக் கொண்டு வெளி வாசலுக்குப் போனார். அமாத்திய சுமந்திரன் ஓடோ டியும் வந்தான். "அரசே, அரசே, நாம் நினைத்தது வீண்தோஷம். ராச்சியம் கைமாறி இருக்க வேண்டும்; கட்டிலில் படுத்துத் தூங்குவோர் ரெண்டு பேருமே வேறு" என்று தெண்டனிட, என் ஊடல் தணிய, அவர் சினம் ஆற, நாங்கள் சமாதானமானோம். எப்படியிருந்தாலும் தொட்டுத் தாலி கட்டின நேசம் போகுமா?

     நாங்கள் இருவரும் சயனித்துக் கண்ணயர்ந்துவிட்டோம். நடுச்சாமம் இருக்கும். எங்கள் கொலு மண்டபத்தில் கடல் பொங்குவது போலப் பெரிய இரைச்சல் கேட்டுத் திடுக்கிட்டு விழித்தோம். மன்னர் அது என்னவென்று கேட்டுக்கொண்டே வெளியே போனார். நானும் தொடர்ந்து போய்க் கதவுக்குப் பின்பக்கமாக ஒதுங்கி நின்று கேட்டேன்.

     எங்கள் பரிசனங்கள் எல்லாம் கூடியிருந்தார்கள். அவர்களில் மூப்பும் மொய்ம்பும் மிகுந்த அறிவாளி ஒருவர், மன்னர் முன்சாஷ்டாங்கமாகத் தெண்டனிட்டு, "மன்னாதி மன்னா, செகதலம் புகழும் மகிபதி, எங்களுக்கு உயிர்பிச்சை அருள வேண்டும்; முட்டைக் கடி பொறுக்காமல், கட்டிலை வெந்நீரிலிட அங்கே உத்தரவகிவிட்டது. எங்களை எப்படியாவது ரக்ஷிக்க வேணும்" என்று கெஞ்சினார்.

     மந்திரிமேல் மன்னருக்குக் கோபாவேசம் பொங்கியது.

     "அட அப்பாவிப் பிராமணா, அமாத்தியன் என்று சொல்லிக் கொண்டு என் ஆளுகைக்கே ஆபத்தைக் கொண்டுவந்து விட்டாயே! பரிசனங்கள் இல்லாத காலத்தில் நாங்கள் சந்தோஷமாக ராச்சியபாரம் பண்ணவில்லையா? இப்பொழுது இவர்களை எல்லாம் கூட்டிக் கொண்டு வந்து கொல்லப் போவதும் அல்லாமல், எனக்கும் என் பத்தினிக்கும் பிராணபத்தைக் கொண்டுவந்துவிட்டாயே. நாட்டைவிட்டு ஓடிய ராசனைப் பற்றிக் கேள்விப்பட்டதுண்டா? வா, போய் ஒற்று விசாரித்து வருவோம்" என்று அவரையும் அழைத்துச் சென்றார்.

     விக்கிரமார்க்க மகிபதியே, அவரைக் கடைசியில் உயிரோடு பார்த்தது அதுவே. மன்னர் மன்னவா! எனக்குத் தாலிப் பிச்சை தரவேண்டும். அவருடைய உடல் நசுங்கிக் கிடந்தது இன்னும் என் கண்முன் நிற்கிறதே, தெய்வமே! அவர் உயிரைக் கொடும். அல்லது நான் உமது ஈட்டியில் கழுவேறி உயிரை மாய்த்துக் கொள்ளுவேன் என்று அந்த மூட்டை பத்தினியானது விக்கிரமார்க்க ராசனுடைய ஈட்டி முனைமேல் ஓடி ஏறி நின்று, தன் உடல் போதுமான கனமில்லாமையால் உயிர்விட முடியாமல் தவிக்க, மன்னர் மன்னவனும் அதற்கு அபயம் அளித்து, "பெண்ணே, பயப்படாதே; நாங்கள் இப்பொழுதுதான் காடாறு மாதம் தொடங்கியிருக்கிறோம்; உன் புருஷன் உயிரை மீட்டுத் தருகிறோம்" என்று உத்தாரம் கொடுத்து விட்டு, மன்னர் மன்னவன் பட்டியைப் பார்த்து, "வாரும் பிள்ளாய், நும் யோசனை என்ன? கூடுவிட்டுக் கூடுபாய்ந்து காரியம் கூட்டுவோமா அல்லது மந்திரவாள் எடுத்துக் கதையை முடிப்போமா?" என்று கேட்க, அதற்குப் பட்டியானவன் தெண்டனிட்டு வணங்கி, "சமுகத்திற்குத் தெரியாததை நான் என்ன புதிதாகச் சொல்லப் போகிறேன்? மோசம் செய்த தாசிப் பெண்ணைக் கூடுவிட்டுக் கூடு பாய்ந்துதானே பரிசு கொடுத்தோம்? மற்றும் மந்திரவாளைத்தான் இரண்டு முறை உபயோகித்துவிட்டோ மே; ஒரே ஒரு செப்பிடு வித்தையைத் திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டிருக்க ஜனங்களுக்குப் பிடிக்குமோ? வேதாளத்தைக் கூப்பிட்டுத்தான் கேட்டுப் பார்க்க வேணும்" என்று சொல்லி வாய்மூடு முன், "ஆ, ஆசைப் பத்தினியே" என்று கூவிக் கொண்டு ஒரு மூட்டைப் பூச்சி ஓடிவர, பெண் மூட்டைப் பூச்சியும் உடல் பூரித்துத் தனக்கு வைதவ்யக் கோலம் நீங்கியது விக்கிரமார்க்க சமுகப் பாக்கியத்தால் என்று நினைத்து அவர் காலில் விழுந்து வணங்கும்படி கணவனிடம் சொல்ல, "அகோ மூட்டை அரசனே! நீர் தப்பிய விதம் எப்படி" என்றார் விக்கிரமார்க்க மன்னன்.

     "விக்கிரமார்க்க மகிபதி, நானும் என் மந்திரி சுமந்திரனும் காரியம் விசாரிக்கச் சென்றபோது படுத்திருந்தவர் விரலை நீட்ட, என் ராச்சியத்துக்கே அழிவு தேடின அமாத்தியன் அதில் சிக்கி, வினைக்கேற்ற தண்டனையைப் பெற்றான். நான் தப்பிவரத் தாமதமாயிற்று. அதற்குள் இவள் உங்கள் உதவி நாடினாள். எனக்குத் தங்கள் நேசம் கிட்டியது. இனிமேல் நம் ராச்சியம் உங்களுடைய குடை நிழலில் சிற்றரசாக ஒதுங்கி வாழும்" என்று தெண்டனிட்டது.

     காடாறு மாதத்தை இனி எப்படிக் கழிப்பது என்ற விசாரம் மிகுந்தவனாக, விக்கிரமார்க்க மகாராசா, அஜபுத்தி நாட்டு அராஜகத்தை ஒடுக்க எண்ணுவானாயினான்.

     அதற்கும் இடம் இல்லாமற் போயிற்று. "அன்று கட்டிலில் படுத்திருந்த வேற்றாள் வேறு ஒருவருமில்லையாம்; அஜபுத்தி ஆசைப்பட்டுப் பெற்ற பட்டத்து இளவரசனாம். மன்னன் இல்லாச் சமயம் பார்த்துச் சேடிப் பெண்ணுடன் சல்லாபம் செய்தானாம். சுமந்திரனைக் கொன்ற பிரம்மஹத்தி அவனைத் தொடரும். தாங்கள் கவலைப்பட வேண்டாம், அரசே" என்றது அந்த மூட்டைப்பூச்சி மகிபன்.

     காடாறு மாதத்தை கழிப்பது எப்படி என்று தெரியாத விக்கிரமார்க்க மன்னன் தவியாகத் தவிக்கும்போது, பட்டி என்ற மந்திரியானவன் வணக்கம் செய்து, "சுவாமி....

(இத்துடன் ஏடு நின்றுவிடுகிறது. கதையின் பிற்பகுதி கிடைக்கவில்லை)

******
கலைமகள், ஜுலை 1943
flow1

மகாமசானம் -புதுமைப்பித்தன்

      சாயந்தரமாகிவிட்டால், நாகரிகம் என்பது இடித்துக் கொண்டும் இடிபட்டுக் கொண்டும் போகவேண்டிய ரஸ்தா என்பதைக் காட்டும்படியாகப் பட்டணம் மாறி விடுகிறது. அதிலும் தேகத்தின் நரம்பு முடிச்சுப் போல, நாலைந்து பெரிய ரஸ்தாக்களும், டிராம் போகும் ரஸ்தாக்களும் சந்திக்கும் இடமாகிவிட்டாலோ தொந்தரவு சகிக்கவே முடியாது. ஆபீஸிலிருந்து 'எச்சு'ப் போய் வருpu.piகிறவர்கள், இருட்டின் கோலாகலத்தை அநுபவிக்கவரும் அலங்கார உடை தரித்தவர்கள். மோட்டாரில் செல்லுவதற்கு இயலாத அவ்வளவு செயலற்ற அலங்கார வேஷ வௌவால்கள் எல்லாம்  ஏகமேனியாக, 'எல்லாம் ஒன்றே' என்று காட்டும் தன்மை பெற்றவர்கள் போல் இடித்துத் தள்ளிக்கொண்டு அவரவர் பாதையில் போவார்கள். அன்றும் அம்மாதிரியே போய்க்கொண்டிருந்தார்கள்.
     'ஒற்றைவழிப் போக்குவரத்து' என்ற ஸஞ்சார நியதி வந்ததிலிருந்து உயர்ந்த அடுக்குக் கட்டிடங்களின் உச்சியின் மேல் நின்று கொண்டு பார்த்தால் அங்கே நாகரிகத்தின் சுழிப்புத் தெரியும். கரையைப் பீறிட்டுக் கொண்டு பாயும் வெள்ளத்தை அணைக்கட்டின்மேல் இருந்து கொண்டு பார்த்தால் எப்படியோ, அப்படி இருக்கும்.
     நான் சொல்ல வந்த இடமும் அதுதான். மவுண்ட் ரோட் ரவுண்டாணா. மலைப்பழ மாம்பழக் கூடைக்காரிகளின் வரிசை. அவர்களுக்குப் பின்புறம் எச்சில் மாங்கொட்டையைக் குதப்பித் துப்பிவிட்டு, சீலையில் கையைத் துடைத்துக் கொள்ளும் 'மெட்ராஸ் பறச்சிங்கோ', கைத்தடியோடு 'சிலுமன்' கொடுத்து உலாவிக்கொண்டிருக்கும் காபூலிவாலா, முகம்மதியப் பிச்சைக்காரன், நொண்டிப் பிச்சைக்காரன், குஷ்டரோகப் பிச்சைக்காரன், ராத்திரித் 'தொழிலுக்கு'த் தயாராகும் யுவதி - பாதையின் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு, நிம்மதியாகச் சீவிச் சிங்காரித்துக் கொண்டிருக்கிறாள் அவள் - அப்புறம் நானாவித, "என்ன சார் ரொம்ப நாளாச்சே", "பஸ் வந்துட்டுது", "ஏறு" என்கிற பேர்வழிகள் எல்லாம். அவசரம், அவசரம், அவசரம்...
     அப்பொழுது அவன் ரஸ்தாவின் ஓரத்தில் உள்ள நடைபாதையில் படுத்துச் சாவகாசமாகச் செத்துக் கொண்டிருந்தான்.
     சாவதற்கு நல்ல இடம். சுகமான மர நிழல். வெக்கை தணிந்து அஸ்தமனமாகிவரும் சூரியன். "ஜே ஜே" என்ற ஜன இயக்கம். ராஜ கோலாகலம் என்று தான் சொல்ல வேண்டும்.
     அப்பொழுது அவன் செத்துக் கொண்டிருந்தான்; சாவகாசமாகச் செத்துக் கொண்டிருந்தான்.
     ஜனங்கள் அவ்வழியாகப் போய்க்கொண்டிருந்தார்கள்; வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்குத் தெரியாது; சிலர் தெரிந்து கொள்ள விரும்பவில்லை.
     அவன் கிழட்டுத் துருக்கப் பிச்சைக்காரன். தாடி மிகவும் நரைத்து விட்டது. மேலே அழுக்குப் பிடித்த கந்தை; கையையும் காலையும், மூப்பு போஷணையின்மை இரண்டும் சேர்ந்து சூம்பவைத்துவிட்டன. கால், காய்த்துப் போன கால்.
     அவன் பக்கத்தில் தலைமாட்டில் இன்னும் ஒரு பிச்சைக்காரன் உட்கார்ந்து கொண்டிருந்தான். தகரக் குவளையில் தண்ணீரை எடுத்துக் கிழவனுடைய தலையைத் தூக்கி ஒரு மிடறு தண்ணீர் கொடுக்க முயன்றும் முடியாமையால் வாயை மட்டிலும் நனைத்தான். தன்னுடைய கைகளைத் தலைக்குக் கீழ்க் கொடுத்துத் தூக்க முயன்றான். படுத்துக் கிடந்த கிழவன், அதாவது செத்துக் கொண்டிருந்த கிழவன், தன் பக்கத்தில் காருண்ய ஸ்தல ஸ்தாபனத்தார் நிதுத்தி வைத்திருந்தார்களே, அந்தத் தகரப் பீப்பாய், அதை, பிடித்தபடியே தலையை நிமிர்த்த முயன்றான். அவன் கண்களில் ஒளி மங்கி விட்டது. அவன் உதடு நீலம் பூத்துவிட்டது. அவன் கதையெல்லாம் இன்னும் சிறிது நேரத்திற்குள் சம்பூர்ணமாகிவிடும். ஆனாலும் அவன் அந்தத் தகரப் பீப்பாயைப் பிடித்த பிடிப்பை விடவில்லை. பிடிப்பில் ஓர் ஆறுதல் இருந்தது; பலம் இருந்தது. பக்கத்தில் யாரோ தண்ணீர் கொடுக்கிறார்கள் என்ற பிரக்ஞை இருந்ததாக மட்டும் தெரியவில்லை. தண்ணீர் வந்தது; குடிக்க வேண்டும்; அவ்வளவுதான் அவன் மனதில். அதற்குமேல் நினைக்க விருப்பமில்லை; தேவையில்லை; திராணி இல்லை.
     அப்போது டிராம் வண்டி ஏறுவதற்காக இரண்டு பேர் வந்தார்கள். இரண்டு பேரும் நின்றார்கள். ஆனால் டிராம் வரவில்லை. இருவரில் ஒருவர் தகப்பனார்; முப்பது வயசு. இரண்டாவது நபர், சிறு பெண் குழந்தை. நாலைந்து வயசு இருக்கும். அவரைப் பார்த்தால் தம் குடும்பத் தேவைகளைத் திருப்தி செய்துகொள்வதற்குக் கஷ்டப்படுபவராகத் தெரியவில்லை. குழந்தை சாதாரணக் குழந்தை; ஆனால், தாய் சிறிதே கவனமுள்ளவள் என்பது தெரியும்படி, சுத்தமாக, படாடோ பம் இல்லாமல் அலங்கரித்து விடப்பட்டிருந்தது.
குழந்தையும் தகப்பனாரும் டிராமுக்குக் காத்துக் கொண்டு நின்றார்கள். குழந்தை அவருடைய ஆள்காட்டி விரலைப் பிடித்துக் கொண்டு நின்றது. நின்று கொண்டிருந்தவர்களுக்கு எதிர்ச் சாரியிலுள்ள கூடைக்காரி வைத்திருந்த மாம்பழம் நல்லதாகத் தெரிந்தது.
     "குஞ்சு, நீ இங்கேயே நிக்கணும். அப்பா அந்தப் பக்கமாப் போய் ஒனக்கு மாம்பழம் வாங்கிண்டு வருவாளாம்" என்றார் அவர்.
     "ஆகட்டும்" என்றது குழந்தை.
     "நீ ரோட்டிலே இறங்கி வரவே படாது, தெரியுமா? வந்தாப் பழமில்லை" என்றார் அவர். 'குழந்தையைத் தனியே விடக்கூடாது' என்று அவர் மனசு குறுகுறுத்தது.
     "இங்கியே நிக்கறேன் அப்பா" என்று கையடித்துக் கொடுப்பது போல அவரை அந்தப் பக்கம் போகும்படித் தூண்டியது குழந்தை.
     மாம்பழ வேட்கையில் அவர் குழந்தையைத் தனியாக விட்டுவிட்டு ரஸ்தாவைக் குறுக்காகத் தாண்டி எதிர்ப்புறமாகச் சென்றார்.
     குழந்தை தைரியமானது, இதற்கு முன் இவ்வாறு நின்று பழகியது என்றுதான் சொல்ல வேண்டும். முதல் பயத்தில் அப்பாவைத் தொடர்ந்த கண்கள் அப்புறம் பராக்குப் பார்ப்பதில் ஒன்றிவிட்டன.
     சிவப்பு மோட்டார் ஒன்று அதன் கண்களைக் கவர, அந்தப் பக்கமாகவே பார்த்துக் கொண்டு நின்றது. அவசரப்பட்ட ஜீவன் ஒன்று குழந்தையைக் கவனிக்காமல் நடந்து போகையில் இடித்துவிட - அதன் மனம் எந்த உலகில் ஓடுகிறதோ - குழந்தை தள்ளாடியது. இடிபடாமல் நிற்பதற்காகச் சிவப்பு மோட்டார் பார்க்கும் ஆசையையும் துறந்து நடைபாதை ஓரத்தில் உள்ள சுவர் அருகில்போய் நின்று கொண்டது. சுவரில் ஒன்றி நின்று சாய்ந்து கொண்டு தன்னுடைய பைக்குள் கைபோட்டபடி நாலு திசைகளிலும் சுற்றிப் பார்த்தது.
     செத்துக் கொண்டிருக்கும் அக்கிழவனும் அவனுடைய சாவுக்கு உதவி செய்துகொண்டிருக்கும் வேறு ஒருவனும் அதன் கண்ணில்பட, 'அதென்ன வேடிக்கை?' என்று பார்க்கத் தயங்கித் தயங்கி அவர்கள் பக்கம் நெருங்கியது.
     'பால் குடிக்க மாட்டேன்' என்றால் அம்மா தன்னை மட்டும் வற்புறுத்தி டம்ளரில் வைத்துக் கொண்டு தன்னிடம் மல்லுக்கட்டி அதைப் புகட்டுவதும், அப்பா, 'வேண்டாம்' என்றால் பேசாதிருந்து விடுவதும் அதற்குத் தெரியும். பெரியவர்களுக்கு 'வேண்டாம்' என்று சொல்ல உரிமையுண்டு; அம்மாவானாலும் அவருக்குப் பயப்படுவாள் என்பது அந்தக் குழந்தையின் சித்தாந்தம். அதற்கு அது வேடிக்கையாக இருந்தது. பெரியவர்களுக்கு டம்ளரில் புகட்டுவதா என்று அதற்கு ஆச்சரியம்.
     இந்த வேடிக்கையைப் பார்க்க அந்த இரண்டு அநாதைகளின் அருகில் சென்றது குழந்தை. கிழவனுடைய தலைப் பக்கம் நின்றது.
     இளைய பிச்சைக்காரன் மறுமுறையும் கிழவன் தொண்டையை நனைக்க முயன்று கொண்டிருந்தான். அவனுக்குக் கைப்பழக்கம் போதாது. அவன் ஊற்ற முயன்றபோது, ஒன்று அதிகமாகக் குபுக்கென்று விழுந்து கழுத்தை நனைத்தது; அல்லது டம்ளரிலிருந்து விழவேயில்லை.
     கிழவன் தகரப் பீப்பாயைப் பிடித்துக் கொண்டு செத்துக் கொண்டிருந்தான்.
     குழந்தை நீரைப் பருகுவதற்கு வாயைக் குவிய வைப்பதுபோல வைத்துக் கொண்டு, தன்னுடைய கையில் உள்ள கற்பனை டம்ளரைப் பிடித்தபடி, "மெதுவா, மெதுவா" என்றது.
     தண்ணீர் வார்த்தவன் ஏறிட்டுப் பார்த்தான். "அம்மா, நீ இங்கே நிக்கப்படாது; அப்படிப் போயிரம்மா" என்றான்.
     "ஏன்?" எனது குழந்தை.
     "இவுரு சாவுறாரு" என்றான் பிச்சைக்காரன்.
     "அப்படீன்னா?"
     "சாவுறாரு அம்மா, செத்துப்போறாரு" என்று தலையைக் கொளக்கென்று போட்டுக் காண்பித்தான்.
     அது குழந்தைக்கு நல்ல வேடிக்கையாகத் தோன்றியது.
     "இன்னும் ஒருதரம் அப்படிக் காட்டு" என்றது.
கூட்டம் கூடிவிடக் கூடாது' என்ற பயத்தில் பிச்சைக்காரன் வாயைப் பொத்திக் கொண்டு கையை மட்டும் காண்பித்தான்.
     கிழவனுடைய தலைமாட்டில் அவனுடைய அந்திமக் கிரியைக்காக என்பதைக் குறிக்க இரண்டு தம்படிகள் போடப்பட்டிருந்தன. அவை குழந்தையின் கண்களில் பட்டன.
     "பட்டாணி வாங்கிக் குடேன்" என்று படுத்துக் கிடந்தவரைச் சுட்டிக் காட்டியது.
     தனக்குப் பிடித்தது மற்றவர்களுக்கும் பிடித்திருக்க வேண்டும் என்ற நம்பிக்கை அதற்கு.
     எங்கே பெரியவர் யாராகிலும் வந்து தன் மீது மோசடிக் குற்றம் சாட்டப்போகிறார்களோ என்ற பயத்தில் நாலு பக்கமும் சுற்றிப் பார்த்துக் கொண்டு, "ஒங்கிட்டே துட்டு இருக்கா?" என்று கேட்டான் பிச்சைக்காரன்.
     "இந்தா, ஒரு புதுத் துட்டு" என்று குழந்தை அவன் வசம் நீட்டியது.
     அவன், குழந்தை கொடுத்ததைச் சட்டென்று வாங்கிக் கொண்டான். அது ஒரு புதுத் தம்படி. கோடீசுவரர்கள் அன்னதான சமாஜம் கட்டிப் பசிப்பிணியைப் போக்கிவிட முயலுவதுபோல், கடலில் காயம் கரைத்து வாசனையேற்றிவிட முயலுவதுபோல் குழந்தையும் தானம் செய்துவிட்டது.
     பஞ்சடைந்த கண்ணோடு கிழவன் தகரப் பீப்பாயைப் பிடித்துக் கொண்டு செத்துக் கொண்டிருந்தான். ஜனங்கள் போய்க் கொண்டிருந்தார்கள்; வந்து கொண்டிருந்தார்கள்.
     இந்த நிலையில் அவசரமாகப் போய்க்கொண்டிருந்த நபர் ஒருவரின் கையிலிருந்து ஓரணாச் சிதறிக் கீழே விழுந்தது. அது கூட நினைவில்லாமல் அவரும் நடந்து கொண்டு கூட்டத்தில் மறைந்தார். அவ்வளவு அவசரம். உட்கார்ந்திருந்த பிச்சைக்காரன் அதைக் கவ்வியெடுத்தான். ஒருவரும் பார்க்கவில்லையேயென்று சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டான்.
     "நீ போம்மா" என்று குழந்தையைப் பார்த்து மீண்டும் ஒரு முறை சொல்லிப் பார்த்தான்.
     குழந்தை, "மாட்டேன்" என்று காலைப் பரப்பிக்கொண்டு நின்றது. முகத்தை வலித்து 'அழகு' காட்டியது.
     "பாவா, கொஞ்சம் பாலு வாங்கியாறேன்" என்று சொல்லிக் கொண்டு இளம் பிச்சைக்காரன் எழுந்து எதிர்ச்சாரி ஓட்டலை நோக்கி நடந்தான்.
     இது கிழவன் காதில் படவில்லை. அவன் தகரப் பீப்பாயைப் பிடித்துக் கொண்டு செத்துக் கொண்டிருந்தான்.
     குழந்தைக்கு அவனை நன்றாகப் பார்க்க முடிந்தது. அருகில் போய் நின்று கொண்டு வேடிக்கை பார்த்தது. இப்பொழுது விரட்டுவதற்குச் 'சின்னப் பூச்சாண்டி' இல்லையல்லவா? தனக்குப் பக்கத்தில் குழந்தை நிற்பது கிழவனுக்குப் பிரக்ஞை இல்லாததால் தெரியவில்லை. அவன் ஓட்டைப் பீப்பாயைப் பிடித்துக் கொண்டிருந்தான். அவனும் ஒரு பெரிய "ஓட்டை ஒடசல்" ஜந்துதானே! குழந்தைக்கு அவனுடைய மூஞ்சி, தாடி, அவன் வாயைத் திறப்பது எல்லாம் புதுமை. அவனுடைய நீலம் பார்த்த உதட்டில் ஓர், ஈ வந்து உட்கார்ந்தது; இரண்டாவது ஈ வந்து உட்கார்ந்தது; அதை ஓட்ட அவன் வாயைத் திறந்து உதட்டைக் கோணுவது குழந்தைக்கு வேடிக்கையாக இருந்தது. என்ன நினைத்ததோ மெதுவாகப் "பாவா" என்று இளம்பிச்சைக்காரனைப் போலக் கூப்பிட்டுப் பார்த்தது. உள்ளுக்குள் பயம், பூச்சாண்டி எழுந்து உட்கார்ந்து கொள்ளுமோ என்று.
     படுத்துக் கிடந்தவன் கண்கள் விரியத் திறந்திருந்தன; கண்ணின் மணியின் மேல் ஓர் ஈ வந்து உட்கார்ந்து...
     "என்னடி, அங்கே போய் நிக்கறே; ஒன்னை எங்கெயெல்லாம் பார்க்கிறது?" என்ற ஓர் அதட்டல் கேட்டது. பேரம் தர்க்கமாகி, தம் கணக்குக்குக் கூடைக்காரியை ஒப்புக் கொள்ளவைத்து இரண்டு மாம்பழங்களை வாங்கி வந்தவரின் நியாயமான கோபம் அது.
     "இல்லேப்பா, அது பாவாப் பூச்சாண்டி; பாத்துண்டிருந்தேன்" என்றது குழந்தை ஓடி வந்து கொண்டே.
     சிலர் மட்டும் ஏறிட்டுப் பார்த்தார்கள்.
     குழந்தையைத் தூக்கிக் கொண்டார் அவர்; அது பழத்தைத் தூக்க முடியாமல் தூக்கி மோந்து, "வாசனையா இருக்கே!" என்று மூக்கருகில் வைத்துத் தேய்த்துக் கொண்டது.
*****
கலைமகள் , டிசம்பர், 1941
flow1

ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன்

"கமலம்! அந்தக் கூஜாவிலே தண்ணீர் எடுத்தா! வெற்றிலைச் செல்லம் எங்கே? வச்சது வச்ச இடத்தில் இருந்தால்தானே?" என்று முணுமுணுத்தார் முருகதாசர்.

     கையில் இருக்கும் கோரைப் பாயை விரிப்பதே ஒரு ஜாலவித்தை. நெடுநாள் உண்மையாக உழைத்தும் பென்ஷன் கொடுக்கப் படாததால் அது நடு மத்தியில் இரppண்டாகக் கிழிந்து ஒரு  கோடியில் மட்டிலும் ஒட்டிக் கொண்டிருந்தது. அதை விரிப்பது என்றால் முதலில் உதறித் தரையில் போட்டுவிட்டு, கிழிந்து கிடக்கும் இரண்டு துண்டுகளையும் சேர்த்துப் பொருத்த வைக்க வேண்டும். அதுதான் பூர்வாங்க வேலை. பின்பு, விடுதலை பெற முயற்சிக்கும் அதன் கோரைக் கீற்றுகள் முதுகில் குத்தாமல் இருக்க ஒரு துண்டையோ அல்லது மனைவியின் புடவையையோ அல்லது குழந்தையின் பாவாடையையோ எதையாவது எடுத்து மேலே விரிக்க வேண்டும்.

     முருகதாசரைப் பொறுத்தவரை (அது அவரது புனை பெயர்) அது இரண்டு பேர் செய்ய வேண்டிய காரியம்.

     மறுபடியும், "கமலா!" என்று கூப்பிட்டார்.

     சமையல் + உக்ராண + ஸ்நான அறை மூன்று நான்கு கட்டுகள் தாண்டி, துண்டாக, அலாதியாக இருப்பதால் இவருடைய பாய் விரிப்புக் கஷ்டங்கள் அந்த அம்மையாருக்கு எட்டவில்லை.

     சென்னையில் 'ஒட்டுக் குடித்தனம்' என்பது ஒரு ரசமான விஷயம். வீட்டுச் சொந்தக்காரன், குடியிருக்க வருகிறவர்கள் எல்லாரும் 'திருக்கழுக்குன்றத்துக் கழுகு' என்று நினைத்துக் கொள்ளுவானோ என்னமோ!

     'குடித்தனக்காரர் குடியிருக்க இரண்டு ரூம் காலி' என்று வெளியில் போட்டிருந்த போர்டை நம்பித்தான் முருகதாசர் வீடு வேட்டையின் போது அங்கே நுழைந்தார்.

     உள்ளே வீட்டின் பாக வசதிதான் விசித்திரமாக இருந்தது. முன்பக்கம், ஒற்றைச் சன்னல் படைத்த ஒரு சிற்றறை. அதற்கப்புறம் எங்கோ பல கட்டுகள் தாண்டி மற்றொரு அறை. அதுதான் சமையல் வகையராவுக்கு. முதல் அறை படிக்க, படுக்க, நாலு பேர் வந்தால் பேச இவை எல்லாவற்றிற்கும் பொது இடம். முதலில், முருகதாசர் பொருளாதாரச் சலுகையை உத்தேசித்தே அதில் குடியிருக்கலாம் என்று துணிந்தார். அதனால், தமக்கும் தம் சகதர்மிணிக்கும் இப்படி நிரந்தரமான 'பிளவு' இருக்கும் என்று சிறிதும் எட்டி யோசிக்கவில்லை; மேலும் அவர் யோசிக்கக் கூடியவரும் அல்லர்.

     பக்கத்தில் இருந்த அரிக்கன் விளக்கை எடுத்துக் கொண்டு அவர் சமையல் பகுதியை நோக்கிப் பிரயாணமானார்.

     இடைவழியில், குழாயடியில், உள்ள வழுக்குப் பிரதேசம். அடுத்த பகுதிக்காரர் விறகுக் கொட்டில் முதலிய விபத்துக்கள் உள்ள 'பிராட்வே' யை எல்லாம் பொருட்படுத்தாது, ஒருவாறு வந்து சேர்ந்தார். சமையல் அறை வாசலில் ஒரே புகைமயம் "கமலம்!" என்று கம்மிய குரலில் கூப்பிட்டுக் கொண்டு உள்ளே நுழைந்தார்.

     உள்ளே புகைத் திரைக்கு அப்பாலிருந்து, "வீடோ லட்சணமோ! விறகைத்தான் பார்த்துப் பாத்து வாங்கிக் கொண்டு வந்தியளே! ஒங்களுக்கிண்ணு தண்ணீலே முக்கிக் கொடுத்தானா? எரியவே மாட்டுதில்லை? இங்கே என்ன இப்பொ? விறகு வாங்கின சீரைப் பாத்து மகிழ வந்திட்டியளாக்கும்?" என்று வரவேற்புப் பத்திரம் வாசிக்கப் பட்டது.

     "தீப்பெட்டியை இப்படி எடு! அதுக்காகத்தான் வந்தேன்!" என்று நடைப் பக்கமாகப் பின் நோக்கி நடந்தார்.

     "இங்கே குச்சியுமில்லை, கிச்சியுமில்லை! அலமுவெ தீப்பெட்டி வாங்க அனுப்பிச்சேன். மண்ணெண்ணெய் விளக்கே நீங்கதான் துடைச்சிக் கொள்ளணும்!" என்றாள் கமலம்.

     "குழந்தையை அந்தியிலே வெளியிலே அனுப்பிச்சையே, நான் வந்த பிறகு வாங்கிக் கொள்ளப் படாதா?" என்று அதட்டினார் முருகதாசர்.

     "ஆமாம், சொல்ல மறந்தே போயிட்டுதே... செட்டியார் வந்து விட்டுப் போனார், நாளை விடியன்னை வருவாராம்!" என்றாள் கமலா.
     முருகதாசர் இந்தப் பாசுபதாஸ்திரத்தை எதிர்பார்க்கவில்லை.

     "வந்தா, வெறுங்கையை வீசிக்கிட்டுப் போக வேண்டியதுதான்! வாரத்துக்கு நேரம் காலம் இல்லை?" என்று முணுமுணுத்துக் கொண்டே வெளியேற முயற்சித்தார்.

     "அங்கே, எங்கே போயிட்டிஹ, ஒங்களைத்தானே! கொஞ்சம் நல்லெண்ணை வாங்கிட்டு வாருங்களேன்!"

     "எங்கிட்ட இப்பொ துட்டுமில்லே, காசுமிலே!" என்று திரும்பி நின்று பதிலளித்தார் முருகதாசர்.

     "அதுவும் அப்படியா! இன்னா இந்த மிளவொட்டியிலே(*மிளகுப் பெட்டி - ஐந்தரைப் பெட்டி) மூணு துட்டு (*ஓர் அணா; ஒரு துட்டு - நான்கு பாண்டி நாட்டு தம்பிடி) இருக்கு. அதெ எடுத்துகிட்டுப் போங்க!"

     "வந்ததுக்கு ஒரு வேலையா? அங்கே ஒரு பாடு எழுதித் தொலைக்கணும். இங்கே உனக்கு இப்பத்தான் எண்ணெ புண்ணாக்கு - பகலெல்லாம் என்ன செய்துகிட்டு இருந்தே? இருட்ன பொறவா என்னை வாங்குறது! எல்லாம் நாளைக்குப் பார்த்துக்கலாம்!"

     "சோம்பல் வந்தா சாத்திரமும் வரும். எல்லாம் வரும். ஏன் அண்ணைக்குப் போய் வாங்கிட்டு வரலியா? எல்லாம் உங்களுக்குத்தான். இப்பத்தான் அப்பளக்காரன் வந்து கொடுத்துட்டுப் போனான்; பிரியமா சாப்பிடுவேளென்னு சொன்னேன். பின்னே அந்தச் சின்னக் கொரங்கே என்ன இன்னும் காணலே! போனப்ப போனதுதான்; நீங்கதான் சித்த பாருங்களேன்!"

     இவ்வளவிற்கும் அவர் இருந்தால்தானே! விறகுப் பிரதேசத்தைத் தாண்டி வழுக்குப் பிரதேசத்தை எட்டிவிட்டார். புகையையும் பேச்சையும் தப்பி வந்தால் போதும் என்றாகி விட்டது. முருகதாசரின் ஆஸ்தான அறையின் ஒரு விசித்திரம் என்னவென்றால் சென்னையில் 'லைட்டிங் டைம்' அட்டவணையைக் கூட மதிக்காமல் அது இருண்டுவிடும்.

     இம்மாதிரி மண்ணெண்ணெய் நெருக்கடி ஏற்படாத காலங்களில் அந்த அறைக்குத்தான் முதலில் இராத்திரி. ஆனால் எண்ணெய் நெருக்கடிக் காலங்களில் சிவபெருமானின் ஒற்றைக் கண் போன்ற அந்த அறையின் சன்னல், எதிர்ப்பக்கம் நிற்கும் மின்சார விளக்குக் கம்பத்திலிருந்து கொஞ்சம் வெளிச்சத்தைப் பிச்சை வாங்கும். கார்ப்பொரேஷன் தயவு வரும் வரை, ஸ்ரீ முருகதாசர் வேறு வழியில்லாமல் தெரு நடையில் நின்று அலமுவின் வருகையை எதிர்நோக்கியிருக்க வேண்டியதாயிற்று.

     முருகதாசர் வானத்தை அளக்கும் கதைகளைக் கட்டுவதில் மிகவும் சமர்த்தர்; 'சாகாவரம் பெற்ற' கதைகளும் எழுதுவார். அந்தத் திறமையை உத்தேசித்து, ஒரு விளம்பரக் கம்பெனி மாதம் முப்பது ரூபாய்க்கு வானத்தையளக்கும் அவரது கற்பனைத் திறமையைக் குத்தகை எடுத்துக் கொண்டது. அதனால் அவர் வீர புருஷர்களையும், அழியாத சித்திரங்களையும் எழுத்தோவியமாகத் தீட்டுவதை விட்டு விட்டு, சோயாபீன் முதல் மெழுகுவர்த்தி வரையிலும் வெளிநாடுகளிலிருந்து வந்து குவியும் பண்டங்களின் காவியங்களை இயற்றிக் கொண்டிருக்கிறார். 'டபாஸா' வீரிய மாத்திரையின் மீது பாடிய பரணியும், தேயிலைப் பானத்தின் சுயசரிதையும், அந்தத் தமிழ் தெரியாத வெள்ளைக்காரனையும் இவர்மீது அனுதாபம் காட்டும்படி செய்துவிட்டன. அதற்காகத்தான் அந்த முப்பது ரூபாய்!

     வீட்டு எதிரில் நிற்கும் மின்சார விளக்கின் உதவியைக் கொண்டும் பிள்ளையவர்களால் அலமுவைக் கண்டுபிடிக்க இயலவில்லை. வெற்றிலை, வேலை, குழந்தை வராத காரணம். எல்லாம் அவரது மனத்தில் கவலையைக் கொண்டு கொட்டின. நடையிலிருந்து கீழே இறங்கிச் சந்தின் மூலை வரை சென்று பார்த்து வரலாமா என்று புறப்பட்டார்.
     பக்தி மார்க்கத்தில் ஏகாக்கிரக சிந்தையைப் பற்றிப் பிரமாதமாக வர்ணிக்கிறார்கள். மனம் ஒரே விஷயத்தில் லயித்துவிட்டால் போதுமாம். பிள்ளையவர்களைப் பொறுத்த வரை அவர் இந்தப் 'பணம்' என்ற மூன்றெழுத்து மந்திரத்தில் தீவிர சிந்தை செலுத்துபவர். பணத்தை வாரிச் சேர்த்துக் குபேரனாகி விட வேண்டும் என்ற எண்ணம் ஒன்றுமில்லை. கவலையில்லாமல் ஏதோ சாப்பிட்டோ ம் வேலை பார்த்தோம் வந்தோம் என்று இருக்க வேண்டும் என்பதற்காக எத்தனையோ வித்தைகளையெல்லாம் செய்துவிட்டார். அவருடைய குடும்பத்தின் வரவு செலவு திட்டத்தை மட்டிலும் அவரால் எப்பொழுதும் சமன் செய்ய முடியவில்லை. நிதி மந்திரியாக இருந்தால் பட்ஜெட்டில் துண்டுவிழுவதற்குப் பொருளாதாரக் காரணங்கள் காட்டிவிட்டு, உபமான்யங்களைத் தைரியமாகக் கேட்கலாம். கவலையில்லாமல், கொஞ்சமும் உடம்பில் பிடிக்காமல் கடன் கேட்டுப் புறப்படுவதற்கு முடியுமா? குடும்பச் செலவு என்றால், சர்க்கார் செலவாகுமா?

     கவலை இருக்கப்படாது என்ற உறுதியின் பேரில்தான் நம்பிக்கை என்ற இலட்சியத்தை மட்டும் திருப்தி செய்விக்க, 'சாகாவரம் பெற்ற' கதைகளை எழுதுவதைக் கொஞ்சம் கட்டி வைத்துவிட்டு, இந்த 'லிப்டன் தேயிலை', காப்பி கொக்கோ ஆகியவற்றின் மான்மியங்களை அவர் எழுத ஆரம்பித்தார். ஒரு பெரிய நாவல் மட்டிலும் எழுதிவிட்டால் அது ஒரு பொன் காய்க்கும் மரமாகிவிடும் என்று அவர் நெஞ்சழுத்தத்துடன் நினைத்த காலங்களும் உண்டு. இப்பொழுது அது ஒரு நெடுந்தூர இலட்சியமாகவே மாறிவிட்டது.

     முன்பாவது, அதாவது நம்பிக்கைக் காலத்தில், ஏதோ நினைத்ததைக் கிறுக்கி வைக்கக் காகிதப் பஞ்சமாவது இல்லாமல் இருந்தது. அப்பொழுது ஒரு பத்திரிக்கை ஆபீஸில் வேலை. ஆனால், இப்பொழுது காசு கொடுத்து வாங்காவிட்டால் முதுகில் தான் எழுதிக் கொள்ள வேண்டும். முருகதாசர் நல்ல புத்திசாலி. அதனால்தான் முதுகில் எழுதிக் கொள்ளவில்லை. யாராவது ஒரு நண்பரைக் கண்டுவிட்டால் போதும், தமது தூர இலட்சியத்தைப் பற்றி அவரிடம் ஐந்து நிமிஷமாவது பேசாமல் அவரை விடமாட்டார். நண்பர்கள் எஸ்.பி.ஸி.ஏ (ஜீவஹிம்சை நிவாரண சங்கம்) யின் அங்கத்தினர்களோ என்னவோ, அத்தனையும் சகித்துக் கொண்டிருப்பார்கள்.

     சந்தில் திரும்பிப் பார்த்தால் அலமுவின் ராஜ்யம் நடந்து கொண்டிருந்தது.

     "ஏட்டி என்ன! நீயோ, உன் லட்சணமோ?" என்று ஆரம்பித்தார் முருகதாசர்.

     ஒரு ரிக்ஷா வண்டி ஏர்க்கால் பக்கத்தில் வண்டிக்காரன் உட்கார்ந்து கொண்டிருக்கிறான். அலமு, ஒரு சுண்டெலி மாதிரி ஜம்மென்று மெத்தையில் உட்கார்ந்திருக்கிறாள். ரிக்ஷாக்காரனுடன் ஏதோ நீண்ட சம்பாஷணை நடந்து கொண்டிருந்தது போலும்!

     "ஏட்டி!" என்றார் முருகதாசர் மறுபடியும்.

     "இல்லையப்பா? நீ இனிமே என்னை அலமுன்னு கூப்பிடுவேன்னியே!" என்று சொல்லிக் கொண்டே வண்டியிலிருந்து இறங்கப் பிரம்மப் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தாள்.

     "தீப்பெட்டி எங்கடீ?" என்றார் முருகதாசர்.

     "கடைக்காரன் குடுக்கமாட்டேங்கறான். அப்பா!"

     "குடுக்காதெ போனா நேரே வீட்டுக்கு வாரது! இங்கே என்ன இருப்பு?"

     "அப்படிக் கேளுங்க சாமி! நம்ம கொளந்தென்னு மெரட்டாமே சொல்லிப் பாத்தேனுங்க. வீட்டுக்கு வண்டியிலே கொண்டாந்து வுடணுமுண்ணு மொண்டி பண்ணுதுங்க. எனக்குக் காலுலே சுளுக்கு. அந்தச் சின்னாம்பயலே காணும்..." என்று நீட்டிக் கொண்டே போனான் ரிக்ஷாக்காரன்.
     "அப்பா, அவன் பங்கஜத்தே மாத்ரம் கூட்டிக்கிட்டே போரானே!" என்றாள் அலமு. பங்கஜம் எதிர்வீட்டு சப்ரிஜிஸ்திரார் குழந்தை. அது ரிக்ஷாவிலும் போகும், மோட்டாரிலும் போகும்! அந்த விஷயம் ரிக்ஷாவுக்குத்தான் புரியுமா, குழந்தைக்குத்தான் புரியுமா?

     "அலமு! ராத்திரிலே கொழந்தைகள் ரிக்ஷாவிலே போகப்படாதுடீ! எறங்கி வா!" என்று குழந்தையைத் தூக்கிக் கொண்டு வாடிக்கைக் கடைக்காரனிடம் சென்றார் முருகதாசர்.

     பிள்ளையவர்கள் கடையை எட்டு முன்பே கடைக்காரன், "சாமி! இந்த மாதிரியிருந்தா கட்டுமா? போன மாசத்திலே தீர்க்கலியே! நானும் சொல்லிச் சொல்லிப் பார்த்தாச்சு. பாக்கியை முடிச்சு, கணக்கெத் தீர்த்துடுங்க! எனக்குக் குடுத்துக் கட்டாது. நான் பொளைக்க வந்தவன்!" என்றான்.

     "நானும் பிழைக்க வந்தவன் தான். எல்லாரும் சாகவா வருகிறார்கள்! மின்னே பின்னேதான் இருக்கும். நான் என்ன கொடுக்க மாட்டேன் என்று சொல்லுகிறேனா?"

     "போங்க சாமி! அது ஒண்ணுதான் பாக்கி! ரூ.2.5.4 ஆச்சு. எப்ப வரும்?"

     "தீப்பெட்டியெக் குடு, சொல்றேன்!"

     "பெட்டிக்கென்ன பிரமாதம்! இந்தாருங்க, எப்ப வரும்?"

     "எப்பவா? சம்பளம் நாளைக்குப் போட்ருவாங்கன்னு நினைக்கிறேன்; நாளை இல்லாவிட்டால் திங்கள்கிழமை."

     "திங்கட்கிழமை நிச்சயந்தானே? நான் சீட்டுக் கட்டணும்!" என்றான்.

     "சரி, பார்க்கிறேன்!" என்று திரும்பினார் தாசர்.

     "பார்க்கிறேன்னு சொல்ல வேண்டாம். நிச்சயமாக வேண்டும்!"

     ஒரு கவலை தீர்ந்தது... அதாவது திங்கட்கிழமை வரை.

     பாதி வழியில் போகையில், "அப்பா!" என்றது குழந்தை.

     அவர் எதையோ நினைத்துக் கொண்டிருந்ததால், தன்னையறியாமல் கொஞ்சம் கடினமாக, "என்னடி!" என்றார்.

     "நீதான் கோவிச்சுக்கிறியே, அப்பா! நான் சொல்லமாட்டேன். போ!"

     "கோவம் என்னடி, கோவம்! சும்மா சொல்லு!"

     "அதோ பார். பல்லு மாமா!"

     முருகதாசரின் நண்பர் சுப்பிரமணிய பிள்ளைக்குக் கொஞ்சம் உயர்ந்த பற்கள். அவை வெளியே நீண்டு கொண்டு, தமது இருப்பை, அனாவசியமாக உலகத்திற்கு அறிவித்துக் கொண்டிருந்தன. அதனால் அலமு அவருக்கு இட்ட காரண இடுகுறிப் பெயர் அது.

     "எங்கடி!"

     "அதோ பார், வீட்டு நடேலே! என்னை எறக்கிவிடப்பா!" என்று அவரது கையிலிருந்து வழுக்கி விடுவித்துக் கொண்டு, வீட்டிற்கு ஓட ஆரம்பித்தது.

     "மெதுவா! மெதுவா!" என்றார் பிள்ளை; குழந்தையா கேட்கும்?

     "மாட்டேன்!" என்றது. அதற்கப்புறம் ஏக களேபரம். பாவாடை தடுக்கிற்றோ என்னமோ? அலமு வலுக்கட்டாயமாக அங்கப் பிரதக்ஷணம் செய்ய ஆரம்பித்தாள்.
     பிள்ளையவர்கள் ஓடிப் போய்க் குழந்தையை வாரி எடுத்தார். ஆனால் இவர் பதட்டத்திற்கு ஏற்ப அங்கு குழந்தைக்கு ஒன்றும் ஏற்படவில்லை.

     "தோளுக்கு மேலே தொண்ணூறு, தொடச்சுப் பார்த்தா ஒண்ணுமில்லே!" என்று பாடிக் கொண்டு குழந்தை எழுந்தது.

     "என்ன ஸார், குழந்தையை நீங்க இப்படி விடலாமா?" என்று சொல்லிக்கொண்டே சுப்பிரமணியம் அவர்கள் பக்கம் வந்தார்.

     "என்ன ஸார் செய்யட்டும்! என்ன சொன்னாலும் கேட்கிறதில்லை என்ற உறுதி மனசிலே ஏறிப்போயிருக்கு. வெளிலே புறப்பட்டாச்சா, அப்புறம் தேடிக்கொண்டு பின்னோட பத்துப் பேர். இவளைக் கடைக்கனுப்பிச்சுட்டா தாயார். இவ்வளவு நேரம் அந்த ரிக்ஷாக்காரனோடு தர்க்கம் - என்ன செய்கிறது! வாருங்கள் ஸார். உள்ளே! ஒன் மினிட்! விளக்கை ஏத்துகிறேன்."

     குழந்தை அலமு அதற்குள் வீட்டிற்குள், "பல்லு மாமா வந்துட்டார்!" என்று பொதுவாக உச்ச ஸ்தாயியில் விளம்பரம் செய்து கொண்டு ஓடிவிட்டாள்.

     "குழந்தை துருதுருவென்று வருகிறதே! பள்ளிக்கூடத்திற்காவது அனுப்பக் கூடாதா?" என்றார் நண்பர்.

     "ஆமாம் ஸார். தொந்திரவு சகிக்கலே. அங்கேதான் கொண்டு தள்ளணும். வயசு கொஞ்சம் ஆகட்டுமே என்று பார்க்கிறேன்" என்றார் முருகதாசர். விளக்குத் திரியை உயர்த்திக் கொண்டே.

     "நேத்து பீச்சுக்குப் போயிருந்தேன்! சுந்தரத்தைப் பார்த்தேன்..." என்று ஆரம்பித்தார் சுப்பிரமணிய பிள்ளை.

     "அந்த ராஸ்கல் வந்துட்டானா! என்றைக்கும் அவன் தொல்லைதான் பெரிய தொல்லையாக இருக்கிறது. இங்கே வந்தான்னா ஆபீஸுக்கு வந்து யாருக்காவது வத்தி வச்சுட்டுப் போயிடரது...மின்னே வந்தப்போ, என்ன எழவு சொன்னானோ, அந்த ஆர்ட்டிஸ்ட் 'பதி' இருந்தானே அவனுக்குச் சீட்டுக் கொடுக்க வழி பண்ணிட்டான்..." என்று படபடவென்று பேசிக்கொண்டே போனார் முருகதாசர்.

     "அப்படிப் பாத்தா உலகத்திலே யார்தான் ஸார் நல்லவன்! அவன் உங்களைப் பத்தி ரொம்ப பிரமாதமாக அல்லவா கண்ட இடத்திலெல்லாம் புகழ்ந்து கொண்டிருக்கிறான்?"

     "சவத்தெ தள்ளுங்க, ஸார்! பேன் பார்த்தாலும் பார்க்கும். காதை அறுத்தாலும் அறுக்கும். அவன் சங்காத்தமே நமக்கு வேண்டாம்... நீங்க என்ன சொல்ல வாயெடுத்தீர்கள்?"

     "அதுதான். உங்களெப் பத்திதான் ஒரு இங்கிலீஷ்காரனிடம் பிரமாதமாகப் பேசிக்கொண்டிருந்தான்..."

     "இவ்வளவுதானா! கதையை எழுதரேன் அல்லது கத்தரிக்காயை அறுக்கிறேன், இவனுக்கென்ன?..."

     அதே சமயத்தில் வெளியிலிருந்து "முருகதாஸ்! முருகதாஸ்!" என்று யாரோ கூப்பிட்டார்கள்.

     "அதுதான்! அவன் தான் வந்திருக்கிறான் போலிருக்கிறது! பயலுக்கு நூறு வயசு..."

     "'சைத்தான் நினைக்கு முன்னால் வந்து நிற்பான்' என்பதுதான்!" என்று முணுமுணுத்தார் முருகதாசர்.

     பிறகு அவர் எழுந்து நின்று வெளியில் தலையை நீட்டி, "யாரது?" என்றார்.

     "என்ன? நான் தான் சுந்தரம். இன்னும் என் குரல் தெரியவில்லையா?" என்று உரத்த குரலில் கடகடவென்று சிரித்துக் கொண்டு உள்ளே நுழைந்தார் வந்தவர். அவருடைய சிரிப்புக்கு இசைந்தபடி காலில் போட்டிருக்கும் ஜோடு தாளம் போட்டது.
     "என்ன சுந்தரமா? வா! வா! இப்பொத்தான் உன்னைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். நீயும் வந்தாய்! காப்பி போடச் சொல்லட்டுமா? அலமு! அலமு!" என்று உரக்கக் கூவினார் முருகதாசர்.

     எங்கிருந்தோ, "என்னப்பா!" என்று அலமுவின் குரல் வந்தது.

     "அம்மாவை மூணு கப் காப்பி போடச் சொல்லு. சீக்கிரம் ஆகணும்!"

     "நீ என்ன பத்திரிகையையே விட்டுவிட்டாயாமே! இப்பத்தான் கேள்விப்பட்டேன்."

     "வயிற்றுப் பிழைப்பிற்கு எதில் இருந்தால் என்ன? சீலைப்பேன் குத்துகிறதும் ஒரு 'பிஸினஸ்' ஆக இருந்து, அதில் ஒரு 'சான்ஸ்' கிடைத்தால் அதையும் விட்டா வைக்கிறது? நான் பத்திரிகையை விட்டுவிட்டா கதை எழுதாமல் இருந்துவிடுவேனோ? ஒரு பெரிய நாவலுக்கு 'பிளான்' போட்டிருக்கேன். தமிழன்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால், எனக்குக் காகிதம் வாங்கவாவது காசு கிடைக்கும். அதில் 'சென்ட்ரல் ஐடியா' என்ன தெரியுமா?..."

     "நீங்க நேற்று பொருட்காட்சிக்குப் போனீர்களாமே!" என்று பேச்சை மாற்ற முயன்றார் சுப்பிரமணிய பிள்ளை. இந்த விஷயத்தைத் தொட்டுவிட்டால், முருகதாசர் கீறல் விழுந்த கிராமபோன் பிளேட் மாதிரி விடாமல் திருப்பித் திருப்பி அதையே கதைத்துக் கொண்டிருப்பார்!

     "அப்பா! காப்பியாயிட்டுது. நீதான் வந்து எடுத்துக்கிட்டுப் போகணும். சுடுது!" என்று சொல்லிக் கொண்டு, நிலைப்படி இரண்டு பக்கத்தையும் தொட்டவண்ணமாய் ஒற்றைக் காலை ஆட்டிக் கொண்டு நின்றாள் அலமு.

     "அம்மா எங்கே?"

     "அம்மா சாதத்தெ வடிச்சுக்கிட்டிருக்கா, அப்பா!"

     "சரி! இதோ வாரேன், போ!"

     "வாயேன்!"

     "வாரேன்னா, போடீ உள்ளே!"

     "காப்பி ஆறிப்போயிடும், அப்பா!"

     "இதோ ஒரு நிமிஷம்!" என்று சொல்லிக் கொண்டு உள்ளே சென்றார்.

     "மாமா! நீ என்ன கொண்டாந்தே!" என்று கேட்டுக் கொண்டு, சுப்பிரமணிய பிள்ளை மடியில் உட்கார்ந்து, கழுத்திலிருக்கும் நெக்டையைப் பிடித்து விளையாட ஆரம்பித்தாள் அலமு.

     "அதெப் பிடித்து இழுக்காதே! மாமாவுக்கு கழுத்து வலிக்கும்!" என்றார் சுந்தரம் பிள்ளை.

     "வலிக்காதே!" என்று மறுபடியும் ஆரம்பித்தாள்.

     முருகதாசரும் மேல் துண்டின் உதவியால் ஒரு செம்பை ஏந்திய வண்ணம் உள்ளே நுழைந்தார்.

     "என்னப்பா, மூணு டம்ளர் கொண்டாந்தே! எனக்கில்லையா?"

     "உனக்கென்னடி இங்கே! அம்மாகூடப் போய்ச் சாப்பிடு."

     "மாட்டேன்" என்று ஒரு டம்ளரை எடுத்து வைத்துக் கொண்டது குழந்தை.

     முருகதாசர் காப்பியை ஆற்றி, சுந்தரம் கையில் ஒரு டம்ளரைக் கொடுத்தார்.

     சுந்தரம் வாங்கி மடமடக்கென்று மருந்து குடிப்பது போல் குடித்து விட்டு, "காப்பி வெகு ஜோர்!" என்று சர்டிபிகேட் கொடுத்தார்.

     மற்றொரு டம்ளர் சுப்பிரமணிய பிள்ளையிடம் கொடுக்கப்பட்டது. "மாமா! எனக்கில்லையா?" என்று அவரிடம் சென்று ஒண்டினாள் அலமு.

     "வாடி, நாம ரெண்டு பேரும் சாப்பிடுவோம்!" என்றார் முருகதாசர்.
     "மாமாகூடத்தான்!" என்றது குழந்தை, சுப்பிரமணியபிள்ளை கையிலிருந்த டம்ளரில் அலமுவைக் குடிக்கச் செய்தார்.

     பாதியானதும், "போதும்!" என்றது குழந்தை.

     "இந்தாருங்க ஸார்!" என்று மற்ற டம்ளரையும் நீட்டினார் முருகதாசர்.

     "வேண்டாம்! வேண்டாம்! இதுவே போதும்!" என்றார் சுப்பிரமணிய பிள்ளை.

     "நான்சென்ஸ்!" என்று சொல்லிவிட்டு, குழந்தை எச்சிற்படுத்தியதைத் தாம் வாங்கிக் கொண்டார் தாசர்.

     "நேரமாகிறது, மவுண்டில் ஒரு நண்பரைப் பார்க்க வேண்டும்!" என்று எழுந்தார் சுந்தரம். "அதற்குள்ளாகவா! வெற்றிலை போட்டுக் கொண்டு போகலாம்!" என்றார் முருகதாசர்.

     "கையில் எடுத்துக் கொண்டேன். நேரமாகிறது! அப்புறம் பார்க்கிறேன்!" என்று சொல்லிக் கொண்டு வெளியேறினார் சுந்தரம்.

     கையில் இருந்த புகையிலையை வாயிற் ஒதுக்கிவிட்டு, சிறிது சிரமத்துடன் தமக்கு நேரமாவதைத் தெரிவித்துக் கொண்டார் சுப்பிரமணிய பிள்ளை.

     தொண்டையைச் சிறிது கனைத்துக் கொண்டு, "சுப்ரமண்யம், உங்களிடம் ஏதாவது சேஞ்ஜ் இருக்கிறதா? ஒரு மூன்று ரூபாய் வேண்டும்!" என்றார் முருகதாசர்.

     "ஏது அவசரம்!"

     "சம்பளம் போடலே: இங்கு கொஞ்சம் அவசியமாக வேண்டியிருக்கிறது...திங்கட்கிழமை கொடுத்துவிடுகிறேன்!"

     "அதற்கென்ன!" பர்ஸை எடுத்துப் பார்த்துவிட்டு "இப்போ என் கையில் இது தான் இருக்கிறது!" என்று ஓர் எட்டணாவைக் கொடுத்தார் சுப்பிரமணியம்.

     "இது போதாதே!" என்று சொல்லி, அதையும் வாங்கி வைத்துக் கொண்டார் முருகதாசர்.

     "அப்பொ..." என்று மீண்டும் ஏதோ ஆரம்பித்தார்.

     "பார்ப்போம்! எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கிறது" என்று சுப்பிரமணியமும் விடை பெற்றுச் சென்றார்.

     முருகதாசர் தமது ஆஸ்தான அறையின் சிம்மாசனமான பழைய கோரைப் பாயில் உட்கார்ந்து கொண்டு, அந்த எட்டணாவைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டு, நீண்ட யோசனையில் ஆழ்ந்திருந்தார்.

     "அங்கெ என்ன செய்யறீங்க?" என்று மனைவியின் குரல்!

     "நீதான் இங்கே வாயேன்!"

     கமலம் உள்ளே வந்து, "அப்பாடா!" என்று உட்கார்ந்தாள். அவர் கையில் இருக்கும் சில்லறையைப் பார்த்துவிட்டு, "இதேது?" என்றாள்.

     "சுப்பிரமணியத்திடம் வாங்கினேன்!"

     "உங்களுக்கும்... வேலையில்லையா?" என்று முகத்தைச் சிணுங்கினாள் கமலம். பிறகு திடீரென்று எதையோ எண்ணிக் கொண்டு "ஆமாம், இப்பத்தான் நினைப்பு வந்தது. நாளைக்குக் காப்பிப் பொடியில்லை. அதெ வச்சு வாங்கி வாருங்களேன்!" என்றாள்.

     "அந்தக் கடைக்காரனுக்காக அல்லவா வாங்கினேன்! அதைக் கொடுத்துவிட்டால்?"

     "திங்கட்கிழமை கொடுப்பதாகத்தானே சொன்னீர்களாம்!"

     "அதற்கென்ன இப்பொழுது!"

     "போய்ச் சீக்கிரம் வாங்கி வாருங்கள்!"

     "திங்கட்கிழமைக்கு?"

     "திங்கட்கிழமை பார்த்துக் கொள்ளுகிறது!"


மணிக்கொடி, 15-01-1937
flow1